சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும் எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்
உடனடியாக வீட்டுக்காவலில் வைக்க இராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹொஸ்னி முபாரக்கை விடுதலை
செய்யும்படி கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதன்படி
அவர் நேற்று விடுதலையாவார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்டால்
உடனடியாக வீட்டுக்காவலில் வைக்கப்படுவார் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
எனினும் தோரா சிறையில் இருக்கும் முபாரக் எங்கு வீட்டுக்காவலில் வைக்கப்படுவார்
என்பது குறித்து எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. முபாரக் முன்னர் சிகிச்சை
பெற்றுவந்த இரு இராணுவ மருத்துவமனைகளில் ஒன்றில் அவர் தடுத்துவைக்கப்படுவார் என்று
நம்பப்படுகிறது. எவ்வாறாயினும் 2011 மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்ட க்காரர்கள்
கொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் முபாரக் மீதான வழக்கு விசாரணை நிலுவையில்
உள்ளது. அவர் மீதான அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
இடம்பெறவுள்ளது.