டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பீட்டர்சன் முழங்கால் காயம் காரணமாக
இந்த முறை ஐ.பி.எல். போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார். களத்தடுப்பு
பயிற்சியில் ஈடுபட்ட போது அவருடைய வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து
இன்று ஒக்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில்
இருந்து அவர் விலகியுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்
“பீட்டர்சனுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ஸ்கேன் பரிசோதனை மூலம் உறுதி
செய்யப்பட்டுள்ளது. முழங்காலில் உள்ள குருத்தெலும்பில் அடிபட்டிருக்க
வாய்ப்புள்ளது.
அதனால் காயத்தின் தீவிரம் குறித்து கண்டறியவும், நிபுணத்துவம் பெற்ற
மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்காகவும் பீட்டர்சன் நாடு திரும்புகிறார்.
அவருக்கு 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படலாம். அதனால் ஐ.பி.எல். உள்ளிட்ட
அனைத்துப் போட்டிகளில் இருந்தும் பீட்டர்சன் விலகியுள்ளார் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.