வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

கலித்தொகை கூறும் நகைச்சுவைக் காட்சிகள்

கலித்தொகை கூறும் நகைச்சுவைக் காட்சிகள்

முனைவர் மா. தியாகராசன்

சங்ககால அக இலக்கிய நூல்களில் கலித்தொகை தனிச்சிறப்பு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் சொற்சுவையால், பொருட்சுவையால் உயர்ந்து நிற்கின்றது.

பண்டைத் தமிழர் கண்ட ஐந்தினைப் பாகுபாட்டின் மேன்மையும் அவர்தம் ஒழுக்கமும் விழுப்பமும் இந்நூலைக் கற்பார்க்குத் தெள்ளிதின் பிலனாகும். கலிப் பாவகையுள் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இந்நூல் தேன் சிந்தும், இனிய சொற்களாலும் வானார்ந்த கற்பனைகளாலும் தெளிந்த உவமைகளாலும் சீரசால் உருவகங்களாலும் உயர்ந்தோங்கி நிற்கின்றது.

‘நகையே அழுகை இனிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப’ என்னும் நூற்பாவைக் கொண்டு பார்க்கும் போது, எட்டு வகையான மெய்ப்பாடுகளும் தமிழ் நாட்டில் நெடுங்காலமாகவே பகுக்கப்பட்டிருந்த மெய்ப்பாடுகள் என்பதை உணர முடிகிறது.

இந்த எண் வகைச் சுவையுள் முதற் சுவடியாக அமைந்திருப்பது நகைச்சுவையே யாகும். நகைச்சுவை நயம் மிக்க கவிதைகளைப் படிப்பவர்கள் தங்கள் மனக் கவலையை மறந்து நகைச்சுவை இன்பத்தில் நுழைந்து திளைத்து மகிழ்வார்கள். நகைச்சுவை களிப்பூட்டுகின்ற விருந்தாக மட்டுமின்றி மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாகவும் விளங்குகின்றது. நகைச்சுவை அன்றும் இன்றும் மக்களிடையே செல்வாக்குடையதாக இருப்பதால்தான், ‘வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்னும் புதிய பொன்மொழியும் நம் தமிழில் பூத்துள்ளது.

தலைவி ஒருத்தி சிறுமியாய் இருந்தபோது தன் தோழியுடன் தெருவில் மணலால் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது முரட்டுத்தனமான சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியர் அருகில் வந்து, அவர்கள் மணல் வீட்டைத் தன் கால்களால் கலைத்துச் சிதைத்து விட்டு ஓடி விட்டான். மற்றொரு நாள் தலைவி சிறுமியாய் விளையாடிக் கொண்டிருந்த போது அதே சிறுவன் அவள் கூந்தலைப் பற்றி இழுத்து அவள் தலையில் சூடியிருந்த பூமாலையைப் பறித்து வீசினான். அவர்களுக்குரிய வரிகளையுடைய பந்தினை எடுத்துக் கொண்டு ஓடினான்.

இங்ஙனம் சிறிய வயதில் தலைவியின் உள்ளம் வருந்துமாறு பல செயல்களைச் செய்த அந்தச் சிறியவன் முரட்டுத்தனமானவன். கட்டுக்கடங்காதவன் இன்று வளர்ந்த கட்டிளங்காளையாக இருக்கின்றான்.

அந்தத் தலைவியும் பருவப் பெண்ணாகப் பூத்துப் பொலிந்திருந்தாள். தலைவன் காளையாகவும் தலைவி பூங்கொடியாகவும் பருவம் எய்திய பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலா நிலை ஏற்பட்டது. தலைவி விளையாடுவதற்கு அனுப்பப்படாமல் வீட்டிலேயே இருந்த சூழ்நிலை. அப்போது அந்தத் தலைவன் தலைவியைக் காண விரும்பினாள்.

காதல் உணர்வுடன் தலைவியின் வீட்டிற்குச் சென்றான். வீட்டின் தலைவியும் அவன் தாயும் இருந்தார்கள். அவன் தலைவியின் தாயைப் பார்த்து ‘அம்மா தாகமாக இருக்கிறது பருகுவதற்கு நீர் வேண்டும்’ என்று ஒரு வழிப்போக்கனைப் போல கேட்டான். அப்போது தலைவியின் தாய் தங்கக் குவளையில் தண்ணீர் தந்து, இதனை அவனுக்கு அருந்துவதற்கு அளித்து வா என்று அனுப்பி வைத்தாள்.

தண்ணீர்க் குவளை ஏந்திய தலைவியும் தன்னை அறியாமல் தலைவனைக் காணுகின்ற ஆவலை உள்ளத்துள் தேக்கி நீர் கொண்டு சென்றாள். தலைவன் முன் நின்றாள். அப்போது தலைவன் தண்ணீர் வாங்குபவன் போல வளையல்கள் அணிந்த அவள் கரங்களைப் பற்றினான்.

தலைவனின் எதிர்பாராத இச்செய்கையால் அதிர்ச்சியுற்ற தலைவி மருட்சியுற்று, ‘அம்மா இவன் என்ன செய்தான் பார்த்தாயா?’ என்று உரக்கக் கூவினாள். அவள் குரல் கேட்ட தாய் என்ன நடந்தது என்று அறியாமல் அலறிக் கொண்டு ஓடி வந்தாள்.

தலைவன் செய்த செயலைத் தலைவி தன் தாயாரிடம் கூறினால். தலைவன் நிலை என்னவாகும்? தலைவி சிந்தித்தாள் தன் உள்ளங் கவர்ந்தவனை அவள் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் அன்னையைத் தான் கூறி அழைத்ததற்குரிய காரணத்தையும் கூற வேண்டும்.

இந்த நிலையில் தலைவி தன் திறமையால் அன்னையை ஏமாற்றினாள். ‘அம்மா இவன் நீர் பருகும்போது நீர் விக்கினான் அதனால் தான் அஞ்சி அலறிக் குரல் கொடுத்தேன் என்று கூறினாள். இதனைக் கேட்ட அன்னையும் எதிரில் நின்ற இளைஞனைப் பார்த்துக் ‘கவனமாக நீர் அருந்தக்கூடாதா?’ எனக் கேட்டுப் பின்னர் அவன் முதுகைத் தன் கரங்களால் தேய்த்துச் சரி செய்தாள். அப்போது, அந்தத் தலைவன், கள்வன் மகன் தன் கடைக்கண்ணால் தலைவியைக் கொல்வது போல ஒரு பார்வை பார்த்து மெல்ல ஒரு புன்னகை செய்தான்.

இந்த நிகழ்ச்சியைத் தலைவி தன் தோழியிடம் எடுத்துக் கூறினாள்.

பினவரும் பாடலில் இந்த அழகிய நாடகம் அரங்கேறியுள்ளது. இதோ பாடல்.

‘சுடர்த் தொடீஈ கேளாய் தெருவில்

நாம் ஆடும்

மணற் சிற்றில் காலிடன் சிதையா

அடைச்சிய

கோதை பரிந்து வரிப்பந்து

கொண்டாடி

நோக்க செய்யும் சிறுபட்டி மேலோர்

நாள்

அன்னையும் யானும் இருந்தேமா,

‘இல்லிரே!

உண்ணுநீரு வேட்டடேன் என

வந்தாற்கு அன்னை

டர்பொற் சிரகத்தால் வாக்கிச்

சுடுரிழாய்

உண்ணுநீர் ஊட்டிவா என்றான்

என யானும்

தன்னை அறியாது சென்றேன்

மற்று என்னை

வளை முன் கைபற்றி நலியத்

தெருமந்திட்டு

‘அன்னாய் இவன் ஒருவன் செய்தது

காண்’ என்றேனா

அன்னை அலறிப் படர்தரத்

தன்னையான்

உண்ணுநீர் விக்கினான் என்றேனா?

அன்னையும்

தன்னைப் புறம்பழித்து, நீவ, மற்று

என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான்போல்

நோக்கை நகைக்கூட்டம்

செய்தான் அக்கள்வன் மகன்’

(கலி 51 குறிஞ்சிக் கலி 15)

இப்பாடலில் அலறி வந்த அன்னையிடம் தன் காதலனைக் காட்டிக் கொடுக்க விரும்பாத தலைவி அன்னையை ஏமாற்றுவதற்கு ஒரு பொய் கூறினாள். அவர் கூறிய பொய் தலைவனுக்குத் தெரியும். ஆனால் அவள் கூறிய பொய்யும் அன்னைக்கு தெரியாது. அவர்கள் காதல் கொண்ட இளைஞர்கள் என்பதும் தெரியாது. எதுவுமே தெரியாத அன்னை தன் மகள் கூறியதைக் கேட்டு அந்தத் தலைவன் நீர் விக்கினான் எனப் பிறழ் உணர்ந்து அவன் முதுகைத் தடவிக் கொடுக்கும் போது அந்தத் தலைவனுக்கும் தலைவிக்கும் மட்டுமா நகைச்சுவை உணர்வு தோன்றியிருக்கும்? அந்தப் பாடலைப் படிக்கும் நமக்கெல்லாம் கூட நகைச்சுவை உணர்வு ஏற்படுகிறது.

காலஞ்சாலா இளமையோன்

வயின்

ஏமஞ்சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்றிரு

திறத்தால்

தன்னொடும் அவளொடும் தருக்கிய

புணர்த்துச்

சொல்லெதிர் பெறா அன் சொல்லி

இன்புறுதல்

புல்லித் தோன்றும் கைக்கினைக்

குறிப்பே

(தொல்காப்பியம் பொருள் : 50)

என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு ஏற்ப, கலித்தொகைப் பாடலில் ஒரு காட்சி தலைவி மறுமொழி ஒன்றும் கூறாவிட்டாலும் அவள் எழில்நலத்தைப் புனைந்துரைத்து அவளிடம் கைக்கிளைக் காதல் கொண்டு சில சொற்கள் சொல்லி இன்புறும் தலைவன் ஒருவன் கூறும் சொற்கள் நமக்கு நகைச்சுவை விருந்தளிக்கின்றன.

‘பெண்ணே நீ சிற்பக்கலை வல்லவன் செதுக்கிய பாவையோ? அழகிய பெண்களின் உறுப்பு நலன்களை எல்லாம் ஒன்றி திரட்டி நான்முகன் உருவாக்கிய அழகியோ? கூற்றுவன் உலகத்தவர் மீது வெறுப்பு கொண்டு தானே எடுத்து வந்த பெண் வடிவமோ?’ நீ இவ்வாறு அழகே உருவாக நடந்து வீதி வழியாக வந்தால் நின்னைப் பார்க்கும் இளைஞர்கள் உயிரையெல்லாம் நின் அழகு பறித்துவிடும் என்பதை உணராமல் நீ விதி வழியே வருகிறாய் என் போன்ற இளைஞர்கள் படும் துன்பம் அறியாமல் மறு மொழியும் கூறாமல் நடந்து செல்லும் பெண்ணே இங்ஙனம் எங்கள் உயிர் பறிக்கின்ற உன் மீதும் தவறு இல்லை.

உன்னைத் தெருவில் நடமாட அனுப்பி வைத்த நின் பெற்றோர் மீதும் தவறு ஒன்றும் இல்லை. தெருவில் மதங்கொண்ட யானை ஒன்றினை நீர்நிலைக்குக் கொண்டு செல்லும் போது ‘மதயானை வருகிறது விலகிச் செல்லுங்கள்’ என்று பறையறைந்து அறிவிப்பது போல நீ தெருவில் நடந்து வரும் வேளையிலும் பறையறிந்து நின்னைக் காணாமல் கண்களை மூடிக் கொள்ளுமாறு அறிவிப்புச் செய்யாத அரசனே தவறு உடையவன்’ என்று தலைவன் கூறினான்.

மதங்கொண்ட யானை போலத் தலைவியின் அழகும் காண்பவரைக் கலங்க வைக்கும் பேரழகு என்று தலைவன் கூறியது நகைச்சுவையுணர்வு மிக்க கற்பனையாகும்.

‘நீயும் தவறு இலை

நின்னைப்புறங்கடைப்

போதரவிட்ட நுமரும் தவறு இலர்

நிறையழி கொல்யானை

நீர்க்குவிடடாங்குப்

பறையறைந்து அல்லது சொல்லற்க

என்னா

இறையே தவறு உடையான்’ (கலித்தொகை 56 குறிஞ்சிக் கலி 20)

என்பது குறிஞ்சிக் கலியில் அமைந்த நகைச்சுவை.

அகப்பொருளை அழகுபடப் புனைந்துள்ள கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகளும் ஆங்காங்கே அமைந்து கற்போர்க்குச் சுவை யூட்டுகின்றன.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»