வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010


வசூலில் சாதனை படைக்கும்~2012' தொடர்பான ஊகங்கள்

வசூலில் சாதனை படைக்கும்~2012' தொடர்பான ஊகங்கள்

சாரதா மனோகரன்

இன்று உலகத்திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொ ண்டிருக்கும் திரைப்படத்தின் தமிழாக்கம் ‘2012 ருத்ரம்’ ஆகும். இத்திரைப்படம் வெளியான பின்னர் மக்கள் மனதில் எழும் பொதுவான கேள்வி 2012 இல் உலகம் அழியுமா? என்பதே!

இத்திரைப்படத்தின் கருப்பொருள் குறித்து யாரும் அதிகம் சிந்திப்பதில்லை. ஆனால் இக்கருப்பொருள் மிகவும் சுவாரசியமானது. தென்னமெரிக்காவின் ஆதி நாகரிகங்களுள் ஒன்றான மாயா நாகரிகத்தைச் சேர்ந்த மக்களின் நாட்காட்டியை ஆய்வு செய்து பார் த்த போதே 2012 ஆம் ஆண்டு டிசெ ம்பர் 21 ஆம் திகதி உலகம் அழியப் போவது எதிர்வு கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.

மாயா மக்கள் இற்றைக்கு ஐயாயி ரம் ஆண்டுகளுக்கு முன்னரே சூரியத் தொகுதி பற்றியும் அதனது சுழற்சிகள் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். மாயர்களைப் பொறுத்த வரையில் எண்களினடிப்படை யிலேயே யாவும் கணிக்கப்படுகின்றன. அத்துடன் சூரியனை அடிப்படையாகக் கொண்டே கணிப்புகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

நட்சத்திர மண்டலத்தின் ஒரு நாள் எனப்படுவது, பூமியைப் பொறுத்தவரையில் 25,625 வருடங்களாகும். மாயர்களின் நாட்காட்டி இதனை 5 காலகட்டங்களாகப் பிரிக்கிறது.

இப்போது நாம் இந்த ஐந்தாவது காலகட்டத்தின் இறுதிப் பகுதியினுள் காலடியெடுத்து வைத்திருக்கின்றோம். 2012, டிசெம்பர் 21 ஆம் திகதியின் பின்னர் புதியதோர் யுகத்தினுள் மனித சமூகம் காலடி பதிக்குமென மாயர்கள் எதிர்வு கூறுகின்றனர். சூரியனானது நட்சத்திர மண்டலத்தின் மையப்பகுதியால் புதுப்பிக்கப்படுவதாகவும், இச்செயற்பாடு 5125 வருடங்களுக்கொருமுறை நடைபெறுமெனவும் அவர்கள் கணித்துள்ளனர்.

அவர்களின் கணிப்பின்படி 2012 இலும் இத்தகையதொரு செயற்பாடு நடைபெறுமெனவும், அதன் காரணமாக புவியின் காந்தப்புலங்களிலும் குறிப் பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுமெனவும் மாயர்களின் நாட்காட்டியை மேற்கோள் காட்டிப் பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அந்நாட்காட்டியின் எதிர்வு கூறலி னடிப்படையில், இன்னும் புரியாத புதிராகக் காணப்படும் கரும் ஈர்ப்புமையம் (blaணீk holலீ) மற்றும் சூரியன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளன.

கரும் ஈர்ப்புமையம் எனப்படுவது உயர் அடர்த்தியுடைய திண்மச் செறிவு ஆகும். அது உயர் ஈர்ப்பு சக்தியையுடைய கரிய பொருளாகக் காணப்படும். அண்டவெளியிலே காணப்படும் கோள்களும் நட்சத்திரங்களும் தமது சக்தியை இழந்தபின்னர் அத்திண்மச்செறிவினால் ஈர்க்கப்படும்.

விண்ணிலே செலுத்தப்படும் விண்வெளிக்கப்பல் கூடத் தனது பாதை மாறி, கருங்குழியொன்றினால் ஈர்க்கப்பட்டால் அது மீளத்திரும்பாது. இந்த கரும் ஈர்ப்புமையங்களின் ஈர்ப்புசக்தி காலத்துடன் அதிகரித்தபடியே இருக்கும்.

உயர் ஈர்ப்புசக்தியுடைய இத்தகைய கரும் ஈர்ப்புமையங்களுள் ஒன்றும் சூரியன், மற்றும் புவி ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும் போது கரும் ஈர்ப்புமையத்தின் காந்த மற்றும் ஈர்ப்பு விசைகளால் புவியும் சூரியனும் வெகுவாகப் பாதிக்கப்படலாமென விஞ்ஞானிகள் சம்பந்தப்படாத ஆய்வுகள் எதிர்வு கூறுகின்றன.

சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் சூரிய நிலநடுக்கத்தைத் தோற்றுவிக்கும் வாய்ப்புகளும் உண்டெனக் கூறப்படுகிறது. அத்துடன் காந்தவிசைகளின் தாக்கத்தால் பூமியின் துருவங்கள் இடம் மாறலா மெனவும், அதனால் பாரியளவிலான நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலைகள், எரிமலை வெடிப்புகள் போன்ற அனர்த்தங்கள் இடம்பெறலாமெனவும் கூறப்படுகிறது.

துருவங்களின் இடப்பெயர்ச்சி யானது விஞ்ஞானிகளால் ஏற்று க்கொள்ளப்பட்ட விடயமாகவிரு ந்தாலும், 2012 இல் நிகழுமா வென்பது கேள்விக் குறியாகவே யிருக்கின்றது.

சூரியனின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஒவ்வொரு 5125 வருடங்களுக்கொருமுறையும் புவியின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுமென மாயர்கள் நம்பினர். இந்தக் கொள்கை யினடிப்படையில் அவர்கள் தமது நாட்காட்டியைத் தயாரித்தனர். அந்நாட்காட்டி, கி.மு. 3113 தொடக்கம் கி.பி. 2012 வரையான 5125 வருடங்களைக் கொண்டது.

1992 - 2000 வரையான காலப்பகுதியில் மனிதன் பல முன்னேற்றங்களைக் காண்பானெனவும், பிரபஞ்சம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வானெனவும் பூமி சரியாகப் பாதுகாக்கப்படாமல் விடப்பட்டு பல இயற்கை அனர்த்தங்கள் உருவாகலாமெனவும் எதிர்வு கூறினர்.

இவர்கள் சூரிய கிரகணங்களை மிகவும் துல்லியமாக எதிர்வு கூறியிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இடம்பெற்ற, தற்போது இடம்பெறும் சடுதியான அனர்த்தங்களும், ஏனைய சூழல் பிரச்சினைகளும் அவர்களது எதிர்வுகூறலை உண்மையாக்கி விடுமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

புவியிலிருந்து 50 மில்லியன் மைல் களுக்குமப்பால், கோள் -கீ எனப் பெயரிடப்பட்ட புதிய கோளொன்றை 1983 ஆம் ஆண்டு நாசா அனுப்பிய விசேட வானியல் செய்மதி புகைப்படமெடுத்தது. 2008 ஆம் ஆண்டு கோள் - கீ இனை ஜப்பான் புகைப்படமெடுத்ததன் மூலம் நாசாவின் புகைப்படத்தை உறுதி செய்தது.

2011 அளவில் பூமியிலுள்ளோருக்கு இரண்டு சூரியன்கள் இருப்பது போல கோள் - கீ தென்படுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. இந்நிகழ்வு கூடப் புவியில் மாற்றத்தை ஏற்படுத்தலாமெனச் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய காலத்தில் வாழ்ந்த எதிர்வுகூறல் வல்லுநரான நொஸ்ராடமஸ் முதல் நவீன விஞ்ஞான ஆய்வாளர்கள் வரை இனி வரும் காலங்களில் பூமியில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகலாமென எதிர்வு கூறுகின்றனர்.

பூமியில் நடைபெற்ற பல நிகழ்வுகளை நொஸ்ட்ராடமஸ் எதிர்வு கூறியிருந்தார். அவற்றில் பல மிகவும் ஜிxலியமான வையாகக் காணப்பட்டன.

09/11 தாக்குதல் எனப்படும் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் மீதான தாக்குதலை குறிப்புகளால் எதிர்வு கூறியிருந்தார். அத்தாக்குதல் நடந்த பின்னர், இணையத்தில் மிகவும் அதிகளவில் தேடப்பட்ட விடயமாக இவரது எதிர்வு கூறல்களே காணப் பட்டன. ஹிட்லர், நெப்போலியன் போன்றோரின் ஆதிக்கம், வீழ்ச்சி, மற்றும் ஏனைய பல வரலாற்று நிகழ் வுகளையும் எதிர்வு கூறியிருந்தார். இவரும் கி.பி. 2012 அளவில் உலகம் பெரிய மாற்றங்களை எதிர்நோக்குமென எதிர்வு கூறகின்றார்.

இ-சிங் எனப்படும் பண்டைய சீன சோதிட முறைமை எதிர் காலத்தை எதிர்வுகூறும் வழிகாட்டியாகக் காணப்படுகிறது.

நாணயங்க ளையோ அல்லது சிறிய தண்டுக ளையோ சுண்டு வதன் மூலம் 6 கோடுகள் வரையப் படும். அவை தடித்த கோடுகளா கவோ அல்லது முறிந்த கோடுகளா கவோ காணப் படும். அவை இரண்டை அடியாகக் கொண்ட எண்முறையைச் சார்ந்த அளவையியலை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு கோடுகளுக்கும் சாத்தியமான நான்கு பெறுமானங்கள் உள்ளன.

அந்த எதிர்வுகூறல் முறைமையானது கணித ரீதியிலான கோலமொன்றை வெளிக்காட்டுவதாக அறியப்பட்டது. இதனை காலத்துடன் ஒப்பிட்டு வரைவு படுத்துகையில் உயர்வுகளையும் தாழ்வுகளையுமுடைய வரைபொன்று பெறப்பட்டது.

வரைபின் உயர்வுகளுக்குரிய காலங்கள், வரலாற்றிலே நாகரிங்களும் அரசுகளும் உச்சத்திலிருந்த காலங்களாகவும் வரைபின் தாழ்வுகளுக்குரிய காலங்கள், வரலாற்றில் அனர்த்தங்கள் நிகழ்ந்த நாகரிகங்கள் மற்றும் அரசுகள் வீழ்ச்சியடைந்த காலங்களாகக் காணப்பட்டன. அவ்வரைபில் கி.பி. 2012 ஆம் ஆண்டும் அத்தகையதோர் தாழ்வை வரைபு காட்டுவதுடன், அவ்வாண்டோடு அந்தக் காலக்கோடும் முடிவடைகிறது.

கலியுகம் ஆரம்பித்து 5000 வருடங்களின் பின்னர் சுவர்ண யுகமொன்று தோன்றுமெனவும் அது 10,000 வருடங்களுக்கு நிலைக்குமெனவும் கிருஷ்ண பகவான் கங்காதேவிக்குக் கூறியதாக பிரம்மவைவர்த்த புராணத்தில் குறிப்பிடப்படுவதாக இந்துக்கள் கூறுகின்றனர். மாயர்களைப் பொறுத்தவரையில் 5 வது காலகட்டம் கி.மு. 3114 இல் ஆரம்பித்தது. இந்துக்களைப் பொறுத்தவரையில் கலியுகம் கி.மு. 3102 இல் ஆரம்பித்தது.

மாயர்களும் இந்துக்களும் தமக்குள் எந்தவித நேரடித் தொடர்புகளுமில்லாமலே 2012 ஆம் ஆண்டு ஒரு புதிய உலகு உருவாகுமென்பதை எதிர்வு கூறியுள்ளனர். கலியுகம் இப்படித்தான் இருக்குமென இந்து மதம் கூறுகிறது. கலியுகத்திலே மக்கள் கோபத்தையும் பொறாமையையும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவே காட்டத் தலைப்படுவர்.

போலி விஞ்ஞானங்களை நம்புவர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுமியல்பு அற்றுவிடும். பல வழிகளிலும் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும். உண்மை, தன் மதிப்பை இழக்கும் துரோகத்தனங்கள் மலிந்து காணப்படும். தர்மம் உதாசீனப்படுத்தப்படும். மது மற்றும் போதை மருந்துகள் மனிதனில் ஆதிக்கம் செலுத்தும், மனித மனம் கட்டுப்படுத்தப்பட முடியாததாகும். இவையாவுமே கலியுகத்தின் வெளிப்பாடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

2012 ஆம் ஆண்டளவில் மலரப் போகும் சுவர்ணயுகமானது, மனிதம் நிறைந்த, நீதிமிக்க, நியாயமான உலகைத் தோற்றுவிக்குமென எதிர்வு கூறப்படுகிறது. இக்காலத்தில் உலகம் புதுவித மாற்றத்துக்குட்படுமெனவும் பணம் தனது மதிப்பை இழக்குமெனவும் இனவேறுபாடுகள் அழிந்து மனிதம் ஒளிர்வு பெறுமெனவும் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் யாவருமே மாற்றம் நடைபெறும் காலத்தை வரையறுத்துக் கூறாவிடினும், ஊகங்களின் பின்னணியில் ஆழ்ந்த கருத்தொன்றை விட்டுச் சென்றிருக்கின்றனர்.

அவர்களது கணிப்பின் படி, மனித சமுதாயம் தொழில்நுட்பம், பணம் யாவற்றையும் மீறிய ஞான மொன்றை அடையுமென எதிர்பார்க்கலாம்.

நாசா விஞ்ஞானிகளுட்பட பல விஞ்ஞானிகள் 2012 இல் உலகம் அழிந்து போவதற்கான சாத்தியக் கூறுகளெதுவுமில்லையெனத் தெரிவிக்கின்றனர். இத்தனை வசதி வாய்ப்புகளையும் ஆராய்ச்சிக்கான வழிவகைகளையும் ஏற்படுத்தித்தந்த நவீன விஞ்ஞானத்துக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட் டுள்ளோம்.

2012 நவம்பர் 13 ஆம் திகதி நடக்கவிருக்கும் சூரிய கிரகணத்தை எம்மால் மிகவும் துல்லியமாகக் கணக்கிட முடியும். ஆனால் உலகம் முடிவுக்கு வரு கிறது. எனும் விடயம் தொடர்பாக விஞ் ஞானத்தால் உதவி புரிய முடி யாது.

யாவற்றுக்கும் மேலாக ‘உலகம் அழியப்போகிறது’ அல்லது ‘உலகத்தின் முடிவு’ எனும் பதங்களின் உண்மை விளக்கத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அவை, ஒரே தடவையில் முழு உலகுமே அழிக்கப்பட்டு விடும் எனும் பொருளைத் தரமாட்டா. எம்முன்னோர்களும் அத்தகையதொரு கருத்தைச் சொல்ல வரவில்லை. 2012 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டம் தொடர்பாக அவர்களால் எதிர்வு கூறப்பட்ட விடயங்களை அவர்கள் எமக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவும் கருத முடியும்.

ஒன்றுடனொன்று தொடர்புபடாத பல சமூகங்கள் ஒரே செய்தியைப் பல்வேறு வகையில் குறிப்புணர்த்தியுள்ளனவென்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். இந்த விடயம் தொடர்பாக வீணே பயந்து, காலத்தை அநியாயமாகக் கழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பேரழிவொன்று நிகழ்ந்தால், அதனைச் செவ்வனே எதிர்கொள்ளக்கூடிய வகையிலான அனர்த்த முகாமைத்துவ, மனிதாபிமான, ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுக்கக் கூடிய வகையில் அரசுகள் தயாராக வேண்டுமென விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.

பூமிக்கும் பூமிக்குச் சமீபமாகவுள்ள பொருட்களுக்குமிடையில் மோதல் நடக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய 2000 ஆம் ஆண்டளவில் பிரித்தானிய அரசு ஒரு ஆணைக்குழுவை அமைத்தது. அவ்வாணைக்குழுவின் கருத்துப்படி, பூமியுடன் பிறபொருளொன்று மோதுவதற்கான வாய்ப்பானது, ஒரு அதிர்ஷ்டலாபச் சீட்டை வெல்லும் வாய்ப்பை விட 750 மடங்கு அதிகமெனக் கணக்கிடப்படுகிறது.

அத்தகைய பொருட்கள் புவியில் மோதினால், பேரழிவுகள் தவிர்க்க முடியாததாகி விடும். 65 மில்லியன் வருடங்களுக்கு முன் அத்தகையதொரு பேரழிவு நிகழ்ந்ததனால்தான் டைனசோர் இனம் அழிந்ததாகக் கருதப்படுகிறது.

கனரி தீவுகளிலுள்ள எரிமலை வெடித்தால் சுனாமி போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாமென எரிமலை ஆய்வு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சில தீவுகளிலுள்ள எரிமலைகள் வெடித்தால் பல மில்லியன் தொன்கள் நிறைவுடைய பாறாங்கற்கள் சமுத்திரத்தினுள் வீசப்படுவதால், சமுத்திர நீர்மட்டம் பல நூற்றுக்கணக்கான அடிகள் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இங்ஙனம் உயரும் அலை கரையை அடைகையில், ஏறத்தாழ 100 அடி உயரம் வரை எழுவதால், கரையினுள்ளே 12 மைல் தூரம் செல்லுமெனவும் கூறப்படுகிறது. கடந்த 5 வருடங்களின் முன்னர், நாம் எதிர்கொண்ட சுனாமி அனர்த்தம் கூட, பூமிக்கு அடியிலுள்ள தட்டுக்களில் ஏற்பட்ட நடுக்கத்தால் உருவானதேயாகும்.

சில எரிமலைகள் வெடிப்பதால் சாம்பல், தூசுக்கள் மற்றும் கந்தகவீரொட்சைட் வாயு ஆகியன வளிமண்டலத்துக்கு வெளிவிடப்படும். இது நீண்டகாலம் நிலைக்கக்கூடிய குளிர்ந்த அலையைத் தோற்றுவிக்கக்கூடியது. இச்செயற்பாடு /யிரினங்களையும் தாவரங்களையும் அழியும் நிலைக்கு இட்டுச் செல்லுமென எதிர்வு கூறப்படுகிறது.

இவை தவிர, காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களும் சூழல் மாசடைதல் பிரச்சினைகளும் கூடப் பாரியளவிலான எதிர்பார்க்கப்படாத விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

2012 தொடர்பான ஊகங்கள் வர்த்தக ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்விடயம் தொடர்பாகத் திரையிடப்பட்ட திரைப்படங்களும், வெளியிடப்பட்ட புத்தகங்களும் வசூலில் சாதனை படைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இவ்வூகங்களை அடிப்படையாகக் கொண்ட புனைகதைகளாகக் காணப்படுகின்றன. அவை மக்கள் மத்தியில் புதிய ஊகங்களை உருவாக்கவும் தவறுவதில்லை.

இவையாவற்றுக்கும் மேலாக நாம் ஒவ்வொருவரும் தனிமனிதனாக எடுக்கும் முடிவுகளே ஒட்டுமொத்தமாக மீண்டும் எம்மைத் தாக்குகின்றனவென்பது மறுக்கமுடியாத உண்மையாகும். பழிக்குப் பழியெனப் பழிவாங்கும் உணர்வு, வெறுப்புணர்வு, இயற்கையை அழித்தல் மற்றும் போட்டி மனப்பாங்கு போன்ற பல எண்ணங்களாலும் செயற்பாடுகளாலும் நாமே எமது அழிவுக்கான நாளைக் குறித்துக்கொண்டவர்களாகிறோம்.

இன்று டைனசோர்களைப் பற்றி நாம் கதைப்பதைப் போல ஆதிக்கம் செய்து அழிந்துபோன மனித இனத்தைப் பற்றி நாளை இன்னொரு இனம் கதைக்கலாம்.

ஒருவரையொருவர் மனிதத்துடன் மதித்து, எமை வாழவைக்கும் பூமிக்கு எந்தவொரு தீங்கையுமிழைக்காது நன்றியுடன் வாழ்வோமாயின் சுபீட்சமான புதியதோர் உலகினுள் எம்மாலும் காலடி பதிக்க முடியும். பூமி, சூரியன் உட்பட, முழுப்பிரபஞ்சமுமே எமது முடிவுக்காகக் காத்திருக்கின்றது. இதுவே இன்றும் புதிராகக் காணப்படும் 2012 ஆம் ஆண்டு பற்றிய எதிர்வு கூறல்கள் சொல்லவரும் உண்மையாகும்.

உணர்வுகள் ஒன்றாகி 2012 இல் மனிதம் நிறைந்த புதியதோர் உலகில் காலடிவைக்க உறுதிகொள்வோமாக!

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •