ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

நடிகை ஜியா மரணம்

நடிகை ஜியா மரணம்

காதலர் மோதலால் ஏற்பட்ட விபரீதம்

இளம் நடிகை ஜியா கான் மும்பை யில் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண் டது மும்பை சினிமா உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மரணத்துக்கான காரணம் பற்றி மும்பை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும் மன அழுத்தம் ஏன் உருவானது என்ற கேள்வி எழுந்தது.

அப்போது நடிகை ஜியாகான் சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரிய வந்தது. வந்தது. சூரஜ் பிரபல நட்சத்திர தம்பதியான ஆதித்ய பாஞ்சோலி - ஜரினா வகாப் தம்பதியின் மகன் ஆவார் ஜியாகான் மரணத்துக்கு முன் கடைசியாக இவர்தான் செல்போனில் பேசி இருக்கிறார்.

இருவருக்கும் இடையேயான பேஸ் புக் உரையாடல்களும் இடம்பெற்று இருந்தன. இதுதொடர்பாக மும்பை பொலிஸார் சூரஜை அழைத்து விசாரித்தனர். பின்னர் விட்டுவிட்டனர். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப் படவில்லை.

ஜியாகான் மரணம் எதிர்பாராமல் நடந்த விபத்து என்று வழக்கு பதிவு செய்து இருந்தனர். அந்த நிலையில் ஒரு வாரம் கழித்து ஜியாகான் எழுதிய கடிதத்தை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்ததாக பொலிஸில் தெரிவித்தனர். அந்தக் கடிதத்தில் 6 பக்கங்களில் காதல் விவகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடிதத்தில் கூறப்பட்ட முழு விவரங்களையும் ஜியாகான் குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவிக்கவில்லை. எனவே இந்த கடிதம் குறித்து தடயவியல் சோதனை நடத்த வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் கடிதத்தில் ஜியாகான் தனது காதலர் பற்றிக் குறிப்பிடுகையில், நான் உன்னுடனான நட்பின் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன்.

ஆனால் நீ என்னை மோசம் செய்து விட்டாய். நம் இருவர் இடையேயான நட்பை நீ பொருட்படுத்தவில்லை. எனவே இந்தக் கடிதத்தை நீ படிக்கும் போது நான் இந்த உலகத்தை விட்டே போய் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜியாகான் எழுதிய கடிதம் சிக்கியிருப்பதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடிதம் உண்மையா? ஜியாகான் கைப்பட எழுதியதா என சோதனை நடத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர். அது உண்மை எனத் தெரிய வந்தால் காதலன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி