மவுஸாக்கலை நீர்த் தேக்கத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி
மவுஸாக்கலை நீர்த் தேக்கத்தில்
மூழ்கி இரு இளைஞர்கள் பலி
(கே. கிரிஷாந்தன்)
மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில்
மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.
மஸ்கெலியா குயின்ஸ்லன் தோட்டத்தில் வசிக்கும் மேற்படி இரு இளைஞர்களும் காலை 9
மணியளவில் விளையாட செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளி யேறியுள்ளனர். அதன் பின்
மவுஸ்ஸாக்கலை நீர்த் தேக்கத்தில் டேனியன் தோட்ட நீர்த்தேக்கப் பகுதியில் நீராட
சென்ற அவர்களில் ஒருவர் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென அவர் நீரில்
மூழ்கும் சூழ்நிலையில் காணப்பட போது அவரை காப்பாற்ற மற்றொருவர் முயற்சி செய்யும்
வேளையில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச மக்கள் தேடும் பணியில் ஈடுபட்ட போது சுமார்
1 மணித்தியாலங்களின் பின் சடலத்தை நீர்த்தேக்கத்திலிருந்து மீட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மஸ்கெலியா குயின்ஸ்லன் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர
யோகேஸ்வரன் (வயது 19), விஜயரட்ணம் கிருஷ்ணகுமார் (வயது 17) என அடையாளம்
காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.