முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினால் அவரது சொந்த இடமான அம்பாந்தோட்டையில் 210 மில்லியன்
டொலர் செலவில் கட்டப்பட்ட இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல விமான நிலையம்
நெற் களஞ்சியமாக மாற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் சிலர் நம்பகரமாகத்
தெரிவித்திருக்கிறார்கள். சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தில்
விமானங்கள் எதுவுமே தரையிறங்குவதில்லை. இதனால் வெறிச்சோடிக் கிடக்கும் விமான நிலைய
கட்டட வசதிகளை நெற்களஞ்சியமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து நெல்
சந்தைப்படுத்தும் சபை ஆராய்ந்து வருவதாகத் தெரிய வருகிறது.
*இரக்க குணம் கொண்டவர்களே
இந்தச் செய்தி உங்களுக்காக....
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணப்பாலையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின்
தந்தையான ஆரோக்கியநாதன் பிரான்ஸிஸ் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். புலிகள்
அமைப்பில் போராளியாக இருந்த இவர் 2009 இல் இராணுவத்தால் பிடிபட்டு
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது தலைப் பகுதியில்
ஏற்பட்டிருந்த கட்டிக்கு சிகிச்சை எடுத்திருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெற போதிய
பணவசதி இல்லாமையாலும் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்திருந்தார்.
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இக் குடும்பத்தினர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை
வசதிகள் எதுவுமின்றிய நிலையில் வாடுகின்றார். அப்பா இறந்துவிட்டார் என்பது கூடத்
தெரியாத 7 வயது நிரம்பிய மூத்தமகள் அப்பா எல்லாம் எனக்கு வாங்கித் தருவார் எனக் கூறி
மகிழும் பிஞ்சு உள்ளத்திடம் எப்படி கூற முடியும் அப்பா இறந்துவிட்டார். மீளெழ
மாட்டார் என... 3 பிள்ளைகளோடு என்னையும் தவிக்கவிட்டு எதற்காக இந்த
முடிவெடுத்தீர்கள் என மனைவி அழுது புலம்புகையில் அழாத கண்களும் ஒருகணம் அழுதே தீரும்.
* பிரசார நடவடிக்கைகளில்
ஈடுபட்ட இவர்களது நம்பிக்கை
க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அனைவருமே தாம் பல்கலைக்கழகம்
போவது உறுதி என்று நினைத்தே பரீட்சை எழுதுவது போல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த
வேட்பாளர்களும் தாம் பாராளுமன்ற உறுப்பினராவது உறுதி என்று நினைத்துக்கொண்டே தேர்தல்
பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பிரதேசத்திலிருந்து தெரிவு
செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையைவிட கூடுதலான எண்ணிக்கையிலேயே
ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துகின்ற போதிலும் அத்தனை பேரும் தாம் எம்.
பி.க்களாவது உறுதி என்று நினைத்துக் கொண்டே தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில்
இருக்கின்றார்கள். உண்மையில் இந்த வேட்பாளர்கள்தான் எத்துணை பாவம்... அவர்களுக்காக
இரக்கப்படுங்கள்.... உண்மையில் இந்த வேட்பாளர்கள்தான் எத்துணை பாவம்....