சம்பியன்ஸ் கோப்பையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 139 ஓட்டங்கள் இலக்கை
நியூசிலாந்து திக்குமுக்காடி வென்றது.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கார்டிப்பில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு
லீக் ஆட்டத்தில் இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதின. இலங்கை அணியில் குலசேகரவுக்குப்
பதிலாக எரங்க சேர்க்கப்பட்டார். அதே சமயம் நியூசிலாந்து அணியில் டேனியல் வெட்டோரி,
நாதன் மெக்கல்லம் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்தனர்.
காயத்தால்
நீண்ட காலம் ஒதுங்கி இருந்த வெட்டோரி, 2011ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு
விளையாடும் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும். நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை
அணித் தலைவர் மெத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இதன்படி
இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் பெரேராவும் டில்ஷானும் களம் புகுந்தனர்.
மில்ஸ் வீசிய முதல் பந்திலேயே குசால் பெரேரா ஆட்டம் இழந்தார். அவர் கொடுத்த பிடி
வாய்ப்பை இரண்டாவது சிலிப்பில் நின்ற நியூசிலாந்து தலைவர் பிரன்டன் மெக்கலம்
இடதுபக்கமாக அந்தரத்தில் தாவி பிடி செய்தது காண்போரைப் புல்லரிக்க வைத்தது.
ஆடுகளத்தில் பந்து ஓரளவு பவுன்சும் ஆனது. அதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள்
சூப்பராகப் பயன்படுத்தி, இலங்கை துடுப்பாட்ட வீரர்களை கலங்கடித்தனர். பந்து வீச்சும்
நியூசிலாந்து அணியின் ஆக்ரோஷமான களத்தடுப்பும் பிரமாதமாக அமைந்தது.
முன்னாள் தலைவர் சங்கக்காரவைத் தவிர மற்றவர்கள், வருவதும் போவதுமாக இருந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் போட்டியில் காலடி எடுத்து வைத்த
மூத்த சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி, மஹேல ஜயவர்தனவை (4 ஓட்டம்) எல் பி. டபிள்யூ.
ஆக்கினார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் வெட்டோரி, இதற்கு முன்பு தனது கடைசி
விக்கெட்டாக ஜயவர்தனவைத் தான் (உலக கோப்பையில்) எல். பி. டபிள்யூ. முறையில் சாய்த்து
இருந்தார்.
சங்கக்கார ஒரு பக்கம் போராடினாலும், அவருக்கு பக்க பலமாக யாரும் துணை நிற்கவில்லை.
கடைசியில் அவரும் 68 ஓட்டங்களில் (87 பந்து, 8 பவுண்டரி) பிடி ஆனார். முடிவில்
இலங்கை அணி 37.5 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு அடங்கி போனது. களம் இறங்கிய 11 பேரில்
8 பேர் இரட்டை இலக்கை தொடவில்லை. நியுசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்
மிட்செல் மெக்லெனஹான் 4 விக்கெட்டுக்களும், மில்ஸ், நாதன் மெக்கல்லம் தலா 2
விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து சிறிய இலக்கை நோக்கி நியூசிலாந்து விளையாடியது.
நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களும் இந்த அளவுக்கு திணறுவார்கள் என்று யாரும்
எதிர்பார்க்கவில்லை. இலங்கை பந்து வீச்சாளர்கள் சரியாக ஸ்டம்பை நோக்கி தாக்குதல்
நடத்தி, நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால்
அவர்களின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன.
கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடிய சகோதரர்கள் தலைவர் பிரன்டன் மெக்கல்லம் (18 ஓட்டங்கள்),
நாதன் மெக்கல்லம் (32 ஓட்டங்கள்) இருவரையும் மலிங்க காலி செய்ததும், நிலையை மேலும்
சிக்கலானது. இதனால் வெற்றி யாருக்கு என்பது மதில் மேல் பூனையானது. 9வது விக்கெட்டாக
மில்ஸ் ஆட்டமிழந்த போது நியூசிலாந்தின் வெற்றிக்கு ஐந்து ஓட்டங்கள் தேவைப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக டிம் சவுதியும் (13 ஓட்டம்) மெக்லென்ஹானும் (1 ஓட்டம்) அந்த அணியை ஒரு
வழியாக கரை சேர்ந்தனர். நியூசிலாந்து அணி 36.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 139
ஓட்டங்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. யோர்க்கர்
மன்னன் மலிங்க 10 ஓவர்கள் பந்து வீசி 34 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை
அள்ளினார். இன்னும் ஒரு ஓவர் அவருக்கு இருந்திருந்தால், நியூசிலாந்து மண்ணைக் கூட
கவ்வியிருக்கும்,
ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்துவது 4 ஆண்டுகளுக்குப் பிறகு
இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2009ம் ஆண்டு சம்பியன்ஸ் கோப்பையில் இலங்கையை
வென்றிருந்தது. சகலதுறை வீரராக ஜொலித்த நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கல்லம்
ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். மேலும் 30 முதல் 40 ஓட்டங்கள் எடுத்திருந்தால்
ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும் என்றும் ஆடுகளத்தைத் தவறாகக் கணித்துவிட்டதாகவும்
தலைவர் மத்தியூஸ் தெரிவித்தார்.