சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வில் குழப்பம்: இலங்கையிடம் மன்னிப்புக்கோரியது
ஐ.சி.சி
சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வில் குழப்பம்:
இலங்கையிடம் மன்னிப்புக்கோரியது ஐ.சி.சி
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வின் போது ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக
சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கைக் கிரிக்கெட்டிடம் மன்னிப்புக்கோரியுள்ளது. அத்தோடு,
இவ்விடயம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுமெனவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
ஜூன் 6ம் திகதி இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கைத் தேசியக்
கொடி மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்ட போது ஹிந்தி மொழிப் பாடலொன்று ஒலிபரப்பப்
பட்டிருந்தது. இந்த விடயம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக
இலங்கை கிரிக்கெட் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்ததுடன், அது தொடர்பாக சர்வதேச
கிரிக்கெட் சபையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தது.
இலங்கை கிரிக்கெட் சபை
அனுப்பிய கடிதத்திற்குப் பதிலனுப்பியுள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபையின்
சுற்றுத்தொடர்களுக்கான நிர்வாகி கிறிஸ் ரெட்லீ, இவ்விடயத்திற்காக மன்னிப்புக்
கோருவதாகவும், குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்ய நியமிக்கப்பட்ட நிறுவனத்திடம் இது
தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறித்த நிறுவனத்திடம்
இவ்விடயம் கையளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த கிறிஸ் ரெட்லீ, அவர்கள்
இவ்விடயத்தைச் சரியாக, ஆற்றுவார்கள் என நம்பப்பட்டிருந்ததாகவும், ஆகவே அவர்களிடம்
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விளக்கங்களைக் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.