(ஒலுவில் கிழக்கு தினகரன், பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்கள்)
கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை அமைச்சின் பணிப்புரைக்கமைய அட்டாளைச்சேனை பிரதேச
செயலக கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இவ்வாண்டுக்கான
சம்பியனாக ஒலுவில் இலவன் ஸ்டார் அணியினர் வெற்றியீட்டிக் கொண்டனர்.
இப்பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட 18 கழகங்கள் பங்கு பற்றிய இச்
சுற்றுப் போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அட்டாளைச்சேனை பிரதேச
செயலக வி¨ளாயட்டு உத்தியோகத்தர் எஸ். எல். தாஜுத்தீன் தலைமையில் கடந்த சனிக்கிழமை
(23) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன் அரை இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை பைனா அணியினரை எதிர்த்து ஒலுவில் இலவன்
ஸ்டார் அணியினரும் அட்டாளைச்சேனை சோபர் அணியினரை எதிர்த்து அட்டாளைச்சேனை புளூ இலவன்
அணியினரும் விளையாடியதில் இறுதிப் போட்டிக்கும் ஒலுவில் இலவன் ஸ்டார் அணியினரும்
அட்டாளைச்சேனை சோபர் அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை சோபர் அணியினர் 5 ஓவர்
நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய ஒலுவில் இலவன் ஸ்டார் அணியினர் 4.3 ஓவர் நிறைவில் 4
விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இவ்வாண்டுக்கான
சம்பியனாக இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இவ்வாண்டுக்கான எல்லை சம்பியனாக பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக் கழகமும்
இரண்டாவது இடத்தினை பாலமுனை அல்-அறபா அணியினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.