நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு குடியரசு தின விழா அணி வகுப்புக்கு
வழங்கப்படுவதற்கு நிகரான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலேயே குடியரசு தின விழா அணி வகுப்புக்குதான் உச்ச
கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மோடி பதவியேற்பு விழாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை
விடுத்ததை அடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு நாட்டின் 15வது பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே திறந்த வெளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்
அண்டை நாடுகளின் தலைவர்கள் உட்பட 3000 அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்திய விமானப் படையினர் வான் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அனைத்து
உயரமான கட்டிடங்களிலும் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அப்பகுதியில்
உள்ள சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து மூடப்படும். துணை இராணுவப் படையினர்
தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், டெல்லி பொலிஸ் கமாண்டோக்கள், மோப்ப நாய் குழுவைச்
சேர்ந்தவர்களும் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். விமான எதிர்ப்பு
துப்பாக்கிகளும் தயார் நிலையில் இருக்கும்.