, வ்வளவு வேகமாகத் தீர்மானம் நிறைவேற்ற முடிந்தவர்களால் இச்சபை கலையும் முன்னர்
ஏதாவது ஒரு திட்டத்தையாவது உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்ட முடியுமா? என்று
கேட்கத் தோன்றுகின்றது.
கிளிநொச்சி - யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 29.04.2014 அன்று
வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. இந்தத் தீர்மானம் தீர்க்கதரிசனமற்ற
முறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்டோரினது அகங்கார வெற்றிக்காக
எடுக்கப்பட்ட தீர்மானமாகவே இதைக் கருத வேண்டி உள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பாகப்
பொது மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் ஒன்று ஏற்படுவதைத் தடுக்கும்
நோக்கத்தினையும் இது கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது உண்மையில் எதிர்மாறான
விளைவினையே ஏற்படுத்தும் என்கின்ற சாதாரண உண்மை கூட புலப்படத் தேவையான கால அவகாசம்
சபை அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
கிளிநொச்சி யாழ் நீர் விநியோகத் திட்டமானது யாழ் மாவட்ட மக்களுடைய குடிநீர்ப்
பிரச்சினையைத் தீர்ப்பது மட்டுமல்லாது இப் பிரதேசத்தில் நாகரிகம் ஒன்றின் இருப்பின்
பேண்தகு திறனை இல்லாது சிதைக்கும் பாரிய பக்க விளைவுகளையும் தடுக்கின்ற ஒரு
திட்டமாகவே கருத வேண்டும்.
2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் 2003ஆம்
ஆண்டிலிருந்து முறையான நடைமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டதோடு மாவட்ட நிர்வாகம்
மற்றும் யாழ். பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக பேராசிரியர் துரைராஜா ஆகியோரது
பங்களிப்புடனேயே உருவாக்கம் பெற்றது. 2005ஆம் ஆண்டளவில் இத்திட்டம் பற்றிய
சாத்தியப்பாடுகள் பற்றிய உள்ளக ஆய்வுகளின் வழமையான முன் நிபந்தனை விடயத்தினை விட
இப்போது பின்வரும் விடயங்களும் கவனத்திற்கு எடுக்கப்பட்டிருந்தன.
1. சுண்டிக்குளம் நன்னீர்த்திட்டம்
2. கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்கக்கூடிய வேறு அணைத்திட்டங்கள்.
3. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம் மற்றும் எல்நினோ தாக்கங்களின்
விளைவுகள்.
4. கடல் நீர்மட்டம் உயர்வதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் போன்ற விடயங்கள் கூட
முக்கியமான ஏனைய வழமையான விடயங்களுக்கு மேலதிகமாகக் கவனத்திற்கு எடுக்கப்பட்டன.
உலகளாவிய அனுபவத்தின் படி நிலக்கீழ் நீர் வளங்கள் கட்டுப்பாடற்ற உறிஞ்சுதலினால்
பாதிப்புக்குள்ளாகி உள்ளமை நிறுவப்பட்டுள்ளது. நிலக்கீழ் நீர் பேண்தகு முறையில்
உபயோகிக்கப்பட வேண்டுமாயின் அதற்கு நில மேற்பரப்பு நீரின் தொடர்ச்சியான மீளளிப்பு
இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அதாவது நில மேற்பரப்பு நீர் இடையறாது நிலத்தடி
நீரை நிரப்பிக் கொண்டிருந்தால் மட்டுமே நிலத்தடி நீரின் கட்டுப்பாடற்ற உபயோகம்
பேண்தகு முறையில் நடைபெற முடியும். இதன் கருத்து யாதெனில் நிலத்தடி நீர் வள
அபிவிருத்தி என்பது உண்மையில் நில மேற்பரப்பு நீரின் அபிவிருத்தியே. யாழ்ப்பாணத்தில்
கிடைக்கின்ற நிலத்தடி நீர் ஆயிரமாயிரம் வருடங்களாக நடைபெற்று வந்த சேமிப்பின்
பலனாகவே ஏற்பட்டதாகும். இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற கட்டுப்பாடற்ற உபயோகம் இந்
நீர் பாதிப்படைவதற்குப் பிரதானமான காரணமாயிற்று. பழைய நிலைமைக்கு மீளத் திருப்பிக்
கொண்டு வர முடியாவிட்டாலும் பேண்தகு நிலை ஒன்றினை நிர்ணயித்து அதனைப் பேணுவதாயின்
இருபக்க நடவடிக்கைகள் அவசியமாகும்.
1. ஒன்று நீரை பாதுகாப்பதும் உறிஞ்சி வெளியே எடுத்தலைக் கட்டுப்பாட்டினில்
வைத்திருப்பதும்.
2. மற்றையது தரை மேற்பரப்பு நீரைக் கொண்டு வந்து சேர்ப்பது இதற்கான செயற்பாட்டு
மட்டங்களை நிர்ணயிக்கும் போது நீர்ச்சமன்பாடு ஒன்றினைக் கணித்துக் கொள்ளல் வேண்டும்,
அதாவது ஒரு வருடத்தில் எமக்குக் கிடைக்கின்ற மேற்பரப்பு நீரின் அளவு, நாம் நிலத்தின்
கீழிருந்து பெறுகின்ற நீரின் அளவு, நிலத்தடியில் சேமிக்கப்படுகின்ற நீரின் அளவு,
நீரினுடைய தூய்மைத்தன்மையில் ஏற்படுகின்ற தாக்கத்தின் அளவு, எய்தப்படவேண்டிய நீரின்
தரம் போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு பேண்தகு மூலவள உபயோகத்திற்கான
செயற்பாட்டு மட்டங்களை நிர்ணயித்து அவற்றினை எய்திக்கொள்வதற்கான திட்டங்களை
வகுத்துக் கொள்ளல் வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் கிடைக்கக்கூடியதாக இருந்த நிலத்தடி
நன்னீரில் அளவை தரத்தையும் கொண்ட பழைய சமநிலையை மீண்டும் மழைநீரைக் கொண்டுவர
வேண்டுமாயின் எத்தனை வருடங்கள் எடுக்குமோ எமக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்தில்
பெய்கின்ற மழை நீர் முழுவதையும் தேக்கி நிலத்திற்குக் கீழே செலுத்துவதாயின்
ஆயிரக்கணக்கான சிறு குண்டுகளைத் தோண்டி அதன் மூலம் சாதிக்கலாம் என்ற கருத்து ஆசிய
அபிவிருத்தி வங்கிக்கு முன் வைக்கப்பட்டதாக அறியக்கிடக்கின்றது. இவ் அணுகுமுறையின்
படி காலநிலை மாற்றும், தாழ்நிலக் குடியிருப்புக்களின் தோற்றமும் வளர்ச்சியும்,
மற்றும் விவசாய தொழில்நுட்பங்களின் மாற்றங்கள் போன்றவை ஏற்படுத்தியுள்ள
தாக்கங்களையும் ஈடு செய்தே யாழ்ப்பாணக் குடிநீர்ப் பிரச்சினை தீர்த்து
வைக்கப்படமுடியும். மழை நீர் உபயோகிப்பதன் மூலம் தீர்வு காணுவதாயின் அதற்கும் எத்தனை
வருடங்கள் எடுக்குமோ தெரியாது. நிலத்தடி நீரை உபயோகித்து நீர் விநியோகத்திட்டங்கள்
நீண்ட காலத்திற்கு இயங்குவது வெகு அரிது.
எது எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப்பிரச்சினைக்கும் தமிழர் நாகரிகத்தின்
தொடர்ச்சியான இருப்பிற்கும் இப் பிரதேச நில ஆளுமைக்கும் வட மாகாணத்தினுள்
கிடைக்கின்ற நில மேற்பரப்பு நீரினை முறையான திட்டங்களை ஈடுபடுத்தி முகாமை செய்வதன்
மூலம் செய்தலே சிறந்தது என்ற முடிவிற்கு வந்திருந்தார்கள். எவ்வாறாயினும் யாழ்ப்பாண
நிலக்கீழ் நீரினை குறுகிய காலத்தினுள் மீள் அபிவிருத்தி செய்வதாயின் அதனை நில
மேற்பரப்பு நீரினைக்கொண்டு தான் ஈடுசெய்ய முடியும் என்ற வெளிப்படையான உண்மை
அநாகரிகமாக மறைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான சிறு குண்டுகளோ அல்லது சுண்டிக்குளம் வாவியோ மாற்றுத் தீர்வாகும்.
என்பதற்கு இன்று வரை தொழில்நுட்ப ரீதியாகவோ விஞ்ஞான ரீதியாகவோ ஏற்றுக்கொள்வதற்கான
ஆய்வுகள் இல்லை. இவை வெறும் முன்மொழிவுகளே. இன் றைய யாழ்ப்பாணத்தின்
குடிநீர்ப்பிரச்சினை மிகத்தீவிரமானது இது பற்றிப் பல விபரங்கள் உள்ளன.
தீவகத்தில் இருந்தும் மற்றும் கரையோரப் பிரதேசங்களிலிருந்தும் மக்கள்
குடிப்பெயர்விற்கு நன்னீர் இன்மை முக்கியமான ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
தீர்க்கதரிசனமற்ற குறுகிய அரசியல் லாப நோக்கம் கொண்ட அவசரப்புத்திக்காரர்களின்
நடவடிக்கைகளினால் ஒரு சுத்தமான உள்வீட்டுப்பிரச்சினை உருமாறியுள்ளது. மாகாண சபையின்
தீர்மானத்தினைப் பார்த்து இவ்வளவு வேகமாகத் தீர்மானம் நிறைவேற்ற முடிந்தவர்களால்
இச்சபை கலையும் முன்னர் ஏதாவது ஒரு திட்டத்தையாவது உருவாக்கி நடைமுறைப்படுத்திக்
காட்ட முடியுமா? என்று கேட்கத் தோன்றுகின்றது. புதிய மாற்று வழிகளைப் புதிதாகக்
கண்டுபிடித்து அதற்குரிய திட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்கின்ற காலத்திற்கு
முன்னராகவே நீர்வள முகாமை தொடர்பாகப் பாரிய பிரச்சினைகள் தலைதூக்குவதற்கு வாய்ப்பு
உண்டு. எனவே கிளிநொச்சி - யாழ்ப்பாண நீர்விநியோகத்திட்டத்தினை மேலும் தாமதிக்காது
அமுல் நடத்த வழி செய்யும் வகையில் வடமாகாண சபை புத்தி பூர்வமான தீர்மானம் ஒன்றினை
உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வடமாகாண சபை தேர்தலின் பின்னர் தன் வழியில் தானே வந்த
வாய்ப்புக்கள் பலவற் றினை ஏற்கனவே கைவிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் வெளிவர
ஆரம்பித்துள்ளன.