ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

மனித தோலில் இருந்து குருத்தணுக்கள் உருவாக்கும் முயற்சி வெற்றி

மனித தோலில் இருந்து குருத்தணுக்கள் உருவாக்கும் முயற்சி வெற்றி

மனித தோலில் உள்ள அணுக்களில் இருந்து குருத்தணுக்களை (ஸ்டெம் ஸெல்) உருவாக்கும் நெடுநாள் ஆராய்ச்சியில் அமெரிக்க, ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் வெற்றியடைந்துள்ளனர்.

பிறந்த குழந்தையின் வயிற்றில் இருக்கும் தொப்புள் கொடியில் தாயின் கருப்பையில் வளர்ந்த ஏராளமான குருத்தணுக்கள் தேங்கியுள்ளன. எனவே, இவற்றை சேமித்து வைப்பதன் மூலம் பின்நாட்களில் அந்த குழந்தை முதுமை அடையும்போது ஏற்படும் கொடிய நோயின் தாக்கத்தை எதிர்த்து போராட இந்த குருத்தணுக்களை பயன்படுத்த முடியும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதையும் கடந்து, செயற்கை முறையில் குருத்தணுக்க ளை உருவாக்கும் ஆராய்ச்சியில் மாசாச்சூ செட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னேறிய குருத்தணு ஆராய்ச்சி கூடத்தில் பணியாற்றும் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த மருத்துவர்கள் கூட்டாக ஈடுபட்டிருந்தனர். இதற்காக பரிசோதனை கூடத்தில் வளர்க்கப்படும் எலிகளின் மேல் தோலில் உள்ள உயிரணுக்களை எடுத்து வீரியம் குறைந்த சிட்ரிக் அமிலக் கலவையில் சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து காத்திருந்தபோது அந்த வியத்தகு மாற்றம் நிகழ்ந்தது.

அமிலத்தில் ஊறிய அந்த உயிரணுக்களில் இருந்து புதிய கருமுளை (எம்ப்ரியோ) உருவானது. இந்த கருமுளையை வைத்து குருத்தணுவை உருவாக்கும் சோதனை முயற்சியும் வெற்றி பெற்றதால், இதே முறையில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மனித தோலையும் சோதித்து பார்த்தனர்.

இதிலும், எலியின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுவில் நிகழ்ந்த அதே மாற்றம் ஏற்பட்டதை கண்ட ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இப்படி செயற்கை முறையில் உருவாக்கி உயிரூட்டப்படும் குருத்தணுகளை கொண்டு முதியோர்களுக்கு உண்டாகும் (பார்கின்சன்) நடுக்குவாதம் உட்பட இதய நோய் வரை பல பாதிப்புக்களுக்கு நோயாளியின் தோலை கொண்டே சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி