ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

தட்டச்சு இயந்திரம் பிறந்த கதை

தட்டச்சு இயந்திரம் பிறந்த கதை

தட்டச்சு இயந்திரம் கண்டு பிடிக்க மூல ஆதாரமாக இருந்தது கூடன்பர்க் வடிவமைத்த அச்சு இயந்திரமாகும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி மில் என்பவர் முதன் முதலில் கி.பி. 1714ம் ஆண்டில் தட்டச்சு இயந்திரம் போன்ற ஒரு சாதனத்தை வடிவமைத்தார். பின்பு, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். அதற்குப் பிறகு அதனை மேம்படுத்த எவ்வித முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை.

கி.பி. 1829ல் வில்லியம் பர்ட் என்பவர் ஒரு கருவியினை வடிவமைத்து டைப் போகிராபர் (Typographer) என்ற பெயர் கொடுத்தார். இந்தக் கருவியில் எழுத்துக்கள் சுற்றக்கூடிய ஒரு சட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தன. உபயோகப்படுத்திப் பார்த்த போது பல நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன. ஆகையால், இவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

1867ல் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் என்பவர் தட்டச்சு இயந்திரத்தை வடிமைத்தார். இது ஒரு வெற்றிகரமான கருவியாக அமைந்தது. காப்புரிமை பெற்று, பெற்ற காப்புரிமையை நியூயோர்க் நகரின் புகழ்பெற்ற நிறுவனமான ரெமிங்டன் அண்ட் சன்ஸ்க்கு வழங்கினார்.

இந்த நிறுவனம் உலகின் முதல் வியாபார ரீதியிலான வெற்றிகரமான தட்டச்சு இயந்திரங்களைத் தயாரித்து உலகிற்கு வழங்கியது.

ஷோல்சின் மெக்கானிக்கல் தட்டச்சு இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தோமஸ் ஆல்வா எடிசன் 1872ல் உலகின் முதல் எலக்ட்ரிக் தட்டச்சு இயந்திரத்தை வடிமைத்தார். இது 1950 வரை அவ்வளவாக நடைமுறையில் இல்லை. இதன் விலை அதிகம் என்பதால் யாரும் அதிக விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. பின்பு, 1978 ல் உருவாக்கப்பட்ட எலக்ட்ரோனிக் தட்டச்சு இயந்திரத்தில் தகவல்களைச் சேகரிக்கும் மெமரி வசதி அமைக்கப்ப்பட்டது.

ஷோல்ஸ் வடிவமைத்தை தட்டச்சு இயந்திரத்தில் எழுத்துக்களும் எண்களும் வரிசைகளில் அமைக்கப்பட்டிருந்தன. போப்பரினாலான ஒரு உருளையும் மரத்தினாலான ஒரு இடைவெளி விடுவானும் (Space Bar) அமைக்கப்பட்டிருந்தன. எழுத்துக்கள் தற்போது உள்ளது போல சிறிய (Small letters) மற்றும் பெரிய (Capital letters) எழுத்துக்கள் அப்போது இல்லை. அனைத்தும் பெரிய எழுத்துகளாக (Capital) அமைந்திருந்தன.

இந்தக் குறையானது கி.பி. 1878 ம் ஆண்டு ரெமிங்டன் நிறுவனத்தால் நீக்கப்பட்டது. ஒரு ஷிப்ட் கீ அமைக்கப்பட்டு சிறிய மற்றும் பெரிய எழுத்துகள் அமைக்கப்பட்டன.

கி.பி. 1893 வரை மேலும் ஒரு பெரிய குறை இருந்து வந்தது. தட்டச்சு செய்பவருக்குத்தான் என்ன வார்த்தையினைத் தட்டச்சு செய்கிறோம் என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது இருக்கும் வசதி அப்போது அமைக்கப்படவில்லை. எனவே, தட்டச்சு செய்பவர்கள் சிரமத்தைச் சந்தித்தார்கள். தான் தட்டச்சு செய்வது சரியா, தவறா என்பதே தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்தக் குறைபாடு பிரான்சஸ் வாக்னர் என்னும் ஜேர்மனியரால் 1890 ல் நிவர்த்தி செய்யப்பட்டது. ஜான் அண்டர்வுட் என்பவர் தற்போது உபயோகத்தில் இருக்கும் இன்ங்ரிப்பனையும், கார்பன் பேப்பரையும் கண்டுபிடித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி