ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JULY 19, 2010
க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு 362 பேர் தோற்ற ஏற்பாடு
வவுனியா புனர்வாழ்வு நிலையம்:
க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு 362 பேர் தோற்ற ஏற்பாடு
விசேட வகுப்புக்கள்; செயலமர்வுகள்
(லக்ஷ்மி பரசுராமன்)
ஒகஸ்ட் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை
புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென
புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க
தெரிவித்தார்.
இவர்களுக்கான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கொழும்பின் பிரபல
பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு செயலமர்வு நடத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து
வருவதாகவும் இதற்கென கல்வியமைச்சின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்றுவிக்காத 18 வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு நிலையத்தில் இவ்விசேட ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 252 ஆண்களுக்கு வவுனியா தமிழ் ஆரம்பப் பாடசாலையிலும்
110 பெண்களுக்கு பூந்தோட்டத்திலும் அவர்களது தேர்வுக்கான பாடத்திட்டங்கள்
கற்பிக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களே இவர்களுக்கான கற்பித்தலை
முன்னெடுத்து வருகின்றனர். புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 260 பேர் கலைப்
பிரிவிலும் 09 பேர் கணிதப் பிரிவிலும் 22 பேர் உயிரியல் பிரிவிலும் 71 பேர்
வர்த்தகப் பிரிவிலும் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனரெனவும் அதன்
ஆணையாளர் மேலும் கூறினார்.
மேலும் டிசம்பரில் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக 172
பேர் தயாராகி வருவதாகவும் அவர் குறிப் பிட்டார். (ரு - து)