வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை மூலம் குடும்ப உணவுத் தேவைக்கு உதவுவதுடன்
பொருளாதாரத்தைப் பேணவும், போஷாக்கான சுகாதாரமான உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளவும்
முடியும். அதனால் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில்
அரசாங்கம் பல்வேற அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதோடு பல உதவிகளையும் செய்து
வருகின்றது.
அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவ டிக்கைகளில் ஓர் அம்சமாக தோட்டப் பகுதிகளில் தோட்டத்
தொழிலாளர்களின் வீடுகளின் முன்புறமும், பின் புறமும் கவனிப்பாரற்றுக் கிடக்கும்
காணித் துண்டுகள் துப்புரவு செய்யப்படுகின்றன.
முன்னாள் இலங்கைப் பிரதமர் காலஞ்சென்ற சிறிமாவோ பண்டார நாயக்கவின் ஆட்சிக் காலத்தில்
நாட்டிலுள்ள தரிசு நிலங்களெல்லாம் துப்புரவு செய்யப்பட்டு, அன்றிருந்த விவசாய
அமைச்சால், மரவள்ளி பயிர்ச் செய்கைக்கான குச்சிகள் வழங்கப்பட்டன.
அதன் மூலம், சகல மக்களும் நன்மை பெற்றனர். மரவள்ளி பயிர்ச் செய்கையில் அன்றிருந்த
உற்பத்தியாளர்கள் பலர் வருவாயை பெருக்கி மேலும் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
அப்போது தோட்டப் பகுதி தொழிலாளர்களுக்கு வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கைக்கென
அங்கொன்றும் இங்கொன்றுமாக காணிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் அவர்களால் அச் செய்கையை
தொடர்ந்து நடத்திச் செல்ல முடியவில்லை. ஆனால், இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
தலைமையிலான அரசாங்கம் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கும் திட்டங்களோடு,
வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கவும் சகல உதவிகளையும் வழங்க
முன்வந்துள்ளது. இதனை தோட்டத் தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இதேவேளை தோட்டப் பகுதிகளில் ஒரு பெரிய குறைபாடுள்ளது. அதாவது தோட்ட மக்கள் எத்தகைய
செயல்களில் ஈடுபட்டாலும் அதை ஊக்கமுடனும், அக்கறையுடனும் செய்தாலும் காலப் போக்கில்
அதனை தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுகின்றனர். காரணம் அவர்கள் மத்தியில் உள்ள
நம்பிக்கையின்மைதான்.
ஆனால், இன்று நிலை மாறிவிட்டது எனலாம். தோட்டப் பகுதி மக்களைப் பொறுத்தவரை, ஆண்
தொழிலாளர்கள் பிற்பகல் 2 மணி வரையிலும் வேலை செய்துவிட்டு வீடு திரும்புகின்றனர்.
பெண்களோ மாலை 4.00 மணி வரை வேலை செய்துவிட்டு வீடு திரும்புகின்றனர்.
தோட்டப் பகுதி ஆண் தொழிலாளர்களுக்கு அரியதொரு சந்தர்ப்பமாக இந்த வீட்டுத் தோட்டப்
பயிர்ச் செய்கை உள்ளது. அவர்களுக்கு போதிய ஓய்வு நேரமும் உண்டு. ஆதலால் அவர்கள்
நாளாந்த பெயருக்கு வேலை செய்த பின் வீட்டுக்குத் திரும்பி, வீட்டுத் தோட்டப் பயிர்ச்
செய்கையில் ஈடுபடலாம்.
இதன் மூலம் மிகவும் வருமானம் குறைந்தவர்கள் தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளக்
கூடியதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தோட்ட மக்கள் தங்களின் ஓய்வு நேரங்களில்
தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது சிறந்ததாகும்.
வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைக்கு பொருத்தமான பயிர்கள் தக்காளி, பச்சை மிளகாய்,
போஞ்சி, வெண்டிக்காய், புடோலங்காய், வாழை, கத்தரி முள்ளங்கி, சீமை கோவா
போன்றவைகளாகும். இவற்றை பயிர் செய்வதால் மக்கள் நிச்சயம் அன்றாட தேவைகளைப் பூர்த்தி
செய்துகொள்ள முடியும். அத்தோடு வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ள முடியும். தோட்டப்
பகுதி மக்கள் அப்பகுதி கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், விவசாய
திணைக்கள உத்தியோகத்தர்களை நாடி அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதுடன் தோட்டப்
பயிர்ச் செய்கைக்கான கன்றுகளையும், விதைகளையும் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.
அரசு வழங்கும் சகல உதவிகளை யும் பெற்று வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில்
எல்லோரும் ஈடுபட வேண்டும். இது தோட்டத் தொழிலா ளர்களுக்கு மாத்திரமல்ல, தோட்டப்
பகுதிகளில் உத்தியோகம் புரியும் எழுதுவிளைஞர்கள், டீ மேக்கர், ஸ்டோர்கீப்பர், தோட்ட
சூப்பர்வைசர் களுக்கும் பொருந்தும். அரச அலுவ லர்கள் இது விடயத்தில் தோட்ட மக்கள்
மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தல் மிக மிக அவசியம்.