வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

புகைப்பதைத் தவிர்த்து ஆயுளை நீடிப்போம்!


புகைப்பதைத் தவிர்த்து ஆயுளை நீடிப்போம்!

நீர், உணவு இல்லாமல் சில நாட்கள் வாழலாம். ஆனால் மூச்சு, காற்று இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது. 3 நிமிடங்களுக்கு மேல் ஒட்சிசன் செல்வது தடைப்பட்டால் மூளை செயலிழந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும். சுவாசம், மூச்சுக்குழல், நுரையீரல், காற்று நுண்ணறைகள், மூச்சுக்கிளை, சிறுகுழல்கள் இணைந்தது சுவாச மண்டலம் ஆகும். நுரையீரல்கள் சுருங்கி விரியும்போது சுவாசம் நிகழ்கிறது.

நுரையீரல் சுருங்கி ஒட்சிசன் உள்ளிழுக்கப்படுகிறது. விரியும்போது காபனீரொக்சைட் வெளியேற்றப்படுகிறது. ஒரு நுரையீரலில் 30 ஆயிரம் சிறு மூச்சுக்குழல்கள் உள்ளன. 600 மில்லியன் காற்று நுண்ணறைகள் உள்ளன.

வலது நுரையீரல் எடை 620 கிராம், இடது நுரையீரல் 560 கிராம், நுரையீரல்களில் தசைகள் இல்லை. மார்பில் உள்ள தசைகளே நுரையீரலை இயக்குகின்றன. சுவாசத்தின்போது காற்று உட்சென்று வெளிவரும் அளவை ஸ்பைரோ மீட்டரால் கணக்கிடலாம். நுரையீரல்களின் மொத்த காற்றின் கொள்ளளவு 4.5 லீற்றர். சுவாசத்தின்போது அரை லீற்றர் காற்று உள்ளே செல்கிறது.

முழுமையாக காற்றை இழுத்தால் தான் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஒட்சிசன் செல்லும் நுரையீரல் பாதிப்பால் ஆஸ்மா, சுவாச ஒவ்வாமை, நுரையீரல் உயர் இரத்த அழுத்த நோய், நுரையீரல் அடைப்பு நோய், புற்றுநோய் ஏற்படும். புகைப்பிடித்தல், வீட்டிற்கு வெளியே, உள்ளே மாசு, நோய் எதிர்ப்பு குறைவு, ஒவ்வாமை ஆகியன இதற்கு காரணம்.

புகைப்பதால் வரும் புகையில் மூன்றில் ஒரு பங்கு புகைப்பிடிப்போரையும், 2 பங்கு சுற்றியுள்ளோரையும் பாதிக்கிறது. நாம், நம்மை சுற்றியுள்ளோர் புகைக்காமலும் தடுப்பது அவசியம். தொற்று வியாதிகளில் 80 சதவீதம் கைகளால் பரவுகிறது. எனவே கைகளை சவர்க்காரம் போட்டு கழுவ வேண்டும். கார் என்ஜினை தேவையின்றி ஒட்டக்கூடாது, திறந்த வெளியில் பொருட்களை எரிக்கக் கூடாது. மாசு தடுப்பு குறித்த சட்டங்களை பின்பற்ற வேண்டும். புகையில்லா அடுப்பை பயன்படுத்தவும், மின் உபகரணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

வீட்டை சுற்றிலும் கழிவுநீர் தேங்க விடக்கூடாது. சோபா, மிதியடி, மெத்தை, நாற்காலிகளில் தூசி படிய விடக்கூடாது உடன் பணிபுரிபவருக்கு ஆஸ்மா, நுரையீரல் புற்றுநோய் இருந்தால் நாம் முக மூடியும் தடுப்பு உடையும் அணிவது அவசியம்.

சிகரெட்டில் உள்ள புகையிலையில் நிக்கோடின் என்ற போதைப் பொருள் உண்டு. இரத்தத்தில் நேரடியாக கலந்தால் மனிதரை கொல்லத்தக்க நிகோடின், புகையிலையில் நூற்றுக்கணக்கான வேதிப்பொருள் உள்ளது. புகைக்கும்போது தோல், நுரையீரலின் உட்பகுதியில் இவை ஒட்டுகிறது.

மூச்சுக்குழலில் ஒட்டும் நுண் கிரு மிகளையும், தூசிகளையும் அகற்ற முடியாது. இதனால் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாகும். துர்நாற்றம் வீசும் தலைமுடி, கறைபடிந்த பற்கள், இதயநோய், துர்நாற்றம் வீசும் வாய், தோல் சுருக்கமும் ஏற்படும்.

மனிதன் ஒரு நிமிடத்தில் 14- 15 முறை மூச்சை இழுக்கிறான். உணர்ச்சிவசப்படும்போது இவ்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் கெடும். சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும். சரியான பயிற்சியால் மூச்சு இழுப்பதை 6-4 முறை என குறைக்கலாம். நுரையீரல் எனும் இயந்திரத்தை நோயிலிருந்து காக்கலாம். நீண்ட நாள் வாழலாம்.

நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு

இந்தியா, அன்னூர் அருகே நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சை கிராம மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். கஞ்சப்பள்ளி, முடக்குத் தோட்டத்தை சேர்ந்த விவசாயி குருசாமி. இவர் தோட்டத்தில் கோழிப் பண்ணை வைத்துள்ளார். பல்லடம் சாந்தி பார்ச்சூன் நிறுவனத்திலிருந்து வரவழைக்கப்படும் கோழிக்குஞ்சுகளை ஒப்பந்த அடிப்படையில் 45 நாட்கள் வளர்த்து மீண்டும் இந்த நிறுவனத்துக்கு விற்று வருகிறார்.

15 நாட்களுக்கு முன் அந்த நிறுவனத்திலிருந்து பண்ணைக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு குஞ்சுக்கு நான்கு கால்களும், இரண்டு மலதுவாரங்களும் உள்ளன. இது குறித்து குருசாமி கூறியதாவது:- குஞ்சாக இருந்த போது நான்கு கால்களில் நடந்தது. 20 நாட்களில் நன்கு தீவனம் சாப்பிட்டு 800 கிராம் எடையுடன் உள்ளது.

இப்போது முன்னங்கால்களை அழுத்தமாக பதித்தும், பின்னங்கால்களை லேசாக வைத்தும் நடக்கிறது. பின்னங்கால்களை அடிக்கடி மேலே தூக்கிக் கொள்கிறது. நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு இருக்கும் தகவல் தெரிந்து அல்லப்பாளையும், ருத்திரியம்பாளையும் கஞ்சப்பள்ளி கிராமங்களை சேர்ந்த பலரும் வந்து வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

இது குறித்து அன்னூர் கால் நடை மருத்துவமனை வைத்தியர் தங்கவேல் கூறுகையில், “நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு பிறப்பது அரிதானது. “ஜீன்” மாறுபாட்டால் இப்படி நடக்கிறது. கோழி வளரத் தொடங்கும் போது பின்னங்கால்கள் தானாக சுருங்கி விடும். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை” என்றார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »