வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

உயிரைப் பறித்த தங்கம்

உயிரைப் பறித்த தங்கம்

துருக்கியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் யூசப் இஷ்மேயெலோ அமெரிக்காவிற்கு சென்று பல மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று நிறைய பணம் சம்பாதித்தார். அவருக்கு டொலர் நோட்டுகள் மீது நம்பிக்கையில்லை.

எனவே, தன்னிடமிருந்த டொலர்களை தங்க காசுகளாக மாற்றி, அதை ஒரு துணிப் பையில் கட்டி பெல்ட் போன்று தன் இடுப்பில் கட்டியிருந்தார். அவர் தாய் நாடான துருக்கிக்கு பர்கோய்னி என்ற கப்பலில் சென்று கொண்டிருந்த போது வழியில் நீர் மட்டத்திற்கு கீழே இருந்த ஒரு பாறை மீது கப்பல் மோதி மூழ்க ஆரம்பித்தது. அந்த கப்பலில் பயணம் செய்தவர்களில் யூசப் இஷ்மேயெலோ ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

யூசப் தன் இடையில் வைத்திருந்த தங்கத்தின் பாரம் காரணமாக சீக்கிரமாகவே மூழ்கி கடலின் ஆழத்திற்கு சென்றுவிட்டார். அவரது தங்க நகை ஆசையே அவரது உயிரை எடுத்துவிட்டது.

மருத்துவக் குறிப்புக்கள்

தலைவலியை அனைவருமே அனுபவித்திருப்போம். தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. கண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும்.

சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும். இரத்த அழுத்தம் அதிகரித்தல், பல் சொத்தை சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எந்தப் பழத்தையும் சாறு பிழிந்து சாப்பிடக் கூடாது. அதேபோல் மா, பலா, வாழை, பேரீச்சை, திராட்சை ஆகிய பழங்களை சாப்பிட வேண்டாம். சைவ உணவு மிகவும் நல்லது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் காலையில் இட்லி அல்லது தோசை. மதியம் சாதம், இரவு இட்லி அல்லது சப்பாத்தி சாப்பிடலாம். இனிப்பு வகைகளை தொட வேண்டாம். சர்க்கரை இல்லாத டீ. காபி சாப்பிடலாம். உணவு விஷத்தில் டாக்டர் ஆலோசனை தேவை.

* * *

இதயத்துக்கு செல்லும் இரத்தக் குழாய் (தமனி) அடைபடுவதால், இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தம் தடைப்பட்டு, அந்த பகுதி செயலிழந்து போகிறது. அதனால் வருவது மாரடைப்பு இரத்த ஓட்டத்தடை பெரும்பாலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தால் வருகிறது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புகை பிடித்தல், மன உளைச்சல், உடல் பருமன், உடற் பயிற்சி செய்யாதது மற்றும் பாரம்பரியம் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படலாம்.

* * *

குழந்தைகள் இரவில் தங்களை அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஓரளவுக்கு இயற்கைக்கு உட்பட்டது. நரம்பு மண்டலம் வளர்ச்சி அடைந்தால் இந்தப் பழக்கம் குறைந்துவிடும். பத்து வயதான பின்னரும் படுக்கையில் சிறுநீர் கழித்தால் டாக்டரிடம் காண்பிப்பது நல்லது. தூங்கச் செல்வதற்கு முன்பாக குடிநீர் மற்றும் பானங்களை கொடுக்கக் கூடாது. இரவில் ஒருமுறை எழுப்பி சிறுநீர் கழிக்க வைப்பதும் நல்லது.

* * *

சிறுநீரை அடக்கினால் சிறுநீர்ப் பையில் தேங்கும் சிறுநீர், சிறுநீர்ப் பையை விரிவடையச் செய்யும். ஆரம்பக் காலங்களில் இந்த விரிவாக்கத்தால் அடிவயிற்றில் வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறும் உணர்வும், உந்துதலும் ஏற்பட்டு சிறுகச் சிறுக சிறுநீர் வெளியேறும். ஆனால் நாளடைவில் இந்த வலி ஏற்படுவது மறைந்து சிறுநீர்ப் பை தனக்குரிய செயல் தன்மையை மெல்ல மெல்ல இழந்துவிடும். இப்படி சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்பு ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக உள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •