தமிழர் ஒற்றுமை, பலம் எனக்கூறி பெறும் வாக்குகள் இம்முறையும் தாரைவார்ப்பா?
அரசியல் இருப்பை தக்கவைக்க உணர்வுகளை தூண்டும் சக்திகள்
இனங்கண்டு ஒதுக்க வேண்டும் - எஸ்.கே.கிருஷ்ணா
(சுஐப் எம். காசிம்)
மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்ளும் சக்திகளை
இனங்கண்டு அவர்களைத் தேர்தல்களில் ஒதுக்க வேண்டுமென நவோதய மக்கள் முன்னணியின் தலைவர்
எஸ்.கே.கிருஷ்ணா வாரமஞ்சரிக்கு தெரிவித்தார்.தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை
வசீகரிப்பதற்காக ஆவேசமான பேச்சுக்களை மேடைகளில் பேசி மக்களின் இன உணர்வு களுடன்
விளையாடியவர்கள் மீண்டும் வாக்கு வேட்டைக்கு கிளம்பியுள்ளனர்.
இவர்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். உணர்ச்சிகரமான பேச்சுக்கள்
மக்களுக்கு ஒருபோதும் சோறு போடப் போவதில்லை. வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வியல்
சூழல் வேறு. கொழும்பு மக்களின் வாழ்வியல் நிலை வேறு.
மூவினங்களும் ஒன்றுடன் ஒன்று தங்கி வாழும் கொழும்பின் அமைதியான சூழலை குழப்பி
அரசியல் குளிர்காய வேண்டாம் என உருக்கமாக கேட்டுக் கொள்கின்றேன்.
நவோதய மக்கள் முன்னணியை பொறுத்த வரை மக்களின் அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு
பாடுபட்டு வருகின்றது. ஜனநாயக மக்கள் முன்னணியைப் போன்று தேர்தல் காலங்களில் மட்டுமே
மக்களிடம் நாம் வருவதில்லை. ஜனநாயக மக்கள் முன்ன ணியின் தலைவர் மனோ கணேசன்
காலத்துக்கு காலம் கொழும்பு வாழ் மக்களின் வாக்கு களை அபகரிப்பதற்காக பல்வேறு தந்தி
ரோபாயங்களை கையாள்வது வழமையாகி விட்டது. இனியும் மக்கள் ஏமாறக் கூடாது.
கடந்த 9 வருடகாலம் கொழும்பு வாழ் மக்களின் வாழ்வியல் தேவைகளை இனங்கண்டு மக்களுக்கு
நான் பணிபுரிந்து வருகின்றேன். தேர்தலை மையமாகக் கொண்டு நாம் மக்களுக்கு
உதவியளிப்பதில்லை. மக்கள் சேவையே எமது அமைப்பின் குறிக்கோள். எமக்கு ஓர் அரசியல்
அங்கீகாரம் தேவை என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே நாம் தேர்தல் களத்தில் குதிக்கின்றோம்
என்று அவர் தெரிவித்தார்.