ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

கும்பமேளா சென்று திரும்பிய 36 பேர் நசுங்கி உயிரிழப்பு

அலகாபாத் ரயில் நிலைய பாலம் உடைந்ததில் நெரிசல் :

கும்பமேளா சென்று திரும்பிய 36 பேர் நசுங்கி உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நேற்று முன்தினம் சுமார் 3 1/2 கோடி பேர் புனித நீராடினார்கள். அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு வந்திருந்தனர். புனித நீராடலுக்குப் பிறகு பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரயிலைப் பிடிக்க அலகாபாத் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

நேற்று முன்தினம் 7 மணி அளவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தின் 6வது நடை மேடைக்கு செல்லும் நடை மேம்பாலம் மீது ஏறினார்கள்.

அப்போது 5வது பிளாட் பாரத்துக்கும் 6வது பிளாட்பாரத்துக்கும் இடையில் உள்ள நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள்.

தையடுத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கியவர்களில் சுமார் 20 பேர் மூச்சுத்தினறி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ரயில்வே ஆஸ்பத்திரி, ஸ்வருபராணி ஆஸ்பத்திரி உட்பட பல மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 16 பேர் இறந்தனர்.

இதனால் அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.

சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் சிலரது உடல் நிலை கவலைக் கிடமாக உள்ளது. எனவே உயிரிழந்தோர் எண் ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படு கிறது. அலகாபாத் ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் பொது மக்கள் நெரிசலில் சிக்கியதற்கு பொலிஸார் திடீரென நடத்திய தடியடி தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பெண்கள் மட்டுமே செல்ல வேண்டிய அந்த நடை மேம்பாலத்தில் தேவை இல்லாமல் சுமார் 4 ஆயிரம் பேர்திரண்டி ருந்ததாக தெரிகிறது. அவர்களை வரிசையில் நிற்குமாறு பொலிஸார் லேசான தடியடி நடத்திய போது மக்களிடையே பதற்றம் உண்டாகி நெரிசல் ஏற்பட்டுவிட்டது.

இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். 36 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி