வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 
மட்டு. சுமனரத்தின தேரரை மஹிந்த அரசியல் தேவைக்கு பயன்படுத்துகிறார்

மட்டு. சுமனரத்தின தேரரை மஹிந்த அரசியல் தேவைக்கு பயன்படுத்துகிறார்

“வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை பற்றியும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்கள மக்களை விரட்டியடிக்கும் ஒரு திட்டம் நடைமுறையாகிறது. அதுபற்றி நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னிடம் கூறினார். இதுபற்றி, நான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பிரஸ்தாபித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சமீபத்தில் மட்டக்களப்பு மங்களாராமய விஹாரைக்கு சென்று விஹாராதிபதி சுமனரத்தின தேரரை சந்தித்து கலந்துரையாடி வந்தார். இதன்பிறகே மட்டக்களப்பு மங்களாராமய விஹாராதிபதி தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. ஆகவே இந்த இரண்டுக்கும் தொடர்பு உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்தார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘இந்த நொடியில் என் மனதில்’ என்ற தன் முகநூல் பக்க பத்தியில், ‘மட்டக்களப்பு சுமனரத்தின தேரர்-, மகிந்த-, புலிகள், -மைத்திரி, -நான், -தமிழ் மக்கள்’ என்ற தலைப்பில் நேற்று காலை அமைச்சர் கணேசன் மேலும் எழுதியுள்ளதாவது,

கடந்த 10ம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட அன்று பிற்பகல் பாராளுமன்ற உணவு விடுதியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேநீர் அருந்தியவாறு தனது ஆதரவு எம்பீக்களுடன் உரையாடி கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற என்னிடமும் அவர் உரையாடினார். என்னுடன் அமைச்சர் பழனி திகாம்பரமும் இருந்தார்.

“சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் நீங்கள் உரையாடுவது நன்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை பற்றியும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்கள மக்களை விரட்டியடிக்கும் ஒரு திட்டம் நடைமுறையாகிறது. அதுபற்றி நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று மகிந்த என்னிடம் கூறினார். “வடகிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக வாழ்வது எனக்கு தெரியும். அவர்களை பற்றிய அக்கறை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அண்மையில் இலங்கை வந்த சிறுபான்மையினர் தொடர்பான ஐநா அறிக்கையாளர் ரீடா ஐசக்கிடம், தென்னிலங்கை தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் போன்று, வடகிழக்கில் வாழும் சிங்கள சிறுபான்மையினரையும் நீங்கள் சந்தித்தீர்களா என நான் கேட்டேன்” என நான் மகிந்தவுக்கு பதில் சொன்னேன்.

உண்மையில் இந்நாட்டின் எந்த இடத்திலும் சிங்களவர்கள் மட்டுமே பெரும்பான்மை; தமிழ் பேசுபவர்கள் எங்கேயும் சிறுபான்மைதான், என்ற பாரம்பரிய பேரினவாத நிலைப்பாட்டை தளர்த்தி, வடகிழக்கில் வாழும் சிங்களவர்களை சிறுபான்மை என மகிந்த ராஜபக்ச அடையாளப்படுத்தியுள்ளார். இதை இதற்கு முன் எங்கேயும் அவர் சொன்னதாக நான் அறியவில்லை. இதை அவர் எங்கேயோ சொல்லி அது திரிபுப்படுத்தப்பட்டு என்னிடம் வந்து சேரவும் இல்லை. இதை அவர் நேரடியாக என்னிடம் சொன்னார். எனவே இது ஒரு முன்னேற்றகரமான நிலைப்பாடு என நான் நம்புகிறேன். இது ஒருபுறமிருக்க, மட்டக்களப்பு மங்களாராமய விஹாரதிபதி சுமனரத்தின தேரர் எப்போதுமே ஒரு குழப்பக்காரர்தான். அவர் புதிதாக குழப்பம் செய்யவில்லை. அவரை மகிந்த சந்தித்து, தனது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, உசுப்பி விட்டுள்ளார். இதைதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

உண்மையில், சுமனரத்தின தேரர் ஒரு சந்தர்ப்ப சுயநலவாதி என நினைக்கின்றேன். புலிகள் இருந்தபோது, இந்த சுமனரத்தின தேரர் புலிகளுடன் நட்புறவு கொண்டு, புலிகளின் மாவீரர் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தீபம் ஏற்றியதாக மட்டக்களப்பு எம்பிக்கள் சிறிநேசன், யோகேஸ்வரன், வியாழேந்திரன் ஆகியோர் கூட்டாக என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே தங்களது நிகழ்வுகளில் ஒரு பெளத்த துறவி பங்கேற்பது, தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மென்மேலும் வலுப்படுத்தும் என புலிகள் அவரை பயன்படுத்தியுள்ளார்கள். இன்று மகிந்த ராஜபக்ச அதே சுமனரத்தின தேரரை தனது அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்துகிறார். இதுதான் அரசியல். இதில் அகப்பட்டு தவிப்பது மட்டக்களப்பு தமிழ் மக்களும், அந்த கிராம சேவகரும்தான், என அமைச்சர் மனோ கணேசன் தன் முகநூலில் எழுதியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.