தமிழர் பிரச்சினையை தீரவிடாமல் தடுப்பதே கூட்டமைப்பின் அரசியல்
தமிழர் பிரச்சினையை
தீரவிடாமல் தடுப்பதே
கூட்டமைப்பின் அரசியல்
வீடமைப்புத் திட்டத்தை
எதிர்ப்பது பிச்சைக்காரன்
புண்ணுக்கு ஒப்பானது
வாசுகி சிவகுமார்
பிச்சைக்காரனின் புண்ணைப்போல தமிழ் மக்களின் பிரச்சினை தீரவிடாமல் தடுப்பதே தமிழ்த்
தேசிய கூட்டமைப்பின் அரசியலாகும் என்று அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
குற்றஞ்சாட்டினார். தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்து
நிம்மதியாக வாழ்வதை தமிழ்த் தேசி கூட்டமைப்பு விரும்பவில்லை. அதனாலேயே அவர்கள் தனது
வீட்டுத் திட்டத்தை நிராகரித்து நடைமுறைக்குச் சாத்தியமில்லா வீட்டுத் திட்டமொன்றைக்
கொண்டு வருகிறார்கள் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்.
வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியில் அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கூட்டமைப்பினர் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார்கள், செய்பவர்களையும்
அனுமதிக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர் சுவாமிநாதன், தம்மை எவர் எப்படி
சித்தரித்தாலும், தாம் மக்களின் பிரதிநிதியே அன்றி வெறுமனே அரசாங்கத்தின் பிரதிநிதி
அல்லவென்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களிடமிருந்த தன்னைப் பிரிப்பதற்காகவே சிங்கள அரசின் பிரதிநிதி என்ற
முத்திரையைக் கூட்டமைப்பினர் குத்துவதாகத் தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன்,
கூட்டமைப்பினர் எவ்வாறு சித்தரித்தாலும் மக்களுக்கான தனது பணிகளில் என்றுமே
குறைவிருக்காது என்றும் கூறினார்.
"கொழும்பில் பிறந்து வாழ்ந்தாலும் நானும் தமிழன்தான். மானிப்பாயில் 200 வருடங்கள்
பழைமையான வீடு எனக்கிருக்கிறது. நல்லூர் பூங்காவனத்திருவிழாவில்
உபயகாரராகவிருக்கின்றேன்.
எனவே, எதனைச் சொல்லியும் என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது" என்று தெரிவித்த
அமைச்சர், வடக்கில் கொண்டு வரப்பட்ட நான்கு முக்கிய திட்டங்களையும் கூட்டமைப்பினரே
நிறுத்தியதாகவும் மேலும் தெரிவித்தார். அமைச்சரின் முழுமையான பேட்டி ஏழாம்
பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.