புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 

பெருந்தோட்டப் புறங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்புத் திட்டங்கள்

பெருந்தோட்டப் புறங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்புத் திட்டங்கள்

பெருந்தோட்டப் புறங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் காரியாலயத்தில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது.

மலையகப் பெருந்தோட்டப்புறங்களில் கடந்த காலங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கடனுதவி மூலமாக நிர்மாணிக்கப்பட்ட சிலவீடுகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறு பூர்த்திசெய்யப்படாத வீடுகளை முழுமைப்படுத்துவதற்கான கடனுதவிகளை வழங்குவது தொடர்பிலும், முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிக கடன் வழங்கி வீடுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதுவரை தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 3900 வீடுகளுக்கு ‘பசுமை பூமி’ வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக தேசிய ரீதியில் கடனடிப்படையில் 25 வீடுகளைக் கொண்ட 200 கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்டப் புறங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்படவிருக்கின்ற ஒரு தொகுதி (25 வீடுகள்) தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் 2,50,000 ரூபா கடன் வழங்கப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். அத்துடன் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக 2,50,000 ரூபா இனாமாகவும், அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினுௗடாக நிர்மாணப் பணிகளுக்கான நிலம் தயார்படுத்தல், தேசியகட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கை பெறல் போன்ற ஆரம்பகட்ட வேலைகளுக்கு 90,000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமான குறித்த வீடமைப்பு தொகுதிகளுக்கு மின்சாரம், பாதை வசதிகள், குடிநீர் மலசல கூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தொழிலாளர்கள் அல்லாத அரச சேவையாளர்கள், தோட்ட சேவையாளர்கள், தனியார்துறை சார்ந்த சேவையாளர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் தகைமைக்கேற்றவாறு கடனடிப்படையில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலும் அதற்கான உதவிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறான ஒன்றிணைந்த வேலைத்திட்டத்திற்காக தேசிய வீடமைப்பு அமைச்சும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இணைந்து கூட்டு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை சமர்ப்பித்து அனுமதி பெறுவது தொடர்பாகவும் பேசப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பாலசூரிய, அதிகார சபையின் பொது முகாமையாளர் எச்.எம்.தயானந்த, அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் சுப்பையா கமலதாசன் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.