தர வரிசைப்படுத்தலில் தமிழ்மொழி மூல மாணவர்களும் உள்வாங்கப்படுவர்
க.பொ.த (சா/த), (உ/த) மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில்
தர வரிசைப்படுத்தலில் தமிழ்மொழி மூல மாணவர்களும் உள்வாங்கப்படுவர்
நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார் இராதாகிருஸ்ணன்
(எஸ். ஞானம்)
இனிவரும் காலத்தில் க.பொ.த சாதாரண தர, உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சைகளில் தமிழ்மொழி மூலமாகத் தோற்றி அதிகூடிய பெறுபேறுகளைப் பெறுகின்ற
மாணவர்களையும் தேசிய ரீதியில் தர வரிசைப்படுத்தி அவர்களுக்குரிய கௌரவத்தை
வழங்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர்
வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இதுவரை காலமும் இந்தத் தரவரிசைப்படுத்தலில் தமிழ்மொழி மூலமாகத் தோற்றும் மாணவர்கள்
புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளமை தொடர்பாக அமைச்சரிடம் சுட்டிக் காட்டியபோதே அவர்
இந்தத் தகவலைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாகப் பரீட்சைகள் ஆணையாளருடன்
பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் இது தொடர்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைச்
சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர், இந்தச் சிக்கலைத்
தீர்ப்பது தொடர்பில் எதிர்காலத்தில் தமிழ் ஆசிரிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தி பொருத்தமான வழிமுறையொன்றைக் கண்டறியவுள்ளதாகவும் குறிப்பிட்டார். வடக்கு
கிழக்கு மலையகம் கொழும்பு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் மேற்படி பரீட்சைகளுக்குத்
தமிழ் மொழி மூலமாகத் தோற்றுகின்ற மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றனர்.
எனவே, தரவரிசைப் படுத்தலில் இவர்களையும் உள்வாங்கி பரிசு கொடுக்கும் வகையில்
எதிர்கால நடவடிக்ைக அமையுமென்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.