அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியைச் சேர்ந்த யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ்,
நேற்றுச் சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த அமெரிக்கப்
போர்க்கப்பல், எதிர்வரும் 31ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் என்று அமெரிக்கத்
தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், போர்க் கப்பலில் கொழும்பு வரும் 900 அமெரிக்க கடற்படையினர்,
இங்கு இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் கடற்கொள்ளை எதிர்ப்பு, மனிதாபிமான உதவி மற்றும் முக்கிய
கப்பல் பாதைகளில் கப்பல்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்துவதற்காக,
கடற்பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, கடந்தமாதம், இலங்கைக்கும்
அமெரிக்காவுக்கும் இடையில் வொஷிங்டனில் நடத்தப்பட்ட கூட்டு கலந்துரையாடலை
அடுத்துஇந்தப் போர்க்கப்பல் கொழும்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.