பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவான அச்சுக்கலை பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து,
இன்று நவீன தொழில்நுட்பத்தின் அரவணைப்பில் புதிய கோணத்தில்
மிளிர்ந்துகொண்டிருக்கிறது.
உலகில் ஏற்பட்ட புரட்சிக்கும் மாற்றங்களுக்கும் காரணம் அச்சுக் கலையே. சீன நாட்டில்
கி.பி.1100 ஆம் ஆண்டு களி மண்ணால் உருவாக்கப்பட்ட சீன எழுத்துக்களைக் கொண்டு
அச்சுக்கலை உருவானது என வரலாறு கூறுகிறது. கி.பி.1436- 1440 ஆண்டுக்கிடையில்
ஜேர்மனியில் அச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஜோகன்ஸ் குட்டன்பர்க் உலக அச்சுக்கலையின்
தந்தை எனப்போற்றப்படுகிறார்.
15ஆம் நூற்றாண்டில் ஜேர்மனியில் தோன்றிய அச்சுக்கலை 16ஆம் நூற்றாண்டில்
பிற்பகுதியில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப இந்தியா வந்த போர்த்துக்கீசிய ஏசு சபையாரால்
கோவாவில் 1577 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. கையால் சுழற்றக் கூடிய இந்த அச்சு
இயந்திரத்தில் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சிறு ஜெபப்புத்தகங்களும், மத போதனைகள்
அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.
மத போதகரான என்றிக்காள் என்ற பாதிரியார் தமிழை நன்கு கற்று தமிழில் மத பரப்பு
நூல்களை எழுதினார். இவர் தமிழ் நாட்டில் புன்னைகாயல் என்ற இடத்தில் ஓர்
அச்சுக்கூடத்தை நிறுவினார். புன்னைக் காயலில் 1586 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த
அச்சுக்கூடத்தில் பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் பெயர்க்கப்பட்ட 669 பக்கங்களைக்
கொண்ட அடியார்களின் வரலாறு என்ற புத்தகத்தை அச்சிட்டார்.
மத போதகர் சீசன்பால்கு தரங்கம் பாடிக்கு வந்த பின்னர் ஒரு நாளைக்கு எட்டரை மணி நேரம்
தமிழ் கற்று, தமிழை பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். எனவே கிறிஸ்தவ மத பரப்புதலில்
தாய் மொழியும் அச்சகமும் ஒன்றிணைந்து அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்பதை நன்றாகவே
உணர்ந்திருந்தார். லண்டன் மாநகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கிய கிறிஸ்த கழகம் ஒரு
அச்சு இயந்திரத்தை சீகன் பால்கிற்கு அனுப்பி வைத்தது.
1712ல் தரகம் பாடியில் நிறுவப்பட்ட அச்சியந்திர துணையோடு தமிழ், ஆங்கிலம்,
போர்த்துகீசு, லத்தீன் ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்டன.
சீகன்பாலது தமிழில் மொழிபெயர்த்த வேதாகமத்தின் ஒரு பகுதியான புதிய ஏற்பாடு 1715ஆம்
ஆண்டு இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது. ஆசிய மொழிகளிலேயே முதன் முதலில் தமிழ்
மொழியில் தான் அச்சிடப்பட்டது.
காகிதத்தின் தேவை அதிகரித்ததால் தரகம்பாடிக்கு அருகில் உள்ள பொறையூரின் 1715ஆம்
ஆண்டு முதன் முறையாக மரக்கூழை கொண்டும் வைக்கோல்களைக் கொண்டு காகிதம் தயாரிக்கும்
ஆலையும், அச்சுமை தயாரிக்கும் நிறுவனமும், உருவாகியது. தரகம்பாடியில் செயல்பட்டு
வந்த அச்சகம் நூறு ஆண்டுகளுக்குபின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் சீகன்பால் வந்திறங்கிய 302 ஆவது ஆண்டு
ஜேர்மனியிலும் தமிழகத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய அரசு சீகன்
பால்கின் சேவை பாராட்ட முத்திரையும் வெளியிட்டது.
பழங்காலத் தமிழ் எழுத்துருக்கள் பற்றி இளைய சமூகத்தினர் அறிந்திருக்க
வாய்ப்பில்லையாயினும் அந்த எழுத்துருக்களைப் பார்த்த மாத்திரத்தில் அவற்றை
வாசித்தறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தமை நோக்கத்தக்கது.