புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
இலங்கையின் முதல் பெண் சரித்திர நாவலாசிரியையாக புகழ்பெற்ற ‘திக்கம்’ சிவயோகமலர்

இலங்கையின் முதல் பெண் சரித்திர நாவலாசிரியையாக

புகழ்பெற்ற ‘திக்கம்’ சிவயோகமலர்

(ஈழத்தின் முதல் பெண் சரித்திர நாவலாசிரியையும், ஏழாந்த தலைமுறைப் படைப்பாளியுமான அமரர் திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார் அமரத்துவம் அடைந்து 16.01.2016 ஆம் திகதியுடன் ஈராண்டுகளாகின்றன. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது)

இலக்கியம் படைத்துப் புகழ் பெற்ற அமரர் “திக்கம்” சிவயோகமலர் ஜெயக்குமார் வடமராட்சி மண்ணின் கலாசார பண்பாட்டு விழுமியங்களை மையமாகக் கொண்டு தனது பல படைப்புக்களை ஈழத்து இலக்கிய உலகுக்கு அளித்துள்ளார். “அடிமையின் காதலி” என்ற சரித்திர நாவல் மூலம் ஈழத்தின் முதல் பெண் சரித்திர நாவலாசிரியை என்று பெருமையைப் பெற்றவர். இவர் அமரத்துவம் அடைந்து 16.01.2016ஆம் திகதியுடன் ஈராண்டுகளாகின்ற போதிலும் அவரது படைப்புகள் பற்றி இன்றும் பாராட்டிப் பேசப்பட்டு வருகின்றது.

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் குறிப்பாகப் பெண் எழுத்தாளர்களில் தனியான முத்திரை பதித்துள்ளவர் மறைந்த “திக்கம்” சிவயோகமலர் ஆவார். இவர் வடமராட்சிப் பகுதியிலுள்ள அல்வாய் மேற்கு, “திக்கம்” என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

உலகளாவிய பெயரும், புகழும் பெற்றுத் தான் பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித்தந்த சிவயோகமலர் ஜெயக்குமார் 1950ஆம் ஆண்டு திக்கத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியார் கணேசுக்கும், சின்னம்மாவுக்கும் சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்தார். “திரவி” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இவர் திக்கம் மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் பின்னர் ஆறாம் வகுப்பில் இருந்து பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தர பாடசாலையிலும் உயர்தரம் முதலாம் வருடம் வரை கல்வி பயின்றார். பின்னர் மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இலக்கிய நிகழ்வுகள், இலக்கிய போட்டிகள் பலவற்றிலும் பங்கு கொண்டு பல பரிசில்கள் ஈட்டித் தான் படித்த கல்லூரிகளுக்குப் பெருமை தேடிக்கொடுத்தார்.

பின்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து கலைப் பட்டதாரியானார். இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது அரசியல் விஞ்ஞானப் பாடத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுத் தனது மாணவப் பருவத்திலேயே சாதனையாளராக உருவானார் என்றால் மிகையாகாது. பின் ஆசிரியத் தொழிலில் பிரவேசித்த இவர் பின்னர் தேர்தல் திணைக்களம், யாழ். தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி அரச அதிகாரி சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

1980ஆம் ஆண்டிலிருந்து இவரது சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள், ஈழத்துப் பிரபல தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. இவரது இலக்கியப் படைப்புகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன், சுடர்ஒளி, ஈழநாடு, தினபதி, சிந்தாமணி, சிரித்திரன், முரசொலி, ஈழமுரசு, தினமுரசு, லண்டன் தமிழ் உலகம், கற்பகம், அருள் ஊற்று ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகின. இவர் அமரத்துவம் அடைந்த பின்னரும் 2014 மார்ச் மாதத்தில் இருந்து அமரர் எழுதிய “காத்திருக்கப்போகிறாள்” என்னும் தொடர் கதை “ஒளி அரசி” மாத சஞ்சிகையில் பிரசுரமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க சேவையில் கணக்காளராகவும், உள்ளகக் கணக்காய்வாளராகவும் கடமையாற்றிய வடமராட்சி, கரணவாய் தெற்கைச் சேர்ந்த இவரது கணவர் எஸ். ஜே. ஜெயக்குமாரும் நாடறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளருமாவார். பிரபல ஊடகவியலாளர் ஒருவரைக் கணவராகப் பெற்ற பிரபல எழுத்தாளர் சிவயோகமலர் தனது குடும்ப வாழ்க்கையில் இலக்கியத் தம்பதியாக விளங்கியதில் வியப்பேதும் இல்லை.

சரித்திர நாவல் ஒன்றை எழுத வேண்டுமென்ற ஆர்வம் அவரது மனதில் நீண்ட காலமாக இருந்தமையால் நான்கு ஆண்டு கால முயற்சியில் “அடிமையின் காதலி” என்ற சரித்திர நாவலை எழுதிய முடித்தார். இச் சரித்திர நாவல் “தினகரன்” வார மஞ்சரியில் 1999ஆம் ஆண்டு 21 அத்தியாயங்களாகத் தொடர்ந்து வெளிவந்தது. இச்சரித்திர நாவல் என்றுமில்லாத அளவுக்கு இவருக்குப் பாராட்டுக்களைக் குவித்தது.

இச்சரித்திர நாவலே இவருக்கு ஈழத்தின் முதலாவது பெண் சரித்திர நாவலாசிரியை என்ற பெருமையை ஈட்டிக் கொடுத்தது.

1998ஆம் ஆண்டு வீரகேசரியில் வெளியான “பாவத்தின் சுவடுகள்” சிறுகதை கலாசார சமய அலுவல்கள் அமைச்சினால் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்பட்டு அப்போதைய கலாசார சமய அலுவல்கள் பிரதி அமைச்சர் பேராசிரியர் ஏ.வி. சுரவீரவினால் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருதும், பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

கலாநிதி க. குணராசா (செங்கையாழியான்) எழுதிய “ஈழத்துச் சிறுகதை வரலாறு” என்னும் ஆய்வு நூலில் “ஈழத்தின் தரமான பெண் எழுத்தாளர்களில் ஒருவரான இவரது சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

“மல்லிகை” மாதசஞ்சிகை 1999ஆம் ஆண்டு ஜனவரி மாத இதழில் (34 ஆவது ஆண்டுமலர்) அட்டைப் படத்தில் இவரது படத்தைப் பிரசுரித்துக் கௌரவித்துள்ளது. மல்லிகை 43ஆவது ஆண்டு மலரில் (ஜனவரி 2008) “ஈழநாடு” இதழின் “புனைகதைப் பங்களிப்பு” என்னும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையில் திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமாரை ஏழாந் தலைமுறைப் படைப்பாளியாகக் குறிப்பிட்டு இவரின் நல்ல சிறுகதைகளாக “அவள் அகதி இல்லை”, “மயங்குகிறாள் ஒரு மாது”, “மலர் தாவும் வண்டுகள்” வெளிவந்துள்ளன என விதந்துரைக்கப்பட்டுள்ளன.

1997ஆம் ஆண்டு பாரிசில் உள்ள தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரெஞ்சுக் கிளையினர் நடத்திய பாவலர் தெ.து. துரையப்பாபிள்ளை நினைவு அகில உலக சிறுகதைப் போட்டியில் இவரது “பிறந்த மண்” சிறுகதை முதற் பரிசைப் பெற்றுக்கொண்டது.

மோல்டே தமிழ் கலை, கலாசார மன்றம் பத்தாவது வருட நிறைவையொட்டி உலகளாவிய ரீதியில் நடத்திய நாடக எழுத்துப் போட்டியில் இவரது “புலம் பெயரும் பாசங்கள்” நாடகப் பிரதி முதற்பரிசைப் பெற்றது.

“தினகரன்” பத்திரிகையும் “துரைவி” நிறுவனமும் இணைந்து நடாத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய “சாமேளம்” சிறுகதை பரிசைப் பெற்றுக் கொண்டது. இச் சிறுகதை “பரிசு பெற்ற சிறுகதைகள் 1998” என்னும் நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ஒரே பெண் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

சிரித்திரன் சஞ்சிகை 1990ஆம் ஆண்டு நடாத்திய சித்திரச் சிறுகதைப் போட்டியில் இவரின் “வானம் பொய்க்கவில்லை” சிறுகதை முதற் பரிசைப் பெற்றது. யாழ். இலக்கிய வட்டமும், முரசொலி பத்திரிகையும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் “கல்லுக்குள் ஈரம்” என்னும் இவரது குறுநாவல் பரிசு பெற்றது. யாழ். இலக்கிய வட்டமும், முரசொலி பத்திரிகையும் இணைந்து நடத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டியில் இவரது “தேட்டம்” குழந்தைக் கவிதைகள் தொகுப்பு பரிசு பெற்றது.

வடமராட்சி மண்ணின் கலாசார பண்பாட்டு விழுமியங்களை மையமாகக் கொண்டு தனது பல படைப்புக்களை அமரர் திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள், நாவல்களில் இந்த வடமராட்சிப் பாரம்பரியமும், சமூக விழுமியங்களும் பரந்து காணப்படுகின்றன . வடமராட்சியில் வழங்கும் மொழிநிலை, பேச்சு வழக்குகள் இவரது படைப்புக்களிலே பிரதிபலிப்பது சிறப்பு அம்சமாகும்.

வடமராட்சியின் இலக்கியப் பாரம்பரியத்தில் “திக்கம்” சிவயோகமலர் பெண் எழுத்தாளர் என்ற வகையிலும், ஈழத்தின் முதலாவது பெண் வரலாற்று நாவலாசிரியை என்ற வகையிலும் ஒரு மையப் புள்ளியாகக் கொண்டு பார்க்கலாம்.

சப்பிரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சமூக விஞ்ஞான மொழிகள் பீடத்தினால் இவரின் சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், இலக்கியப் படைப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டு “திக்கம் சிவயோகமலரின் இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வு” என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்கும்வரை ஈழத்து இலக்கிய உலகில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். 'றுக்மாங்கதன்' என்னும் பெயர் கொண்ட ஏக புதல்வனின் தாயான இவர் தனது குடும்பத்திற்கும் ஈழத்து இலக்கிய உலகிற்கும் புகழ் சேர்த்து தனது 64ம் வயதில் மறைந்தது இலக்கிய உலகிற்கு துரதிர்ஷ்டமே எனலாம்.

உலகளாவிய ரீதியில் தனது எழுத்தாற்றலால் வடமராட்சி மண்ணுக்குப் பெருமையும், புகழும் சேர்த்த “திக்கம்” திருமதி சிவயோகமலர் ஜெயக்குமார் இலக்கிய உலகில் பல சாதனைகளைப் புரிந்து தனக்கென ஒரு தனியாப் புகழ் பெறும் இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது நினைவுக்கும், இலக்கியப் படைப்புக்களும் காலத்தால் அழியாத சுவடுகளாக என்றும் தடம் பதிக்கும். 

ஏ. என். எஸ். திருச்செல்வம் ஜே.பி

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.