மன்மத வருடம்
கார்த்திகை மாதம்
06ம் நாள்
ஞாயிற்றுக்கிழமை |
||
மலையக மக்களுக்கும் தனியாக அதிகார அலகுஅவசியம் என ம.ம.மு வலியுறுத்து
தேசிய இனப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும், அரசியல் தீர்வு பொறிமுறை உருவாக்கப்படும்போது அதில் மலையக மக்களுக்கும் தனியான அதிகாரப் பகிர்வு அலகு அவசியம் என்றும் சர்வ கட்சிக் குழுக் கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை அறியும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி குழுக் கூட்டத்திலேயே மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாத் தீர்மானத்தை ஏற்பதாக அரசு உறுதி வழங்கியுள்ளது. எனவே, அதில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச நீதிபதிகள் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்பைப் பெறுவது சிறந்ததாக அமையும். இதுபற்றி அரசு சாதகமாக பரிசீலிக்க வேண்டும். அதேவேளை, அரசியல் தீர்வு பற்றியும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பிரச்சினைகள் உருவாவதற்கு இனப்பிரச்சினை தான் முக்கிய காரணம். ஆகவே அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு அரசியல் தீர்வு காணப்படும் போது மலையக மக்களும் பங்குதாரர்களாக உள்வாங்கப்பட வேண்டும். அவர்களுக்கும் தனி அதிகாரப் பகிர்வு அலகு அவசியம் என்றார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |