தமிழ் இலக்கிய உலகம் புதுமைப் பித்தனுக்கு பிறகு புகழ்ந்து கொண்டாட வேண்டிய
இலக்கிய மேதையை தமிழ்ச் சமூகம் மறந்துவிட்டது என்று தான் கூற வேண்டும் இலங்கையில்
பிறந்த பிரமிள் தமிழகத்து இலக்கிய உலகில் சிம்மமாக திகழ்ந்த பிரமிள் என்பது அனைவரும்
அறிந்த திரு.மு.சிவராமு நமது ஈழ மண்ணை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் நீண்ட காலம்
தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த பிரமிளை நாம் நினைவு கூற வேண்டிய அவசியமாகும்.
மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் மகுடம்
தனது மூன்றாவது ஆண்டு சிறப்பு மலரை பிரமிளுக்கு மகுடமாக சூட்டி
பெருமைப்படுத்தியுள்ளது.
“நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகன்’ என்ற தலைப்பில் மகுடம் ஆசிரியர். வி.மைக்கல்
கொலின்....’ லக்ஷ்மிஜோதி, இலக்குமி, இளங்கோ, கெளரி, பூம்பொழில் வேலவன், பூம்பொற்கொடி
இளங்கோ, குகேந்திர அமுதன், டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமின், பிரமிள்பானு,
ஜீவராம், அஜீத்ராம் பிரமிள், பிரமிள் பானு சந்திரன், பானு அரூப் சிவராம், விக்ரம்
குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தர்மு சிவராம், இவை எல்லாம் இந்த
பிரபஞ்ச வெளியில் தனக்கென ஒரு இடம் தேடி அலைந்த சிவராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட
ஒரு மனிதன். தனக்கு தானே சூட்டிக்கொண்ட பெயர்கள்.
அவன் தரித்த நாமங்கள் போலவே அவன் ஈடுபட்ட துறைகளும் அதிகம். கவிதை, சிறுகதை, நாவல்,
நாடகம் விமர்சனம். எண் கணித சோதிடம் ஓவியம் தொலைக்காட்சி நாடகம், ஆன்மீகம், சினிமா,
மொழிபெயர்ப்பு, சிற்பம், டாரட் வாசிப்பு என பல்துறையிலும் முத்திரை பதிந்தவராக
மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதி புதுமைப்பித்தனுக்கு பிறகு தோன்றிய ஒரு
மகத்தான ஆளுமையாக, திகழ்கிறார் என ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடுகிறார்.
இன்றைய எழுத்தாளர்கள், இளந்தலைமுறையினர்க்கு பிரமிளின் ஆளுமையை எழுத்தாற்றலை, அவரது
சாதனைகளை ‘மகுடம்’ சஞ்சிகை சிறப்பாக எடுத்து காட்டியுள்ளது.
இன்று நாம் பாராட்டு அளவிற்கு பிரமிளை பாதுகாத்தவர் பேராசிரியர் கால சுப்பிரமணியம்
அவரது நேர்காணல் பிரமிளைப் பற்றி பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
“பாரதியும் புதுமைப் பித்தனும் இவருக்கு முன்னோடி இலக்கிய மேதைகள் பாரதி கவிதையிலும்
பத்திரிகை கட்டுரைகளிலும் சாதனை செய்தவர், சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் சாதனை
மகத்தானது.
அவரது கவிதையும் விமர்சனமும் குறைவானவை என்றாலும் கூர்மையானவை. பிரமிளின்
கவிதையும் விமர்சனமும் தமிழ் இலக்கியம் இதுவரை கண்டிராத நவீன கவிதையை உருவாக்குவதில்
அவரது முதன்மை பங்கை போலவே, தமிழின் நவீன உரை நடையை உருவாக்கியதிலும் பிரமிளுக்கு
பெரும் பங்கு உண்டு. அவரின் கதைகளில் சில உச்சத்தை தொட்டவை நாடகம் என்று தமிழில்
வெளியான பிரதிகளில் அவரது நட்சத்திரவாஸி நாடகப் பிரதியே நாடகம் என்பதற்காக முழு
நியாயத்தையும் பெற்றது. என்கிறார்.
இந்த முழுமையான பேராசிரியர் கால சுப்பிரமணியத்தின் பேட்டியை படித்தால் பிரமிளின்
இலக்கிய ஆளுமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மற்றும் ஒரு சுதந்திர கலைஞனின் ஏழ்மையும் ஆளுமையும்.... என்ற தலைப்பில் பிரமிளின்
இளமைக்கால நண்பர் இராஜ. தர்மராஜாவின் கட்டுரை பிரமிளின் இன்னொரு பக்கத்தை
அறிமுகப்படுத்துகிறது. இதை போல இன்னொரு பால்யகால நண்பர் எஸ்.வீ.சங்கரலிங்கத்தின்
கட்டுரையும் மிக முக்கியமானது.
தமிழ் புனைக்கதை வரலாற்றில் பிரமிள் என்ற பேராசிரியர் செ.யோகராசாவின் கட்டுரை மகுடன்
சஞ்சிகையில் பிரமிளுக்கு மேலும் ஒரு மகுடத்தை சூட்டுகிறது. கலை இலக்கிய சமூக
பண்பாட்டு காலாண்டிதழான மகுடம் இந்த மூன்றாண்டுகளில் ஒன்பது இதழ்களை பிரசவித்துள்ளது.
அவை ஒவ்வொன்றும் படித்து பாதுகாக்க வேண்டிய இதழாகும். இன்று உயர் கல்வி கற்கும்
மாணவர்களிடையே தேடுதல் மிகக் குறைவு, வாசிப்பும் மந்த நிலைதான், நான் சந்தித்த பல
ஆசிரியர்கள் பத்திரிகைகள் கூட வாசிப்பதில்லை அவர்கள் மகுடம் போன்ற சஞ்சிகைகளை தேடி
படித்தால் மாணவர்களுக்கு பல இலக்கிய தகவல்களை தர முடியும்.