உலகை உலுக்கிய சிறுவனின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

வாழ்க்கைப் பயணத்தை ஏதேனும் ஒரு நாட்டில் தொடர சிரியாவிலிருந்து கடல் வழியாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று கிரீஸ் தீவு அருகே கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவன் தான் மூன்றே வயதான ஐலன். அவனோடு சேர்ந்து அவன் தாயும் 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர்.

இந்த நிலையில் 3 வயது குழந்தையான ஐலன், கடற்கரை மணலில் முகம் புதைத்தபடி வெறும் சடலமாகக் கிடக்கும் புகைப்படம், உலகின் மெளனத்தை அசைத்து பார்க்கத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் இறந்த மூவரின் உடலும், அவர்களது சொந்த ஊரான சிரியாவின் கொமானியில் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் சிறுவனின் தந்தை அப்துல்லா, தன் குடும்பத்தினரின் உடல்களைக் கண்டு கதறி அழுத காட்சி, இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.