தமிழர் பண்பாட்டுக் கலை வடிவமாம் நாட்டுக்கூத்தை வளர்த்தெடுப்போம்
தமிழர் பண்பாட்டுக் கலை வடிவமாம்
நாட்டுக்கூத்தை வளர்த்தெடுப்போம்
குருநகர் அண்ணாவி அன்ரனி
உங்கள் கலையுலக பிரவேசம் பற்றிச் சொல்லுங்கள்?
1961ஆம் ஆண்டு ‘வாழ்க்கையின் புயல்’ என்னும் நாட்டுக்கூத்தில் முழுக்கதாபாத்திரம்
ஏற்று நடித்தேன். அப்போது எனது வயது 12. அந்தக்காலத்தில் முழு இரவும் கூத்தாடும்
காலம். நான் இரவு முழுவதும் நடிப்பேன். இது தான் என்னை கலை உலகிற்கு கொண்டு வந்த கதை.
எனது தாயார் மூத்த சகோதரர் மிருதங்க வித்துவான் அமரர் ரீ.பாக்கியநாதன் அமரர் ரீ
யோசப் (கட்டப்பொம்மன்), ரீ.பிலிப் அண்ணாவியார் சாமிநாதன் கலையார்வன் கு.ராயப்பு,
சி.எம்.நெல்சன், அண்ணாவியார் பேக்மன் ஜெயராசா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இதுவரை எத்தனை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களில் பங்கெடுத்துள்Zர்கள்?
ஏறத்தாழ 30 நாடகங்களிலும் 50க்கும் மேற்பட்ட கூத்துகளில் பங்கு பற்றியுள்ளேன்.
அவற்றில் சில ‘குமுதல்’, ‘நிராசை’, ‘திருந்திய உள்ளம்’, ‘பொறுமையின் எல்லை’,
‘சாம்ராட் அசோகன்’, ‘மலர்ந்த ரோஜா’, ‘யூலியஸ் சீசர்’, ‘குமணன் காணாதூரம்’,
‘போர்க்களம் களம் தந்த களங்கம்’, ‘புவலையம் புகுந்த புனிதன்’ போன்ற பல நாடகங்களும்
‘சுழியார்’, ‘செபஸ்ரியார்’, ‘மூவிராசாக்கள்’, ‘தர்மசீலன்’, ‘யூதகுமாரன்’, ‘செந்தூது’,
‘புரட்சித் துறவி’, ‘வீரமாதேவி’, ‘சங்கிலியன்’, ‘யாழ்பாடி’, ‘கம்பர் மகன்’ போன்ற பல
கூத்துக்கள்.
நாடகங்களை பயிற்றுவித்திருக்கின்aர்களா? அவை எவை?
‘திருந்திய உள்ளம்’, ‘கள்ளோகாவியமோ’ (நகைச்சுவை இசை நாடகம்) ‘பொறுமையின் எல்லை’,
‘மலர்ந்த ரோஜா’, ‘துன் பத்தின் பின்’ போன்ற வையும் ‘போர்க்களம்’,’மூவிராசாக்கள்’, ‘பத்துக்கன்னியர்’,
‘மலைமேற்கொலை’, ‘தேவசகாயம்பிள்ளை’ போன்ற தென்மோடி நாட்டுக்கூத்துக்களையும்
பயிற்றுவித்துள்ளேன்.
கலைத்துறை சேவைக்காக கிடைத்த பட்டங்கள் பாராட்டுக்கள் எவை?
‘திருந்திய உள்ளம்’ நாடகத்தில் சிறந்த நடிகனாகவும், ‘புரட்சித் துறவி’ சிறந்த
நாட்டுக்கூத்தாகவும், ‘சாம்ராட் அசோகன்’ நாடகத்தில் சிறந்த நடிகனாகவும்
தேவநாயகம்பிள்ளை நாட்டுக்கூத்தில் அண்ணாவியார் பட்டமும், பொன்னாடையும் போத்தி
கெளரவித்தார்கள். 2004ல் குருநகர் யாகப்பர் கலை மன்றம் ‘அண்ணாவியார்’ பட்டமும்
பொன்னாடையும் 2005ல் யாழ். பிரதேச செயலகம் பொன்னாடை போத்தியும், 2007ல்
கலைக்காற்றிய சேவைக்காக திருமறை நாட்டுக்கூத்து மன்றம் கெளரவிப்பும் பொன்னாடையும்,
2008ல் குருநகர் நாட்டுக்கூத்து மன்றம் பதக்கமும், பொன்னாடையும், 2011ல் யாழ்.
பிரதேச செயலகத்தால் ‘யாழ்ரத்னா’ விருதும், 2012ல் ‘கலாபூசணம்’ பட்டமும்
வழங்கப்பட்டன.
தொய்வடைந்துள்ள நாடக உலகை தூக்கி நிறுத்துவதற்கு நீங்கள் கூறுவது?
அக்காலத்தில் எமது குருநகர்ப் பகுதிகளில் பல நாடக, நாட்டுக்கூத்து மன்றங்கள் இயங்கி
வந்தன, நாடக நாட்டுக்கூத்து போட்டிகளும் நடத்தப்பட்டன. இன்று அப்படி ஒன்றும்
இல்லாமலே போய்விட்டன. அது கவலைக்குரிய விடயமாகும். எமது சமுதாயத்தில் சினிமா,
தொலைக்காட்சி சின்னத்திரை நாடகங்கள் ஊடுருவிவிட்டன. இன்றைய காலங்களில் நாடகத்தையோ
நாட்டுக்கூத்தையோ எழுதுவதற்கும் பயிற்று விப்பதற்கும் திறமைசாலிகள் இல்லை.
தமிழர்களின் பண்பாட்டுக் கலை வடிவமான நாட்டுக்கூத்தை அழிந்துவிடாமல் சிரமங்கள்
மத்தியிலும் முன்னெடுக்க வேண்டுமென பரந்து வாழும் கலைஞர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
இறுதியாக நீங்கள் கூற விரும்புவது?
பாரம்பரிய இயலிசை. நாடக வடிவமான நாட்டுக்கூத்தை பயிற்றுவிக்கும் அண்ணாவிமார்கள்
தாளநயத்தை மிகவும் கவனிக்க வேண்டும். தற்போதைய கலைஞர்களிடையே அந்தக் குறைபாடு
இருந்து வருகிறது. அண்ணாவியார் சாமிநாதன், பேக்மன் ஜெயராசா போன்ற பழம் பெரும்
கலைஞர்கள் மத்தியில் பழமை வாய்ந்த நாட்டுக்கூத்து மெட்டுக்களையே மரபு கெடாமல்
நவீனப்படுத்தி ஆடும் ஆற்றல் இருந்திருக்கிறது. மேலும் தொலைக்காட்சிப்பெட்டியையே
நம்பி இருக்கும் எமது இளைய சமூகத்தினரை திசைதிருப்ப நடிப்பிலும், பாடும்
மெட்டுக்களிலும் புதுமையை புகுத்தி கேட்போர் பார்ப்போர் மத்தியில் விழிப்புணர்வை
தோற்றுவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது எதிர்காலத்தில் நமது பாரம்பரிய
கலை வடிவமான நாட்டுக்கூத்தை அழிய விடாமல் காப்பாற்ற முடியும் என்பது எனது
கருத்தாகும்.