முதிர் கன்னிகளின்
முந்தானை கனவுகள்
முழு நனவாகும்!!
எட்டி நின்ற நலமெலாம்
எம் வீட்டுக்கு வந்து
விருந்து வைக்கும்!
வலிக்கொரு வழிகிடைக்கும்!
கொடுக்கும் கை கொடுக்கும்!!
இப்படி எண்ணிலா
இனிய கனவுகளின் தொகுப்பு
நாளைக்கு நாளை என்ற
நாளுக்கு விடிவேயில்லை!?
இன்பமெல்லாம்
இலங்கும் ‘தை’யில் என்றார்
எந்த ‘தை’ அதுவென்று
எவராவது சொல்லி வைத்தாரா??
தொழிலோ? தொல்லையோ?
- பூகொடையூர், அஸ்மா பேகம்
அறியாமல் சுவைத்து
அவஸ்தைப்படும்
மருந்தாகியது
இந்த வேலை பார்க்கும்
வேண்டாத வாழ்வு
உபாதைகள் கடந்து,
உயர்வுகள் உயிரிழந்து
குடும்பமும், தொழிலுமாய்
இரு முனைத் தாக்குதல்
வாழ்வு
தாரமென்ற
பல குறையும்,
தாயென்ற பல குறையும்,
தொழில் புரிந்து திரும்புகையில்
தொலைந்து போகும் நிம்மதி
எவருக்கும் திருப்தியில்லை
எனக்கும் திருப்தியில்லை
கஷ்டங்கள் நீங்கவென்றே
இஷ்டம்போல்
தொழில் செய்து
நஷ்டம் போனது யாவும்
வாழ்வு நொந்தது நாளும்
வீட்டிலும் தொழிலிலுமாய்
இயங்கி இயங்கியே
இயக்கமில்லா
இயந்திரமாய் இதயம்
வீட்டு வேலைகள்
முதுகின் மேல் சுமையாகும்
தொழிலில் எப்போதும்
மூளை ரணமாகும்
சதக்காசும் மிச்சமின்றி
சதாவும் சுழன்று செல்லும்
மாதக் கடைசிகள் என்னை
மனமின்றி
மிரட்டிச் செல்லும்
சமத்துவம் வேண்டாமே,
சாதனைகள் வேண்டாமே
விட்டுவிடுங்கள்
வீட்டில் என்னை
மனையாள மகிழ்வாக
நிரந்தரம்
- பவித்ரா, கண்டி -
வாழ்வும் சாவும் சந்தித்த வேளை
வாழ்வு மரணத்திடம் கேட்டது!
எனக்கு
மனிதர்கள் முத்தமிடுவதன்
மகத்துவம் என்ன?
உனக்கு
உமிழ்ந்து துப்புவதிலுள்ள
உண்மை என்ன?
மரணம் மர்மமாய்ப் புன்னகைத்தது!
நீ
ஓர் அழகான பொய்
உன்னை ஆராதிக்கிறார்கள்!
நான்
ஓர் அதிர்ச்சிதரும் உண்மை
அடித்து விரட்டுகிறார்கள்!
இந்த மானிடர்களே
இப்படித்தான்
உண்மையை ஒத்துக்கொள்வதில்லை!
ஆனால்
அவர்களுக்குத் தெரியாது
நீ வெறும் நீர்க்குமிழி
நான்தான் நிரந்தரம்!
கானல் நீர்
- எம்.எல்.சுந்தர், சந்திவெளி -
சாஸ்திர சம்பிரதாய மென்பது
கானல் நீர் கொண்டு
கங்கை யொன்று உருவாக்குவது போன்றது
முன்னோர் சொன்னதைக் கொண்டு,
இன்றுடன் முடிச்சுப் போடுவது
முட்டாள் தனமானது
ஆசாமிகள் சாமிகளாவதும்,
அருவருடிகள் துறவிகள் போலாவதும்,
அன்றாடம் நடக்கும் நாடகமே
தன் வேலை சேற்றினில் என்றபோதும் - அப்பா
தன்மகன் சான்றோனாகக் கனா கண்டிடுவார்
மண்மேலே ஆற்றுகின்ற தன்பணியில் - அப்பா
மாண்புடனே பிறர்வாழ தனையழிப்பார்!
அப்பாவும் அம்மாவும் இருந்தால் ஒப்பேது? - இங்கு
அப்பாக்கியம் பெற்றவர்க்கே நற்பேறு
அப்பாவை அம்மாவை இழந்தால் இப்பாரில் - நாம்
எப்பேறும் உயர்வுமடைந்துதான் சிறப்பேது?
மறக்கத்தான் நினைப்பேனோ?
- த. ராஜ்சுகா, தலவாக்கலை
என்னை உனக்கு மறந்து போயிருக்கலாம்
எதுவும் நினைவில் இல்லாமலிருக்கலாம்
விண்ணை நோக்கி உயர்ந்த நிலையில் - என்னிடமிருந்து
விடுதலையை நீயும் உணர்ந்திருக்கலாம்...
இலைமறைத்து பழுக்க வைத்திருந்தேன்
உனக்கெனக் கனிகளைத் தூவ
நீ தேடித், தேடி பழங்கள் பெருக்கிய பருவங்கள்
சொர்க்கமாய் இருந்திருக்கும் என் காலடி
பின் வந்த நாட்களில்...
நெருக்கடிகளின் பேரிரைச்சல்
உன் ஆன்மாவை கொலை செய்யும் அளவு வர
இருப்பை சோதிக்க வந்து விட்டாய்
தவம் என்றதும், வரம் என்றதும்
உன் பாசாங்குகளின் மாயை ஆயிற்று
அர்த்தமற்ற ஒரு முற்றத்தில்
இருப்பை தக்கவைப்பது
என்றைக்கும் சாத்தியமில்லை என
உணர்கையில் வலி அடர்ந்து
வேர்வரை விகாசிக்கின்றன
என்னைத் தேடியலைந்து தோற்றுத் திரும்பும்
பறவைகளிடம் சொல்லிவை
வாழ்வின் சூனியங்கள் கொடுமையானதென்று
உன் மார்பில் ஏறியமர்ந்ததாகவே
எண்ணிப் புகையும் உன் மனதிலிருந்து
சாம்பலென கூடத் தள்ளுவதில்தான்
சந்தோஷம் எனில் கொளுத்திவிடு
வீழ்த்திய உன் முன்னால் விறகென எரிகிறேன்