நந்தன வருடம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 27
SUNDAY OCTOBER 14, 2012

Print

 
ஆசானே! நீ வாழ்க...!

ஆசானே! நீ வாழ்க...!

கல்வி எனும் மூன்றெழுத்தை கற்பிப்பதற்காய்
கலங்கரை விளக்காய்த் திகழும்
கனிவான ஆசானே! நீர் வாழ்க!

பிறர் கற்பதற்காய் தன் வாழ்வை
தானம் செய்யும் ஆசானே! நீ வாழ்க!

எதிர்கால சந்ததிக்காக என்றும் அயராது
உழைக்கும் அன்பில் நிறைந்து
அறிவில் நிறைந்த ஆசானே!....
என்றும் நீர்
வாழ்க!.....
வாழ்க!......

எம்.ஐ.இஸ்ரத் பானு

தரம் - 04

கா/துந்துவ மு.ம.வி

துந்துவை, பெந்தோட்டை


 

“The colour of paradise”

ஒக்டோபர் 01ம் திகதி சிறார்களுக்கே உரிய தினமாகையால் அவர்களின் கொண்டாட்டத்திற்கு அளவேயில்லை அதுவும் திரைப்படம் பார்ப்பதென்றால் சந்தோஷம் பன்மடங்கு தொற்றிக் கொள்ளும் அவ்வாறான ஒரு அரிய சந்தர்ப்பம் இம்முறை எம் சிறார்க்கும் கிட்டியது. அதன் பயனாக இலங்கைத் திரைக் கூட்டுத்தாபன திரையரங்கில் சிறுவர் தினத்தன்று சிறுவர்களுக்கான ஈரானியத் திரைப்படம் திரையிடப்பட்ட போது அதைப் பார்க்கச் சென்றோம். (“The colour of paradise)என்று தலைப் பிடப்பட்டிருந்த அப்படத்தின் ஆரம்பமே மனதை உருக்கும் ஒரு காட்சியாக அமைந்திருந்தது.

ஏனெனில் பார்வைப்புலனற்ற சிறுவர் கள் கல்வி கற்கும் விடுதியுடனான ஒரு பாடசாலையில் நடைபெறும் ஒரு சம்பவத்துடனே காட்சி ஆரம்பிக்கின்றது.

சாதாரண மாணவர்களிருந்தும் முற்றிலும் வேறுபட்ட ஒரு பிரிவினர், அதில் அவர்கள் பிறையில் ((BRAILLE) (கண்பார்வை யற்றோர் எழுத்துக்களை எழுதும் முறை) அதற்குப் பயன்படுத்தப் படும் விசேட கடதாசி, அவர்கள் எழுத்துக்களை இனங்கண்டு வாசிக்கும் முறை என்பனவும் தெளிவாகக் காட்சிக்குள் உள்வாங் கப்பட்டிருந்தன. இது ஒரு புது அனுபவமாக இருந்த அதேவேளை இயற்கைக் காட்சிகளுடன் பின்னிப் பிணைந்து ஒவ்வொரு காட்சியமைப் பும் பார்த்துப் பார்த்து சிலையைக் கவனமாகச் செதுக்கும் சிற்பியாய் மிக நேர்த்தியாக இயக்குனரால் செதுக்கப்பட்டிருந்தது.

மனிதாபிமானம் மேலோங்கி நிற்கும் காட்சிகள், படத்தின் கதாநாயகனாக வரும் முஹம்மத், சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுவனின் முகம் காட்டும் உணர்ச்சிகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்க முடியாது அவ்வளவு அற்புதமாக பார்வையிழந்திருந்தும் கூட்டிலிருந்து கீழே விழுந்த, சிறகுகள் கூட ஒழுங்காக முளைத்திராத ஒரு குருவிக் குஞ்சின் மரண ஓலம் கேட்டு தட்டுத்தடுமாறிய படி தடவித்தடவியே அதைத் தேடிப்பிடித்து மரத்தின் கிளையொன்றிலிருந்து அதன் கூட்டில் பத்திரமாக வைத்த பின் அதன் கீச்சிடலில் ஏற்பட்ட மாற்றம் அதைக் கேட்டு அவன் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி முஹம்மதின் ஒவ்வொரு செயலிலும் இவ்வாறே இரசிப்பதற்கும் இரக்கம் காட்டுவதற்கும் பார்வையின்மை ஒரு தடையே அல்ல என்பதை உணர்த்தி நிற்கின்றது.

முஹம்மதின் பாட்டியாக வரும் மூதாட்டி தனது மகனுடனான கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருக்கும் போது கூட சேற்றில் துடிதுடித்தபடி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த ஒரு மீனைக் கவனமாகப் பிடித்து நீர் நிலையொன்றில் விடும் காட்சியொன்று மனிதாபிமானத்தை உணர்த்தும் காட்சிகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் தமது கதாபாத்திரம் உணர்த்தும் மிகச் சிறப்பாக அவர்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்த விதம் ஒரு திரைப்படத்தை பார்க்கின்றோம். என்ற உணர்வை வர விடாமல் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சியாகவே கருதத் தோன்றியது.

படத்தின் உச்சக்காட்சியாக சிறுவன் ஆற்று நீரில் அடித்துச் சென்று கொண்டிருக்கும் காட்சியில் நீரின் ஓசை, அது பாய்ந்து செல்லும் வேகம் மிக யதார்த்தமாக அமைந்த அதேவேளை, சில சமயங்களில் நீர் வரும் வேகத்தில் திரையை விட்டு வெளியே வந்து நம் மீது பாய்ந்து விடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது. படத்தின் சில காட்சியமைப்புக்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மொத்தத்தில் திரைப்படம் முடிந்த போது பார்வையற்றவர்களிடம் இவ்வாறான மனிதாபிமானம் இருக்குமென்றால் இறைவனின் அருளாள் எவ்வித உடல் குறைபாடுகளுமற்றவர்களாகவுள்ள எம்மிடம் எவ்வளவு மனிதாபிமானம் இருக்க வேண்டும்? என்ற ஒரு சிறந்த பாடத்தைக் கற்றுத் தந்தது.

இத்திரைப்படத்தை ஏற்பாடு செய்து அதனை கண்டுகளிக்கும் வாய்ப்பை எமக்களித்த ஈரான் இஸ்லாமிய குடியரசு கலாசார நிலையத்துக்கு எமது நன்றிகள்.

திருமதி எம்.என்.என். ஸிஹானா

(ஆசிரியை)

கைரிய்யா முஸ்லிம் பெண்கள் பாடசாலை

கொழும்பு - 09



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]