பேச்சு உடனடியாக ஆரம்பிக்கும் அறிகுறி எதுவும் இல்லை, அரசுதான் பேச்சுக்கான முன்
முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறான முயற்சிகள் எதனையும் அரசு இதுவரை
மேற்கொள்ளவில்லை. பேச்சு இடைநிறுத்தப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. மீண்டும்
பேச்சை ஆரம்பிப்பதற்கான செய்திகள் எவையும் அரசிடம் இருந்து எமக்குக் கிடைக்கவில்லை
எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.
சம்பந்தன் தெரிவித்தார்.
அரசுடனான பேச்சுக்களில் இருந்து கூட்டமைப்பு விலகிக் கொள்ளவில்லை. அரசுதான்
தன்பாட்டில் பேச்சை இடைநிறுத்தியது. எனவே அவர்கள் தான் அதனை மீள ஆரம்பிப்பது
தொடர்பிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது மக்களின் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கான பேச்சுக்களுக்கு நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம் என்றும்
குறிப்பிட்டார் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை. பேச்சு
தடைப்பட்ட இடத்தைத் திருத்தியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மொத்தத்தில்
பேச்சை ஆரம்பிப்பதற்கான புறச் சூழலை அரசு உருவாக்கவில்லை.
இவ்வாறானதொரு நிலையில் பேச்சை மீண்டும் ஆரம்பிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நல்ல தொரு சமிக்ஞையை வெளியிட்டுள்ளது என்றார்.