எக்ஸ்பிரஸ் மணி சேவையுடன் இணைந்து கொமர்ஷல் வங்கி புதிய இணைய சேவை ஒன்றைத்
தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. கடல் கடந்த நாடுகளிலிருந்து விரைவாக பணத்தைப்
பெற்றுக்கொள்வதை மேலும் ஆற்றல் மிக்க வகையில் விரைவுபடுத்துவதை நோக்காகக் கொண்டு
இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கென எக்ஸ்பிரஸ் மணி முறைமையோடு வங்கியின் முறைமை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது
ஒரு உலகளாவிய பணப்பரிமாற்ற முறையாகும். இலங்கையில் வெளிநாடுகளில் இருந்து பணம்
பெற்றுக்கொள்பவர்களுக்கு துரித வேகம், நம்பகத்தன்மை, வசதி என்பனவற்றை வழங்கும்
வகையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ்மணி வழியாகப் பணத்தைப் பெறுபவர்கள் இலங்கையில் கழிவுகள், கட்டணங்கள்,
தரகுகள் எதுவுமின்றி கொமர்ஷல் வங்கியின் நாடு தழுவிய 213 சேவை நிலையங்கள் ஊடாக
உடனடியாக அதைப் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றுள் சில வருடம் 365 நாட்களும்
திறந்திருப்பவை.
கட்டுநாயக்கவில் வங்கி செயற்படுத்தி வரும் 24 மணி நேர வங்கிக் கிளை மற்றும் 365 நாள்
வங்கிச் சேவை நிலையங்கள் என்பனவற்றுக்கு மேலதிகமாக பயனாளிகளின் நன்மைகருதி தெரிவு
செய்யப்பட்ட கிளைகளில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுபவர்களின் நன்மை கருதி விசேட
கருமபீடத்தையும் வங்கி செயற்படுத்துகிறது என்று பண்டாரநாயக்க மேலும் கூறினார்.
இந்த இணைய சேவையானது பணத்தை அனுப்புவதிலும் அதனை இலங்கையில் பெற்றுக்கொள்வதிலும்
கால தாமதத்தை வெகுவாகக் குறைக்கின்றது. பணத்தை அனுப்புகின்ற போது அதை
அனுப்புகின்றவருக்கு 16 இலக்கங்களைக் கொண்ட ஒரு அடையாளக் குறியீடு வழங்கப்படும்.
அதை அவர் இலங்கையில் உள்ளவருக்கு அனுப்ப வேண்டும். இந்த இலக்கம் கிடைக்கப்பெற்றதும்,
அதை அவர் உடனடியாக கொமர்ஷல் வங்கியின் எந்தவொரு கிளையிலாவது சமர்ப்பித்து உரிய
பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி அறிவித்துள்ளது.
இரு தரப்பினருக்குமான இந்த ஒருங்கிணைப்புக்கு முன்னர் எக்ஸ்பிரஸ் மணி ஊடான பணப்
பரிமாற்றங்கள் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதிக்கு ஒரு தடவையே கொமர்ஷல் வங்கி
முறைமையில் தரவேற்றம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஒருங்கிணைப்பின் பின்னர்
பாதுகாப்பான புதிய இணையத்தள முறைகள் ஊடாக கொமர்ஷல் வங்கியால் மனிதத் தலையீடுகள்
எதுவுமின்றி உடனடியாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.
மேலும் இந்த பிணைப்பின் மூலம் எக்ஸ்பிரஸ் மணியின் உலகளாவிய 80000 அங்கீகரிக்கப்பட்ட
நிலையங்கள் ஊடாக பணத்தை அனுப்பிவைக்கவும் முடியும்.