அவள்மீது என்பார்வை பட்டு
என்மீது அவள் பார்வை தொட்டு
பார்வைக்குள் பார்வை பட்டுத்தெறித்து
முகிழ்ந்தது என்காதல் ஒளிப்பிழம்பு.
இரவெல்லாம் என் இதயம் ஒளியில்
ஏதேதோ பிதற்றினேன் நித்திரையில்
அவள் கூட அப்படித் தானாம்
அவள்கூற நான் நெகிழ்ந்தேன் பின்னாளில்
காணாத நாட்கள் எல்லாம் கசக்கும்
காய்ச்சல் குணம் மண்டதுபோல் வியர்க்கும்
வீணாக தோழர்களைச் சினக்க - நட்பில்
விரிசல் கூட தோன்றிட எத் தணிக்கும்.
பரீட்சைக்குத் தோற்றும் சிறுபிள்ளை
பாடத்தை மனனிப்பான் போல
ஏதெதையா மனப்பாடம் செய்வேன் - அவள்
எதிர் வந்தால் வாய்குறை விழிப்பேன்!
மெளனத்தில் பிறந்தது என்காதல்
மரணிக்க மாட்டாத நினை வலைகள்
விழிவாசல் எதிர்கொண்ட நேசம் - நான்
விழிமூடும் வரைஎன்னைத் தொடரும்
இருபதில் என்காதல் சுவைத் ‘தேன்’ - அதை
அறுபதில் அசைபோட்டு மகிழ்ந்தேன்
இணையமும் செல்போனும் இணைக்கும்
இக்காலக் காதல் என் காதல்போல
சுவைத் ‘தேனா’? காலா காலம் - இல்லை
சுவை குன்ற துப்பிவிடும் ‘சூயிங்கம்’ தானா?
பொழுது புலரும் புலம
- ஜின்னாஹ் சரிபுத்தீன் -
வான்சிவந்த கம்பளமாய் ஒளிரக் காலை
வாழ்த்தொலித்துக் கடலலைகள் முரசந் தட்ட
தேன்சிந்தி இதழ்விரிக்கும் தண்ட லைமேல்
துயில்கொண்ட தாமரைகள் வண்டு பாட
கான்மரத்துக் கொம்பர்களில் குயில்க ளொன்றிக்
கானமழை பொழியுமிசை காற்றின் மேவக்
கூன்நிமிர்த்திச் சிறகடித்துச் சேவல் கூவக்
கொற்றவன் போல் நெஞ்சுயர்த்திக் கதிரோன் வந்தான்
காலைமலர்ந் துலகுதுயில் எழுப்ப வெய்யோன்
காய்வதெங்கள் கிழக்கிற்றான் அமுத மன்ன
தூயதமிழ் மொழிவதுமித் தமிழ்மண் ணிற்றான்
தொன்மையுற வோ(டு) இந்து முஸ்லிம் மாந்தர்
நேயமொடு பேசுமொழி தமிழால் ஒன்றி
நோவினைகள் ஒருவர் பிறர்க் கிளைக்கா தேயோர்
தாயீன்ற மக்களென வாழ்ந்த திந்தத்
திருமண்ணில் தாமென்னில் வரலா றன்றோ
ஒருபுறத்தே கடலன்னை தொட்ட ணைக்கும்
ஒன்றன்பின் ஒன்றாக அலைகள் தாவும்
பெருகிவரும் புனல்தழுவும் நண்டுக் கூட்டம்
போட்டியிட்டே தரைநோக்கி வளைக ளுள்ளே
சொருகியுடல் தனைமறைத்து மெல்ல மெல்லத்
தலையுயர்த்தும் கண்ணிரண்டும் மின்னும் இந்த
அரியவெழிற் காட்சிதனைக் கண்கள் காண
அகம்பொலியும் அஃதெம்மண் அழகின் கூறே
வான்மதிவிண் பூரணமாய்க் காயும் நாளில்
வாவிகளில் உறைகின்ற உயிரி னங்கள்
தேனாகச் செவியினிக்கக் கானம் பாடும்
தெவிட்டாத மகிழ்வையுந் தூண்டும் எங்கும்
காணாத புதுமையிது கிழக்குக் கென்றே
கொண்டவரம் எனில்மிகையே இல்லை இஃதை
வானாளில் ஒருமுறைதான் எனிலுங் கேட்க
வேண்டாவோ பிறப்பின்பே றாகு மன்றோ
பிட்டுக்கு மாவிடையே தேங்காய்ப் பூவாய்ப்
பிரித்தெடுக்க உற்றபடி சேர்த்து வைக்கும்
மட்டுநகர் மக்கள் தம் வழக்கம் போல
மக்களிங்கே ஒற்றுமையாய் அடுத்த டுத்தே
ஒட்டுமொத்த மாகமுஸ்லிம் தமிழர் என்றே
ஒன்றியொன்றி வாழுகின்றார் பல்லாண் டாக
பிட்டிடையிற் பிரிந்தாலும் பிரியார் ஒன்றிப்
பேசுமொழி தமிழென்ற பொதுமை யாலே
சாதியின் மதபேதம் எமக்குள் ளில்லை
சமயத்தால் வேறுவேறாய் ஆன போதும்
ஆதியிறை தனைவணங்குங் கோயில் இங்கே
அனைவருக்கும் பொதுவாகும் விழாக்கா லத்தில்
பேதமின்றி அனைவருமே கூடு வார்’தீப்
பள்ளயம்’ஓர் உதாரணமாம் ‘பாண்டி ருப்பில்’
வேதத்தில் கிறிஸ்தவரும் இஸ்லாம் இந்து
வெவ்வேறே எனினும் நாம் ஒருதாய் மக்கள்
விடுதலை கிடைத்தவுடன்;
- நதா அக்ரம் -
விடியலை தேடிய
பாதைகள்
வினாக்குறியில் இடம்பெயர
அநாதரவாய் மாறிவிட்ட
இளசுகளை
ஆதரிக்கத்தான் போகிறேன்
விடுதலை கிடைத்தவுடன்
தொடக்கத்தில் பணம் கொட்ட
அடக்கத்தில் கோட்டை விட்ட
மானத்தை புகை உண்ட
மங்கையர் மீது
சீறிப்பாயத்தான் போகிறேன்
விடுதலை கிடைத்தவுடன்
நல்வினை தடுத்து
தீவினை தொடுத்தோரை
போற்றும் சமூகத்தை
தூற்றத்தான் போகிறேன்
விடுதலை கிடைத்தவுடன்
ஒளி வீசிய இன்பங்கள்
இருள் சூழ்ந்த துன்பங்களாய்
போன தொடர்கதையை
மாற்றத்தான் போகிறேன்
விடுதலை கிடைத்தவுடன்
கண்ணீரே காவியமாக...!
வீ. எம். எலிசபெத்
என் இதயம் உனக்காய் அழுகின்றது!
உன் இதயத்தில் எனக்கிடம்
இல்லை என்பதற்காக அல்ல!
இதயமே இல்லாத உன்னை நேசித்ததற்காக!
தினமும் எழுதப்பட்ட என் கவிவரிகளின்
கதாநாயகனாக நீ இருந்தாய்!- ஆனால்
கண்ணீரை மட்டுமே பரிசளித்து விட்டு- என்
கவி வரிகளை வெறுமையாக்கினாய்!
கனவையெல்லாம் கானலாக்கினாய்!
அன்பை மட்டுமே அறிந்திருந்த நான்
அழுவதற்கும் கற்றுக் கொண்டது
உன்னால் தான்!
ஆனாலும் என்ன? - ஒரு
கதாநாயகனாக நீ இல்லாவிட்டாலும்- அதே
கவியை காவியமாக்கினாய்!
என்னை நான் பல மனங்களில்
கண்டெடுக்க காரணமும் நீ ஆனாய்!
காலம் கடந்து என்னை நீ
காண நினைத்தால் (தோன்றினால்)
உனக்காக நான் வடித்து வைத்த
கண்ணீர் காவியத்தை உன்
இதயத்தால் படித்துப்பார்- என்
இதயத்தின் வலி அப்போது புரியும்!