கண்டி, திகன இரஜவெல இந்து தேசிய கல்லூரி பழைய மாணவர்களின் புலமைப் பரிசில்
வழங்கும் வைபவம் அண்மையில் பாடசாலை அதிபர் மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்றது.
வசதி குறைந்த 10 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபா வீதம்
ஒரு வருடத்திற்கு வழங்குவதற்கு 2000ஆம் ஆண்டு பிரிவு பழைய மாணவர்கள்
முடிவெடுத்துள்ளனர்.
கண்டி குண்டசாலை தொகுதியிலுள்ள இப்பாடசாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்
கல்வி கற்று வருகின்றனர். தரம் ஒன்று முதல் க. பொ. த. (உயர்தரம்) வகுப்புகள்
நடைபெறுகின்றன.
திகனைப் பகுதியில் பல தோட்டங்களில் மலையக தமிழர்கள் அதிகமான எண்ணிக்கையில் வாழ்த்து
வந்தனர். இப்பாடசாலை 1910ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது பாடசாலையில் கல்வி கற்று விலகும் பழைய மாணவர்கள் தாம் படித்த பாடசாலைக்கும்,
அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்
மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இப்பாடசாலையைப் போன்று ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்ற பழைய மாணவர்கள் தமது
பாடசாலைக்கு முடிந்தளவு உதவியை செய்தால் மலையக சமுதாயம் கல்வியில் முன்னேற்றமடையும்
என மலையக கல்விச் சமூகத்தினர் தெரிவித்தனர். ஒவ்வொரு வருடமும் ஒன்று கூடி அதிபருடன்
கலந்துரையாடி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ள பழைய மாணவர்கள்
சிநேகபூர்வமான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி திறமையை வெளிப்படுத்துவோருக்கு
பரிசில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.