புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
சர்வதேசத்தின் சதிகார வலைப்பின்னலில் சிக்கவிடாது தாயகத்தை பாதுகாப்போம்!

அரபுலக நாடுகள் பலவற்றை பதம் பார்த்த மமதையில் அமெரிக்கா;

சர்வதேசத்தின் சதிகார வலைப்பின்னலில் சிக்கவிடாது தாயகத்தை பாதுகாப்போம்!

இலங்கையர் சகலரதும் கடமை என அஸ்வர் ணிஜி சபையில் வலியுறுத்து

அரபு உலகில் பல நாடுகளை பதம் பார்த்து விட்டோம் என்ற மமதையில் இலங்கையையும் தம் வலையில் சிக்கவைக்கப்பார்க்கிறது வல்லரசு நாடான அமெரிக்கா. இந்த சர்வதேச சதிகார வலைப்பின்னலிலிருந்து எமது நாட்டை காப்பது ஒவ்வொரு இலங் கையரினதும் கடமையாகும்.

வெள்ளிக் கிழமை பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு நேர பிரேரணையொன்றை சமர்ப்பித்து பேசிய அல்-ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி இவ்விதம் சொன்னார். அவர் மேலும் கூறியதாவது, இந்த மாதம் 27ஆம் திகதி ஜெனீவாவில் ஒரு பெரிய நாடகத்தை அரங்கேற்ற வல்லரசு நாடுகள் வரிந்து கட்டிக்கொண்டு கலத்தில் இறங்குகிறது. இதே தினத்தில் இதற்கு எதிராக நாடு பூராகவும் உள்ள மக்கள் பாதையில் இறங்கி போராட்டம் நடாத்த ஆயத்தமாக உள்ளனர். இலங்கையின் 150 நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நிகழும்.

இந்த நாட்டில் நிலவிய 30 ஆண்டுகால பயங்கரவாதத்தின் பிறகு இந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சரித்திர வீர புருஷர் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். இன்று வடக்கு கிழக்கு ஏனைய பகுதிகளில் சமாதானம் நிலவுகிறது. தமிழர்களும் முஸ்லிம்களும் கூட இந்த சமாதானத்தின் சூழலை மிக விருப்போடு அனுபவித்து வருகின்றனர். எனவே நாம் பெற்ற சுதந்திரத்தை நாட்டின் சிங்களவர், தமிழர், முஸ்லிம், இன்னபிறர் இழப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என்பது நிச்சயம். ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்க வெறியை சாதி, சமய, கட்சி வேறு பாடின்றி நாம் அனைவரும் முறியடிக்க பாடுபடுவது எமது தலையாய கடமையாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் புனித அல் குர்ஆன் பிரதிகளையும் அமெரிக்க இராணுவர்கள் அழித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்த இழிச் செயலை அவர்கள் செய்துள்ளனர். எந்த மதத்திலும் இதற்கு இடமில்லை. அது மட்டுமா? மரணித்த ஆப்கானிஸ்தான் முஸ்லிம் வீரர்களின் சடலங்கள் மீது சிறுநீர் கழித்த மிகவும் கீழ்தரமான செயலையும் அமெரிக்க படையினர் செய்துள்ளனர். இப்படி இவர்கள் இஸ்லாத்துக்கு விரோதமான செயலில் ஈடுபட்டு வருவதினால்தான் தலிபான்கள் தலைதூக்குகின்றனர். பின்லாடன்கள் பிறக்கின்றனர்.

உலகை ஆளக்கூடிய, உலகை நாடுகளை அடக்கி ஒடுக்கக் கூடிய சர்வ வல்லமை கொண்டவர்கள் தாம் தான் என்று அமெரிக்கா வீராப்பு பேசி வருகிறது. ஆனால் ஏகவல்லவன் அல்லாஹ் ஒருவனே என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். அல்லாஹ் “ஜல்ல ஜலாலுஹ¥, அம்ம நவாலுஹ¥” சர்வ வல்லமையும் படைத்தவன் அல்லஹ் ஒருவனே. சர்வ சக்தியையும் கொண்டவன் அவனே என்பதை நாம் அமெரிக்காவுக்கு உணர்த்த வேண்டும். உலகில் அநியாயம் செய்து திரிபவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்கமாட்டான். அவர்களுடைய முடிவு மிகவும் மோசமானதாகத்தான் இருக்கும் என்பதை அல் குர் ஆன் போதனையில் இருந்து நாம் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும்.

ஆகவே, இம்மாதம் 27ஆம் திகதி இந்நாட்டு முஸ்லிம்களும் ஏனைய சமூகத்தினரோடு ஒன்று சேர்ந்து தம்முல் உறங்கிக் கிடக்கும் நாட்டுப் பற்றை முன்னிறுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியையும், எமது சுதந்திர தாயகத்தையும் பாதுகாப்பதற்கு முன்வரவேண்டுமென சபையின் மூலம் வேண்டிக்கொள்கின்றேன் என்றும் அல்-ஹாஜ் அஸ்வர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.