கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04
SUNDAY FEBRUARY 26, 2012

Print

 
அலுவலகத்தில் நீங்கள் அமரும் நாற்காலிக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

அலுவலகத்தில் நீங்கள் அமரும் நாற்காலிக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

“எங்கள் மகளுக்கு 30 வயது பிந்தி விட்டது. ஆனால் இன்னமும் திருமணம் நடக்கவில்லை. இதற்கும் வாஸ்துவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?” என்று பலரும் கேட்கிறார்கள்.

வாஸ்துவும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால்,

இந்த விஷயத்தில் இவர்களது பிறந்த திகதியுடன் பெயரும் இதற்குக் காரணமாகவும் இருக்கலாம். பெயரில் அதிர்ஸ்டமில்லை என்றாலும் திருமணம் தாமதமாகும்.

எடுத்துக்காட்டாக,

பாத்திமா, பரீதா, மேரி, செல்வி, தேவி, ஜெயந்தி, வசந்தி, மாலதி இந்த மாதிரியான பெயர்கள் இருந்தாலும் திருமணத்தடை ஏற்படும். வாஸ்து முறைப்படி திருமணத்திற்கு முக்கியமாக அமையும் பகுதி அக்னி மூலையாகும். இந்தப் பகுதியில் கழிவறை இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் திருமணத்தடை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்தப் பகுதியில் சிகப்பு நிற பல்ப் ஒன்றை தினமும் எரிய வைத்தால் விரைவில் திருமணம் நடக்கும். தங்களுடைய அலுவலக நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் தங்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்குப் பின்னால் நேரடியாக ஜன்னலோ கதவோ இருந்தால் அது அபசகுனமாகும். இப்படி இருந்தால் உங்களது அலுவலகத்தில் அடிக்கடி ஏதாவது சண்டை நடந்து கொண்டே இருக்கும்.

அதேபோல்,

நீங்கள் அமரும் நாற்காலிக்குப் பின்னால் மீன் தொட்டியோ, நீரோடு சம்பந்தப்பட்ட படங்களோ இருக்கக் கூடாது.

நீர் வீழ்ச்சி, கடல் போன்ற படங்களை பின்னால் உள்ள சுவற்றில் மாட்டாதீர்கள். இவற்றிக்குப் பதிலாக மலை உள்ள படத்தை மாட்டி வையுங்கள். ஆனால் அந்த மலைக்கு அருகில் நீர் வீழ்ச்சியோ, அருவியோ இருக்கக் கூடாது. அதேநேரம் அந்த மலை பனியால் மறைக்கப்பட்டதாகவும் இருக்கக் கூடாது. பளிச்சென்று தெரியும் மலையின் படமாகவே அது இருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த அலுவலகத்தில் உங்கள் சக்தி அதிகமாகும்.

இதேபோல்,

கழிவறைக்கு முன்னால் அமர்ந்திருப்பதும் கூடாது. நீங்கள், அமர்ந்திருக்கும் நாற்காலிக்குப் பின்னால் கழிவறையின் சுவர் இருந்தால் நீங்கள் செய்யும் அந்தத் தொழிலில் முன்னேற்றம் இருக்காது. உங்கள் அலுவலகத்தில் இருக்கும் FAN  னையும் உங்களுக்குப் பின்னால் வைத்துக் கொள்ளாதீர்கள். FAN என்பது அக்னியோடு சம்பந்தப்பட்டது. இதனால் அக்னியை நாற்காலிக்குப் பின்னால் வைப்பது துரதிர்ஷ்டமாகவே அமையும். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குப் பின்னால் உள்ள சுவர் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பது மிகவும் அவசியமாகும். இதனால் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதேபோல மலை உள்ள படம் ஒன்றையும் மறக்காமல் மாட்டி வையுங்கள்.

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதிக் கொண்டிருக்கும் போது தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர். “சேர் தினகரன் வாரமஞ்சரியில் நீங்கள் எழுதி வரும் “வாஸ்து உங்கள் தோஸ்து” பகுதியை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு ஒரு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் மீன் வளர்க்கலாமா?” என்று கேட்டார்.

வீட்டிற்குள் மீன் வளர்ப்பது என்பது மிகவும்நல்ல காரியம் தான். இதனால் சில நன்மைகளும் ஏற்படும். குறிப்பாக நமக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட இருந்தால் அதை அந்த தொட்டியில் உள்ள மீன்கள் காப்பாற்றும். எப்படியென்றால், அந்த மீன் தொட்டியில் உள்ள மீன்களில் ஏதாவது ஒரு மீன் திடீரென்று இறந்து விட்டால் நமக்கு ஏதே ஒரு ஆபத்து நடக்க இருந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

அதேநேரம் இந்த மீன் வளர்ப்பதிலும் ஒருமுறை இருக்கிறது.

அதாவது,

நீங்கள் வளர்க்கும் அந்த மீன் தொட்டியில் 9 மீன்கள் தான் இருக்க வேண்டும். அதில் கண்டிப்பாக ஒரு கறுப்பு மீன் இருக்க வேண்டும். மற்ற 8 மீன்களும் சிகப்பு நிறத்தில் இருப்பது சிறப்பு. மீன் தொட்டியை வடக்கு பக்கமாக வைக்க வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]