நந்தன வருடம் வைகாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 05
SUNDAY MAY 27, 2012

Print

 
கட்புலனற்றோருக்கு கைகொடுத்ததில்

கட்புலனற்றோருக்கு கைகொடுத்ததில்

ஆத்ம திருப்தி காணும் பெண் எழுத்தாளர்
 

சுலைமா சமி இக்பால்

வலுவிழந்தோர் படும் மனத்துயரங்கள், உணர்வுகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்களை எழுத்துருவில் கொண்டு வந்தது மட்டுமன்றி, ஏக்கத் தாகத்தோடு இருந்த கட்புலனற்றோருக்கு தனது படைப்புகளை கெசட் உருவில் வழங்கி தாகசாந்தி செய்து கதை படிக்க கட்புலன் தேவையில்லை என்ற மனோதிடத்தையும் மகத்துவத்தையும் தந்த பல்துறை படைப்பாளி மாதர்குல சுலைமா சமி அவர்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கின்றேன்.

உங்களைப் பற்றிய அறிமுகத்தை முன் வையுங்கள்...

நான் களுத்துறை மாவட்டத்தின் தர்கா நகர் மீரிப்பண்ணையை பிறப்பிடமாகவும், மானவல்லை, கிரிங்கெதெனியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டுள்ளேன். துந்துவையைச் சேர்ந்த காலம் சென்ற அப்துல் சமி, தர்கா நகர் காலம் சென்ற உம்மு தமீமா ஆகியோரின் மகளாக பிறந்த எனக்கு ஐந்து உடன் பிறப்புக்கள். முஹம்மது இஸ்ஹாக், முஹம்மது அன்வர், முஹம்மது மஹ்ரூப், நூருல் ஐன் (ஆசிரியை), சித்தி நிலோபா ஆகியோரே அவர்கள். ஆரம்ப வகுப்பு முதல் உயர் தரம் வரை தர்கா நகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் (தற்போது தேசிய கல்லூரி) கற்றேன். பின்னர் அதே பாடசாலையில் சில வருடங்கள் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளேன்.

உங்களின் எழுத்துலகப் பிரவேசம் பற்றிச் சொல்லுங்கள்....

1977 ஆம் ஆண்டு எனது பதினேழாவது வயதில் தினகரன் பத்திரிகை ஊடாக கண்டதுண்டா கேட்டதுண்டா பகுதியில் துணுக்கொன்றை எழுதியதன் மூலம் எனது எழுத்துப் பயணம் ஆரம்பமானது. அதே கால கட்டத்தில் ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய சஞ்சிகைகளிலும் எனது ஆக்கங்கள் வெளி வந்தன. அன்று தொடக்கம் இன்றுவரை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

1984 தொடக்கம் 1995 வரையிலான காலப் பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வந்த மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்காக பிரதி தயாரிப்பாளராக இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதி வந்துள்ளேன். இந்நிகழ்ச்சி மூலம் எழுத வாசிக்க தெரியாதவர்களும் என்னுடைய அபிமான நேயர்களாக இருந்தமை எனக்கு மிக மகிழ்ச்சி தந்த ஒரு விடயமாகும். எழுத வேண்டும் என்ற ஆசை ஏன் எப்பொழுது ஏற்பட்டது?

பாடசாலை வாழ்க்கையில் தமிழ்ப் பாடத்தில் எப்போதும் நானே அதிக புள்ளிகள் வாங்குவேன். எனது கட்டுரைகளை வாசிக்கும் எமது தமிழ் பாட ஆசிரியை திருமதி கனீமா வாரித் அவர்கள், உன்னிடம் நல்ல கற்பனை வளம் இருக்கிறது. எதிர் காலத்தில் நன்றாக வருவாய் என்று கூறி என்னைத் தட்டிக் கொடுப்பார். பாடசாலை நாட்களிலும், பிறகும் கூட பலதரப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் (சித்திரம், பாடல், கட்டுரை, கதை) கலந்து பரிசுகள் வாங்கியுள்ளேன். பாடசாலை நாட்களிலிருந்தே நான் நிறைய வாசிப்பேன். எங்கள் வீட்டில் அந்தக் காலத்தில் இருந்தே தினகரன், சிந்தாமணி பத்திரிகைகள் எடுப்பது வழக்கம். அப்போது தினகரன் நிருபராக இருந்த எனது மைத்துனர் எம். யூ. எம். ஹனீப் அவர்கள், பல பத்திரிகைகளையும், புத்தகங்களையும் கொண்டு வருவார். இவற்றின் மூலம் எனது வாசிப்புப் பழக்கம் அதிகரித்தது.

எனது கையெழுத்து அழகாக இருப்பதாக எல்லோரும் சொல்வார்கள். அந்தக் காலப் பகுதியில் பலரும் தமது எழுத்து வேலைகளை என்னிடம் தந்தே செய்வார்கள். அதே நேரம் ஜாமிஆ நZமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளரும், எழுத்தாளரும், கவிஞருமான அஷ்ஷெய்க் எச். ஐ. கைருல் பஷர் அவர்கள் தான் எழுதிய கதைகளையும், கட்டுரைகளையும் அழகாகப் பிரதி பண்ணித் தரும்படி என்னிடம் தருவார். ஏற்கனவே என்னிடம் இருந்த தமிழ்தாகமும், வாசிப்பும் இவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் போது ஏற்பட்ட ஆர்வமும் கூட என்னை எழுதத் தூண்டியிருக்கலாம் என உணர்கிறேன். வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றிற்கு விடாமல் எழுதினேன். வாசிப்பு மனிதனை முழு மனிதனாக்கும் என்பதற்கிணங்க வாசிப்பும், எழுத்துமே எனது உயிர் மூச்சாக இருந்தது. அப்போதெல்லாம் நான் வீட்டு வேலைகள் எதிலும் ஈடுபடாததால் பல தடவைகள் நான் வீட்டினரிடம் திட்டு வாங்கியதும் உண்டு. எனது எழுத்துக்கள் பிரசுரமான போது எனது தந்தை மிகவும் மகிழ்வார். ஆரம்ப காலத்தில் எனது எழுத்து முயற்சிகளுக்கு மிகவும் ஆர்வம் தந்தவர்கள் எனது தந்தையும் இரண்டாவது சகோதரனும் தான், இருந்தாலும் எனது வளர்ச்சியைக் கண்டு மகிழ இன்று அவர்கள் உயிரோடு இல்லை.

வலது குறைந்தோரைப் பற்றியும் நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருப்பதாக அறிகிறோம் அது பற்றிச் சொல்லலாமே!

இருபது வருடங்களுக்கு முன் திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் விழிப்புலனிழந்த மாணவர்களுக்கு ஆசிரியப் பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை எனக்குத் தந்த நிலையத்தின் ஸ்தாபகரும், அர்ப்பணிப்போடு பணிபுரியும் ஆயுட்காலத் தலைவருமான சகோதரர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹனிபா அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத எப்போதும் நினைத்துப் பார்த்து ஆறுதல் படுகின்ற விடயமாகும். அவர்களுடன் நெருங்கிப் பழகிய என்னால் அவர்களின் மனக் காயங்கள், உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் என்பவற்றை இலகுவில் புரிந்துகொள்ள முடிந்தது. அவற்றை வைத்து பல சிறுகதைகளை எழுதியுள்ளேன். இதைத் தவிர எனது முதல் நூல் வெளியீடுகளின் போது புத்தகத்தில் உள்ள கதைகளை பதிவு செய்து அவர்களுக்கு ஒரு கெசட்டை உருவாக்கி வழங்கினேன். அத்தோடு மனச்சுமைகள் நூலைக் கூட வலது குறைந்தோருக்கே சமர்ப்பணம் செய்தேன். இவை குறித்து 15.11.1987 ஆம் ஆண்டு பாமிஸ் சஞ்சிகை கதை படிக்க கட்புலன் தேவையில்லை என்ற தலைப்பில், திஹாரிய அங்கவீனர் நிலையத்தின் கட்புலன் இழந்த சகோதரர்களையும் மறவாது கெசட் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தமை சுலைமாவின் எழுத்துக்களும் உணர்வுகளும் இணை பிரியாதன என்பதனை காட்டுகிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் கூறுங்கள்?

வைகறைப் பூக்கள் (1987), மனச்சுமைகள் (1988 - கல்ஹின்னை தமிழ் மன்றம்), திசைமாறிய தீர்மானங்கள் (2003 - உடதலவின்னை சிந்தனை வட்டம்) ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளையும் ஊற்றை மறந்த நதிகள் (2009 – மாவனல்லை எக்மி பதிப்பகம்) என்ற சமூக நாவலையும் வெளியிட்டுள்ளேன். இந்த அத்தனை வெளியீடுகளும் எனக்கு வெற்றியைத் தான் தந்தன. திசைமாறிய தீர்மானங்கள் என்ற சிறுகதைத் தொகுதி மத்திய மாகாண கல்வி அமைச்சினால் சிறந்த நூலுக்கான விருதையும், பொற்கிழியையும் பெற்றுத் தந்ததோடு மேல் மாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கவென முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். எஸ். எம். அஸ்லம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நூறு புத்தகங்களும், மிலேனியம் கல்வி ஸ்தாபனத் தலைவர் எஸ். எச். மெளலானா நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களும் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றி....

எழுத்து வன்மைக்காக மாவட்ட, மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் சுமார் 75 தடவைகளுக்கு மேல் பரிசுகளும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளேன். 1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாத்தளை மாவட்ட மத்திய குழு தேசிய ரீதியில் தமிழ், முஸ்லிம் படைப்பிலக்கியவாதிகளுக்கு இடையே நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ¥ம் எம். எச். எம். அஷ்ரப் அவர்களினால் தங்கப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை மறக்க முடியாத நிகழ்வாகும்.

மேலும் 2006 ஆம் ஆண்டில் அரச சாகித்திய சிறுகதைப் போட்டியில் எனது உண்டியல் என்ற சிறுகதை தேசிய ரீதியில் 3ம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு ஆக்கம் என்ற கருத்திட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டேன். மேலும் 2007 ஆம் ஆண்டிற்கான சப்ரகமுவ மாகாண சாகித்திய கலை நிர்மாணப் போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி இரண்டாமிடத்தையும், 2008 ஆம் ஆண்டிற்கான இதே போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டது. 2011 ஆம் ஆண்டிற்கான இதே போட்டியில் மற்றும் ஒரு சிறுகதைகள் அடங்கிய பிரதி இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதைத் தவிர 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நர்கீஸ் சஞ்சிகையும் மல்லாரி பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் எனது ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியில் கலந்து கொண்ட சகோதரி ஜரீனா முஸ்தபா அவர்களின் இது ஒரு ராட்சசியின் கதை என்ற நாவலுக்கும் பரிசு கிடைத்தது.) அதே போன்று இந்தியாவின் இதே அமைப்புக்கள் நடத்திய சர்வதேச சிறுகதை, கவிதைப் போட்டிகளிலும் எனது படைப்புக்களுக்கு பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படைப்பிலக்கியங்களுக்கான அரச சாகித்திய தெரிவில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று நாவல்களில் ஒன்றான ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

அதேபோல் புதிய சிறகுகள் என்ற அமைப்பின் நாவல் தெரிவிலும் விருதுக்காக இதே நாவல் சிபாரிசு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 2011 ஆம் ஆண்டு இறுதியில் பாணந்துறையில் இயங்கும் ஜனசங்சதய என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு நடத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதை சிறப்புப் பரிசையும், அதே ஆண்டு மலையக எழுத்தாளர் மன்றம் நடத்திய தேசிய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளேன். 2011 ஆம் ஆண்டு அல்ஹஸனாத் இஸ்லாமிய சஞ்சிகை நடத்திய நாடளாவிய சிறுகதைப் போட்டியிலும் எனக்கு பரிசு கிடைத்துள்ளது.

இவை தவிர களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, பம்பலப்பிட்டி இஸ்லாமிய செயலகம், தேசிய இளைஞர் சேவை மன்றம், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம், கல்வி அமைச்சு, அரசாங்க கலாசாரத் திணைக்களம் போன்ற பல்வேறுபட்ட அமைப்புக்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளேன். 2002 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையும், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் இணைந்து நடத்திய குறிஞ்சித் தென்னவன் நினைவு இலக்கிய விழாவில் அன்றைய மத்திய மாகாணக் கல்வி அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக் கப்பட்டேன். 2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இஸ்லாமிய இலக்கியப் பங்களிப்புக்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டேன். அகில இன நல்லுறவு ஒன்றியம் நடத்திய 2008 ஆம் ஆண்டிற்கான சாமஸ்ரீ பாராட்டு விழாவில் கலாஜோதி பட்டமும் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டேன்.

இப்படிப் பரிசுகளும் பாராட்டுக்களும் கிடைத்த நேரங்களில் உங்கள் மனநிலை. உணர்வுகள் எவ்வாறு இருந்தன?

உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட தேசிய, சர்வதேசப் போட்டிகளில் எனது படைப்புக்களுக்குப் பரிசு கிடைத்த போது, என் உணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. இந்தப் பரிசுகளும் பாராட்டுக்களும் எனது எழுத்துக்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்றே நான் கருதுகின்றேன்.

உங்களது எழுத்து முயற்சிகளில் உங்கள் கணவரின் பங்கு எத்தகையது?

திருமணத்தின் பின் ஒரு பெண் எழுத்துத் துறையில் நிலைத்து நிற்பதென்பது கேள்விக்குரிய விடயம் தான். பொதுவாக பல பெண் எழுத்தாளர்கள் திருமண வாழ்வில் நுழைந்த பின் எழுதுவதையே நிறுத்தி விடுவதுண்டு. ஆனால் என்னிலை இதற்கு மாறாக அமைந்து விட்டது. என்னை மென்மேலும் எழுதத் தூண்டுவதும் உற்சாகப்படுத்துவதும், என் வெற்றிக்குத் துணை நின்று உழைப்பதும் என் கணவர் தான். எனது எழுத்து முயற்சிகளில் அவரது பங்களிப்புப் பற்றி கூறியே ஆக வேண்டும். எனக்காகவே எக்மி பதிப்பகம் என்ற ஒரு பதிப்பகத்தையும் ஆரம்பித்து அதன் மூலம் பல நூல்களையும் வெளியீடு செய்து கொண்டிருக்கிறார்.

உங்கள் படைப்புக்களுக்கு ஊடகங்கள் எந்த வகையில் உதவியது?

ஒரு எழுத்தாளனை வாசகர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தி அவனை ஊக்குவித்து அவனது வளர்ச்சிக்குத் துணை நிற்பது ஊடகங்களே. இந்தவகையில் இலங்கையில் வெளிவந்த வெளி வருகின்ற அத்தனை பத்திரிகைகளும் வார இதழ்களும் மற்றும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை என்பன எப்போதும் என் வளர்ச்சிக்கு உதவும் ஊடகங்களாகும். ஊடகத் துறையைச் சேர்ந்த பலரும் என்னை உற்சாகப்படுத்தியுள்ளார்கள். தினகரன் முன்னைநாள் ஆசிரியர் காலம் சென்ற சிவகுருநாதன் அவர்கள் உட்பட பலரும் பல சந்தர்ப்பங்களில் என் எழுத்து முயற்சிகளுக்கு ஆர்வம் தந்துள்ளார்கள்.

எழுத்துலக வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் ஏதும் உண்டா?

ஆம்! நிச்சயமாக உண்டு. 1983 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவை மன்றம் களுத்துறை மாவட்டத்தில் நடத்திய ஹஜ் விழா போட்டிகள் நான்கில் (இஸ்லாமிய கீதம், அறபு எழுத்தணி, கவிதை, கட்டுரை) நானும் கலந்து கொண்டேன். அந்த நான்கு போட்டிகளிலுமே எனக்கு முதலிடம் கிடைத்தது. மேடையில் பரிசு வாங்கி விட்டு கீழே இறங்க முன் அடுத்த போட்டியின் பரிசுக்காக அழைக்கப்பட்டேன். இப்படி நான்கு தடவைகளும் அழைக்கப்பட்ட போது, அந்தப் பரிசுகளை பார்வையாளரின் கரகோசத்துக்கு மத்தியில் வாங்கிக் கொண்டு இறங்கி வந்தேன். இது மறக்க முடியாத அனுபவம்.

ஏற்கனவே நான் கூறிய முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்தது. இரண்டரை பவுண் எடையுள்ள பதக்கத்தை அன்றைய நிகழ்வில் தலைவர் அஷ்ரப் அவர்களின் கரங்களால் பெற்றுக் கொண்டேன். இந்தப் பரிசை கெளரவத்தை என்றும் மறக்க முடியாது.

இவை தவிர நான் பல போட்டிகளில் கலந்து பரிசு பெற்ற போதும், 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் தென் இந்தியாவில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்துகொண்ட சர்வதேச நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசு கிடைத்தமை மறக்க முடியாத அனுபவமாகும்.

உங்களுக்குப் பின் உங்களது எழுத்துப் பணி தொடரப் போகின்றதா? அல்லது....!

எனக்குப் பின் இத்துறையில் ஈடுபட என் பிள்ளைகள் ஆர்வமாக இருக்கின்றனர். எனது மூன்று பிள்ளைகளும், கலை ஆர்வம், எழுத்தார்வம் மிக்கவர்கள், மூத்த மகள் இன்ஷிராஹ் இக்பால் பூ முகத்தில் புன்னகை என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். இப்புத்தகம் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நூலாக இருக்கின்றது. இதைத் தவிர அண்மையில் சமூக நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார். எனது இளைய மகள் இன்ஷிபா இக்பாலும் எழுத்தார்வம் உள்ளவர். பல சிறுகதைப் போட்டிகளிலும் கலந்து தேசிய ரீதியிலும் பரிசு பெற்றுள்ளார். மகன் அஷ்பாக் அஹமத் ஓவியத் துறையில் ஆர்வமுள்ளவராக இருக்கின்றார்.

விரைவில் வெளிவர இருக்கின்ற எனது நந்தவனப் பூக்கள் என்ற சிறுவர் இலக்கிய நூலுக்கும், உண்டியல் என்ற சிறுகதைத் தொகுதிக்கும் இவரே அட்டைப் படத்தையும் சித்திரங்களையும் வரைந்துள்ளார்.

வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள். சிறந்த பயனுள்ள எழுத்துக்களை எழுதுங்கள். முஸ்லிம் எழுத்தாளர்கள் இஸ்லாமிய வரம்புகளை மீறாத முறையில் சமூகத்தின் மேம்பாட்டுக்காக எழுதுங்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]