மங்கையர் எல்லோரும் வாருங்கடி அம்மன்
மகிமையை ஆடியே பாடுங்கடி அவள்
தங்கத் தேர் ஊர்வலம் வாறாளடி கை
தாங்கியே நீர் குடம் வையுங்கடி
*
குங்குமம் சந்தனம் சாத்துங்கடி செம்பு
குடமதில் மஞ்சள் நீர் ஊற்றுங்கடி
தங்கைக்கு பூப்பு நீராட்டுங்கடி இன்பம்
தங்க ஒரு கும்மியும் போடுங்கடி
*
மஞ்சள் அரிசி மாவெடுத்து நல்ல
மாவிலை தோரணம் போடுங்கடி அதன்
மத்தியில் நிறைகுடம் வையுங்கடி மனம்
மகிழ்வுறப் பொங்கலும் பொங்குங்கடி
*
அம்புவி தானும் அதிசயங்கொள் எங்கள்
அண்ணன் திரு மணம் பாருங்கடி
செம்பு குடமதில் மாவிலை பூவைத்து அவன்
சேரும் பூவையை வாழ்த்துங்கடி
*
இல்லத்தில் இன்றெமக் கின்பவிழா வாழ்வில்
இருளிலா ஒளிவரும் தூய விழா நாட்டில்
இருப்பவர் ஒன்றுடன் சேரும் விழா என்று
இதயங்கள் மகிழ்வுற ஆடுங்கடி
தம்பிலுவில் தயா
துயிலாத தாலாட்டு
பேச நினைத்தும் சில உண்மைகளை
பேச முடியாமல் மெளனிக்கின்றேன்
உன்னிடம் நான்!
எனக்கு வாழ்வு கொடுத்த உனக்கு
என் வாழ்வையே காணிக்கையாக்கினாலும்
நான் பட்ட கடன் தீராது என
உணர்கிறேன்.
உன்னை மறக்க முடியாமல்
உலகிற்கு வருடாவருடம் வருகின்றது
உன் நினைவு தினம்
வாழ்த்திட நினைத்து
வாயடைத்து நிற்கிறேன்!
உன் மடிமீது சாய்ந்து - கவிபாட நினைத்து
கண்ணுறங்கிப் போகிறேன்
கனிவுடன் நீ படித்த தாலாட்டில்,
இன்று
கண்ணீருடன் நின்று கவி பாடிக் கொண்டிருக்கிறேன்
அதை ஆசையுடன் பலர் கேட்கின்றனர்
ஆனால்,
அன்புடன் கேட்பதற்கு நீ இல்லையே!!
அம்மா!!!
வீ. எம். எலிசபெத்,
காசல்a
நிறமணிந்த இரவின் பூக்கள்
வெட்கத்தின் கண்கள்
கூசிச் சிணுங்க
ஆடை களைந்து
உடலசைக்கிறது மூங்கில்
மெல்லிய இடவுக்குள் நுழைய முனையும்
பல்லியைப் போலத்தான் ஆசைகளும்...
பல்லிக்கென்றால் சாத்தியம்
மனிதனுக்கு!...
சீவிப்பின் அர்த்தம் தெரிந்தால்தான்
நகர்வுகள் இனிக்கும்...
அப்படியில்லாவிட்டால்
எதுகை மோனை தெரியாமல்
மரபுக் கவிதைகளுக்காய் பேனா திறக்கும்
கவிஞனைப் போலாகிவிடும்
வாழ்க்கை.
எத்தனை நாட்களுக்குத்தான்
பிரபாகரன் மாதிரியும்
ஒசாமாவைப் போலவும்...
வனவாசத்தினால் முகத்தை மூடுவது...
என்றாவது ஒருநாள்...
வெள்ளிமுள்ளி வாய்க்கால் கரையையும்
பாகிஸ்தான் வீட்டையும்
காணவேண்டி வரும்தானே.
வெறும் கால்களுடன் நடந்து போயிருக்கலாம்...
வெயில் மட்டும்தான் சுட்டிருக்கும்
சப்பாத்துக்களையும் சுமந்துகொண்டு
பாவம் பாதகங்கள்...
சீ.... வாருங்கள்....
என்றாவது ஒருநாள்
இறக்கைகள் முளைக்கும்
எல்லாத்திசைகளை நோக்கியும்
பறந்து போகலாம்... சூரியனைப்போல....
கவிச்சுடர் ரீ. எல். ஜவ்பர்கான்
பூமகனாம் ~மண்டேலா' புதுவேதம்
நீண்டபல் லாண்டுகள் நீதிக்காய்ச் சென்றேசிறை
மீண்டவ ராமெங்கள் மண்டேலா - பூண்டவுயர்
தன்கொள்கை காக்கத் தலையே தருவதற்கும்
புன்னகையோ டெழுந்த புயல்.
*
ஆபிரிக்கத் தேசியத்தை ஆளுகின்ற காங்கிரஸைத்
தாபித்த வன்தான் பெருமகனாம் - கோபித்தே
வெள்ளை நிறவெறியர் வெஞ்சிறைக்குட் போட்டாலும்
பிள்ளைச்சிரிப் போடதையேற் றாரே!
*
கொள்கை தனைவிடுத்துக் கும்பிட்டா லுயர்வாழ்வை
அள்ளித் தருவோ மென்றார்கள் - வெள்ளை
அரசாரைப் பார்த்து அதிநகைசெய் மண்டேலா
இருளகற்ற வந்த சுடர்.
*
கால்நூறு ஆண்டு கடுந்தவத்தின் பேறாகத்
தோல்வெள்ளைக் காரர் துவண்டார் - தோல்வியினைத்
தந்தே, விடுதலையைத் தானளித்தார் மக்களுக்கே
விந்தை மனிதர் விழி!
*
தாமே பரம்பரையாய்த் தானாளத் தோன்றுவார்முன்
பூமகனாம் மண்டேலா கோமகனாம் - ஆமாம்கேள்
சொந்த அரியணையைத் தூக்கிப் பிறர்க்களித்த
தந்தை இவருலகின் தவம்.
கவிஞர் நிலா தமிழின்தாசன்
உன் காதல்
அழுகை
எனக்கொன்றும்
புதிதல்ல
சிறு வயது முதலே
விதிக்கப்பட்டது
நீ வந்து
கொஞ்சம்
அதிகப்படுத்தியிருக்கிறாய்
அவ்வளவுதான்.
*
கஞ்சனைப்போன்றது
காதல்
எதையும்
குறைவாகவே
தருகிறது
ஜன்னலின்
வழியே மட்டும்
நீ என்னைப்
பார்ப்பதை போல.
*
தூக்கத்திற்கு
மாத்திரை உண்டு
யாரும்
தூங்காமல்
இருக்கவேண்டும்
என்றால்
ஒரு முறை
அவளைப் பாருங்களேன்.
காதலில்
தோல்வி
சிறு புள்ளிதான்
சில வேளை
நாம் அழித்தாலும்
அழிவதில்லை.
*
ஒரே ஒரு பார்வைதான்
பார்த்தாய்
இதயம் பறிபோய்விட்டது
எங்கே பயிற்றுவித்தாய்
உன் கண்களை.
*
பூக்களின் நறுமணத்தை
காற்று பரப்புவதைப் போல
என் பெயரை
பிரபலமாக்கிவிட்டது
உன் காதல்
*
என் பார்வை
தரிசனத்திற்காக
எத்தனை முறை
என்னை சுற்றி வந்திருப்பாய்
அது ஒரு காலம்
*
இன்று
உன் நினைவுகளே
என்னை சுற்றிவருகின்றன.
கவிஞர் எஸ். ரபீக்
பகல்நிலவாய்
எதிர்பார்ப்புகளும்
ஏமாற்றங்களும்
மீதமாகிப் போனது
வாழ்வில்