ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
சயனைட் குப்பிகளுடன் கைதானவர் ‘றோ’ புலனாய்வுத்துறையினரால் தீவிர விசாரணை

சயனைட் குப்பிகளுடன் கைதானவர் ‘றோ’ புலனாய்வுத்துறையினரால் தீவிர விசாரணை

சயனைட் குப்பிகளுடன் தமிழ் நாட்டில் கைதான இலங்கையர் பொலிஸாரின் விசாரணைகளின்போது எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இரண்டாவது நாளாக நேற்று இந்திய உளவுத் துறையான ‘றோ’ உள்ளிட்ட புலனா ய்வுத் துறையினரும் தீவிரமாக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் உச்சிப்புளி பஸ் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.

காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்தபோது அதில் 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் விஷப் பவுடர், 4 ஜி. பி. எஸ். கருவிகள், ரூ 46,200 ரொக்கம், இலங்கை பணம், 7 கைபேசி இருந்தது. இதனை பறிமுதல் செய்த பொலிஸார் 3 பேரையும் கைது செய்து உச்சிப்புளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில், 3 பேரில் ஒருவர் இலங்கை தமிழரான கிருஷ்ணகுமார் (வயது 30), எனவும், இவர் திருச்சி கே. கே. நகரில் வெளிப் பதிவு அகதியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. மற்றைய 2 பேர் ராமேஸ் வரம் அருகே உள்ள தில்லை நாச்சியம்மன் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் எனவும், மற்றொருவர் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சியை சேர்ந்த கார் டிரைவர் சசிக்குமார் எனவும் தெரியவந்தது.

கைதான கிருஷ்ணகுமார் 1990ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். அந்த இயக்க தலைவரான பிரபாகரனிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது கிருஷ்ணகுமார் அங்கிருந்த தப்பி அகதியாக தமிழகம் வந்துள்ளார்.

அவர் இங்கிருந்து தப்பித்து இலங்கை செல்வதற்காக பலமுறை ராமேஸ¤வரம் வந்துள்ளார். ஆனால் அவரது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளன. அப்போது அவருக்கு உதவி செய்ய ராஜேந்திரன், சசிக்குமார் முன் வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்றபோது பொலிஸில் பிடிபட்டுள்ளனர். கைது செய்த 3 பேரையும் பொலிஸார் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விசாரணையில் கிருஷ்ணகுமார் எந்தவித தகவல்களையும் தெரிவிக்க மறுத்து வருகின்றார்.

இதையடுத்து இவர்களிடம் 2வது நாளாக ‘ரோ’ உள்ளிட்ட புலனாய்வு அமைப்பினரும் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் பின்னணியில் பெரிய சதி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருவதால், புலிகள் இயக்கத்தினரை சிறப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

தமிழகத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் அவரது ஆதரவாளர்களும் கியூ பிரிவு மற்றும் உளவு பிரிவு பொலிஸாரால் தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருகிறார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இலங்கை அகதிகள் முகாமும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

வாகன சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் வாகன சோதனையின்போது பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி