ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
tuesday, August 26, 2014

Print

 
திருமண வைபவத்திற்கு வருகை தந்த சகோதரிகளின் உடைமைகள் கொள்ளை

திருமண வைபவத்திற்கு வருகை தந்த சகோதரிகளின் உடைமைகள் கொள்ளை

மட்டக்களப்பிலிருந்து திருமண வைபவத்திற்கு கலந்து கொள்ள கண்டிக்கு வருகைதந்த இரு சகோதரிகள் இளைஞனொருவனால் ஏமாற்றப்பட்டு உடைமைகள் கொள்ளையிடப்பட்டு தாக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று முன்தினம் (19 ஆம் திகதி) நுவரெலியா மாகாஸ்தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-

நேற்று முன்தினம் 19 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் குறித்த இளைஞன் இரண்டு பெண்களையும் நுவரெலியாவிற்கு கூட்டி வந்துள்ளான். இதனை தொடர்ந்து இரண்டு பெண்களையும் நுவரெலியா மாகாஸ்தோட்ட எனும் பகுதிக்கு முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்ற இளைஞன் அங்கு அவர்களிடம் கத்தி ஒன்றை காட்டி அவர்களிடம் இருந்த 7000.00 ரூபா பணத்தையும், காதணிகளையும் களற்றிக்கொண்டு அவர்களுக்கு சிறு காயங்களை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளான்.

விடியற் காலை இரண்டு மணியளவில் அதாவது நேற்று (20.08.2014) குறித்த இரண்டு பெண்களும் காட்டுப் பகுதியில் இருந்து வெளியில் வந்து வீடொன்றிற்கு சென்று தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் நடந்த விடயத்தையும் கூறியுள்ளனர். உடனே அந்த வீட்டு உரிமையாளர்கள் 119 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற பொலிசார் இரண்டு பெண்களையும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]