ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
Tuesday, August 12, 2014

Print

 
எபோலா வைரஸ் தாக்கம் நவீன மருத்துவத்துக்கு சவால்

எபோலா வைரஸ் தாக்கம் நவீன மருத்துவத்துக்கு சவால்

எச். ஐ. வி. சார்ஸ் வரிசையில் தற்போது உலகை அச்சுறுத்தி வருவது ‘எபோலா வைரஸ்’  (Ebola Virus). மேற்கு ஆபி ரிக்க நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டா யிரத்தை நெருங்கியிருக்கிறது.

கினியா என்ற நாட்டில் முதன் முதலில் இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கு ஆபிரிக்க நாடுக ளான லைபீரியா, நைஜீரியா, சியாரலியோன் ஆகிய நாடுகளுக்கு பரவியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதுவரைக்கும் (12.08.2014) இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயம். நோய்க்கு ஆளாகுபவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களைக் கூட எபோலா தாக்கும் அபாயம் இருக்கி றதென எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதனால் சிகிச்சைகள் அளிப்பதில் சில பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்கிறதென மேற்கு ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நோய் கடுமையாகப் பரவுவதற்கு இவைகளும் காரணமாக அமைந்துள்ளதென கூறக்கூடியதாக இருக்கிறது. இதன் மூலம் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்களே பாதிப்புக்கு அதிகமாக ஆளாகியுள்ளனர்.

ஆபிரிக்க நாடுகளில் எபோலா கடும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இன்று உலக நாடுகளுக்கு பொதுவான சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிய நாடுகளில் எபோலா தாக்கத்துக்குள்ளான எந்தவொரு நோயா ளியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. என்றாலும் இலங்கை முன்கூட்டியே தனது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைக ளில் இறங்கியிருக்கிறது.

இதற்காக விமான நிலையத்தில் எபோலா வைரஸ் நோய்த் தடுப்புப் பிரிவொன்றை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகள் உட்பட வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரு வோர் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதேநேரம், ஆபிரிக்க நாடுக ளில் தொழில்புரியும் இலங்கையர்களை திருப்பி அழைப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரைக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஆசிய நாடுகளுக்கு முன்னுதாரணமாகச் செயற்படும் ஒரு நாடு. சார்ஸ், சிக்குன்குனியா போன்ற வைரஸ் தாக்கங்கள் உலகின் பல நாடுகளை ஆட்டிப்படைத்த போது, வரும்முன் காப்போம் என்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இலங்கை மக்களைப் பாதுகாத்த பெருமையும் அனுபவமும் இலங்கைக்கு இருக்கிறது. பொறுப்புள்ள முன் ஏற்பாடுகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பல விருதுகளையும் வழங்கியிருக்கிறது.

ஆசியப் பிராந்தியத்தை எபோலா தாக்காவிட்டாலும் இலங்கை (சுகாதார அமைச்சு) எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை மக்களை விழிப்படையச் செய்திருக்கிறது.

எபோலா வைரஸ்  (Ebola Virus) காற்றின் மூலமோ, சுவாசத்தின் மூலமோ பரவக்கூடியதல்ல. இரத்தத்திலும் உடலில் உள்ள ஏனைய திரவங்களின் மூலமும் இலகுவில் பரவக் கூடியதென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, வயிற்றுப் போக்கு போன்ற சாதாரண அறிகுறிகளே இதற்கும் காணப்படுமென கூறப்பட்டுள்ளது.

என்றாலும் பாதிப்புக் கூடுதலாக உள்ளோருக்கு உடலின் உட்புறத்திலும் வெளிப் புறத்திலும் இரத்தக் கசிவு ஏற்படக்கூடும். அதேநேரம், சிறுநீரகம். கல்லீரல் ஆகியவற்றின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு உயிரிழ க்கும் அபாயம் ஏற்படலாமென மருத்துவ நிபுணர்கள் எச்சரி த்துள்ளனர்.

எனவே நமக்கு நாமே பரிகாரம் தேடும் வைத்தியர்களாக நாம் இருக் காமல் அறிகுறிகள் தென்பட்டால் ஆஸ்பத்திரிகளை நாடுவதே நல்லது. ஏனென்றால் வீணான தாமதங்களும் அலட்சியப் போக் கும் நமக்கு நாமே உயிருக்கு உலை வைப்பவர்களாக மாறி விடுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எபோலா வைரஸ் கினியா நாட்டில் பரவியது கண்டுபிடிக்கப் பட்டாலும் 38 ஆண்டுகளுக்கு முன்னரே முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

1976 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொங்கோ குடியரசு நாட்டில் 1976 இல் எபோலா தாக்கத்தினால் 218 பேர் உயிரிழந்துள்ளனர். அதே ஆண்டில் சூடான் நாட்டில் 151 பேர் பலியாகியுள்ளனர். 2000 ஆம் ஆண்டில் மீண்டும் சூடானில் தாக்கம் அதிகரித்ததால் சுமார் 224 பேர் மரணமடைந்தனர்.

2014 இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் கினியா நாட்டில் எபோலா பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லைபீரியா. சியாராலியோன் ஆகிய நாடுகளிலும் பரவி இப்போது கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறதென உலக சுகாதார ஸ்தாப னம் தெரிவிக்கிறது.

நேரடி சிகிச்சைக்கான சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக் கப்படவில்லை. என்றாலும் மூன்று அமெரிக்க மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் இதற்காகக் களத்தில் இறங்கியிருப்பதாக WHO அறிவித்திருக்கிறது. எனவே, கடுமையான உயிர்ப்பலிகளை ஏற்படுத்தும் எபோலா தாக்குதலை எதிர்கொள்ள நிரந்தர தீர்வு ஏற்படுமென்ற நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது.

இதுபோல் எத்தனையோ வைரஸ்களை உலகம் கண்டுவிட்டது. இதற்கும் முற்றுப்புள்ளி வைக்காமலா இருக்கப் போகிறது!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]