|
||
மொஸ்கோ பாடசாலைக்கு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் கைது; இருவர் பலி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் 29 பாடசாலை மாணவர்களை பிணைக்கைதியாக பிடித்த துப்பாக்கி தாரி ஒருவனை பொலிஸார் கைது செய்தனர். மொஸ்கோ நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம மனிதன் காவலாளிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளே நுழைந்தான். அவன் பாடசாலைக்குள் நுழைந்தவுடன் காவலாளிகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பாடசாலைக்கு விரைந்து வந்த பொலிஸாருக்கும், துப்பாக்கி மனிதனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பொலிஸார் மற்றும் ஒரு ஆசிரியர் பலியானதாகவும் மேலும் ஒரு பொலிஸார் படுகாயமடைந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். பின்னர் அப்பாடசாலையில் உள்ள உயிரியல் வகுப்பிற்குள் நுழைந்த அந்த ஆசாமி, அங்கிருந்த 29 மாணவர்களையும் சிறைபிடித்தான். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளேயே சிறைபிடித்த மாணவர்கள் அனைவரையும் அவன் விடுவித்ததாக கூறப்பட்டுள்ளது. பாடசாலைக்குள் துப்பாக்கி மனிதன் நுழைந்த தகவல் கிடைத்தவுடன் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு வெளியே குவிந்துவிட்டனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |