|
||
பேராசை வேண்டாமே!
ஓர் ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். குறுகிய வாயை உடைய ஒரு சாடிக்குள் முந்திரிப் பருப்புகளை வைத்திருந்தாள் அவன் தாய். முந்திரிப் பருப்புகளைத் தின்ன நினைத்தான் அவன். சமையல் அறைக்குள் நுழைந்த அவன் தன் கையைச் சாடிக்குள் விட்டான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு முந்திரிப் பருப்புகளைத் தன் கை விரல்களால் அள்ளினான். கையை வெளியே எடுக்க முயன்றான். அவனால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தான். ஏதும் பயன் இல்லை. அழத் தொடங்கினான் அவன். அழுகைக் குரல் கேட்டு அவன் தாய் அங்கு வந்தாள். ‘என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டாள். ‘அம்மா! இந்தச் சாடியிலிருந்து என் கையை வெளியே எடுக்க முடியவில்லை’ என்றான் அவன். மகனே! உன் கையில் உள்ள முந்திரிப் பருப்புகளில் சிலவற்றை சாடிக்குள் போட்டுவிடு. பிறகு கையை எடு. வெளியே வரும்’ என்றாள். அப்படியே செய்தான் அவன். கை வெளியே வந்தது. ‘மகனே! பேராசை கொள்ளாதே. எதற்கும் அதிக ஆசை வைக்காதே. இன்று உனக்கு நல்ல பாடம் கிடைத்தது’ என்றாள் அவள். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |