|
||
மத்திய மாகாண கைத்தொழில் கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டம்
மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கைத்தொழில் கிராமங்களில் நிலவும் குறைபாடுகளை நீக்கி அவற்றை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத் திட்டமொன்றினை இவ்வாண்டு நடைமுறைப்படுத்த உள்ளதாக மத்திய மாகாண சிறு கைத்தொழில்கள் மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜந்தா விக்கிரமரத்ன தெரிவித்தார். கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மாகாணத்தில் 18 கைத்தொழில் கிராமங்கள் அமைந்துள்ளதாகவும் அவற்றுள் குறைபாடுகள் நிலவும் கிராமங்களை இனம் கண்டு அவற்றை அபிவிருத்தி செய்து இக் கிராமங்களில் பல்வேறு வகை தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். மேற்படி கிராமங்களில் அவ்வப் பிரதேசங்களுக்கே உரித்தான மூலவளங்களைப் பிரயோகித்தும் மற்றும் உலோகங்களைப் பெற்று வேலைப்பாடுகள் நிறைந்த ஆபரண வகைகளைத் தயாரிப்பது போன்ற கைத்தொழில்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் தமது வாழ்க்கையை நடாத்தி வருவதோடு நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதிலும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எனவே இக் கிராமங்களை அபிவிருத்தி செய்வதனூடாக தொழில் முயற்சியாளர்களின் வருவாயையும் நாட்டுக்கான செலாவணியையும் மேலும் அதிகரிக்க முடியும் எனவும் பணிப்பாளர் தெரிவித்தார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |