ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் ஜகத் பெரேரா நேற்று பொலிஸில் சரணடைந்ததாக பொலிஸ்
தலைமையகம் கூறியது. சிலாபம் - கொழும்பு அதி சொகுசு பஸ் ஒன்றின் சாரதியையும்
நடத்துநர்கள் இருவரையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர் சந்தேகத்தின் பேரில்
தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் கூறினர். இந்த தாக்குதலை கண்டித்து கடந்த
ஞாயிற்றுக்கிழமை முதல் கொழும்பு – சிலாபம், சிலாபம் – புத்தளம், சிலாபம் – கல்பிட்டி
இடையிலான தனியார் பஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
தூர சேவை பஸ்கள் இடைவழியில் பயணிகளை ஏற்றுவதை ஆட்சேபித்து ஆரச்சிக்கட்டுவ பிரதேச
சபைத் தலைவர் தாக்குதல் நடத்தியதாக சிலாபம் பயணிகள் போக்குவரத்து சங்கம் கூறியது.
இதனை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக சங்க பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். தாக்குதலுடன்
தொடர்புடைய ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் கைதானதையடுத்து வேலை நிறுத்தத்தை
கைவிட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கூறியது. காயமடைந்த பஸ் ஊழியர்கள் மாரவில
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்துவதாகவும் 9 பேரை கைது செய்ய
விசாரணை நடத்துவதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியது.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஆரச்சிக்கட்டு பிரதேச சபைத் தலைவர் நவம்பர் 4 ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.