அமெரிக்க அதிரடிப் படையினர் தமது நாட்டுக்குள் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது
குறித்து லிபிய பிரதமர் அமெரிக்காவிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
லிபிய தலைநகர் திரிபோலியில் கடந்த சனிக்கிழமை அமெரிக்கப் படை மேற்கொண்ட தேடுதல்
வேட்டையில் அல் கொய்தா அமைப்பின் முன்னணி தலைவராக கருதப்படும் அனஸ் அல் லிபி என்பவரை
அமெரிக்க அதிரடிப்படை கடத்திச் சென்றது. இதுபற்றி அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்பு
கொண்டு விளக்கம் கோரப்பட்டிருப்பதாக லிபிய பிரதமர் அலி சைதன் அறிவித்துள்ளார்.
அனஸ் அல் லிபி 1998 ஆம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்காவில் அமெரிக்க தூதரகங்கள் மீது
நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்தவராவார்.
‘லிபியாவுக்குள் லிபிய பிரஜை மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை லிபிய அரசிடமே
இருக்கிறது. அது எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அது நிரூபிக்கப்படும் வரை
நிரபராதிதான்’ என்று லிபிய பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.