ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். தன் மகன்
மீது உயிரையே வைத்திருந்தான் அவன். இளைஞனான இளவரசன் வேட்டையாடுவதில் மிகுந்த
விருப்பம் கொண்டிருந்தான். காட்டிற்குச் சென்று கொடிய விலங்குகளை வேட்டையாடினான்.
தூங்கிக் கொண்டிருந்த அரசன் ‘சிங்கம் ஒன்று பாய்ந்து தன் மகனைக் கொல்வது’ போலக் கனவு
கண்டான். கனவில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அரசன் தன் மகன் வெளியே எங்கும்
செல்லக் கூடாது என்று கட்டளை இட்டான். வீரர்களைக் காவலுக்கும் வைத்தான்.
‘வெளியே எங்கும் செல்ல முடியவில்லையே’ என்று தவித்தான் இளவரசன். தான் இருந்த
மாளிகையைச் சுற்றி வந்தான். அங்கே கொடிய விலங்குகள் பல ஓவியமாக வரையப்பட்டு அழகான
கண்ணாடிச் சட்டத்தில் மாட்டப்பட்டு இருந்தன.
அங்கிருந்த சிங்கத்தின் ஓவியத்தைப் பார்த்த அவன் கோபம் கொண்டான். ‘கேடு கெட்ட
சிங்கமே! உன்னால் தானே நான் எங்கும் செல்ல முடியாமல் சிறைப்பட்டுக் கிடக்கிறேன்’
என்று கத்தியபடி அந்தப் படத்தை ஓங்கிக் குத்தினான். அவன் குத்திய வேகத்தில் கண்ணாடி
உடைந்தது. சட்டத்தில் இருந்த ஆணி ஒன்று அவன் கையில் பாய்ந்தது. ஏராளமான குருதி
வழிந்தது. ஆணியிலிருந்து துரு அவன் உடலில் நஞ்சாக மாறியது. சில நாட்களில் அவன்
இறந்து போனான்.